Monday, December 30, 2013

பிரேக்கப் தியரி

நமக்குள் இனி ஒத்து வராது என்று உணர்ந்து, இருவருமே சம்மதித்துப் பிரிவது தான் பிரேக்கப் ஆக முடியும். ஏதோ ஒருவருக்கு மட்டும் அந்த உணர்வு வந்து, இன்னொருவர் மீது அந்தப் பிரிவு திணிக்கப்படும் போதுதான் ஏகத்துக்கு வலி வரையப்படுகிறது. உறவுகளை இருக்கமாகப் பற்றுதல் கூட ஒரு விதச் சுதந்திர மறுப்பு என்பது முற்போக்குச் சிந்தனையின் ஒரு அங்கமாய், ஒரு பக்கம், எவ்வளவு தான் நியாயமாகப் பட்டாலும், அதற்குப் பிரிவு ஒன்றுதான் தீர்வாக முடியும் என்பதை ஏற்றுக்கொள்ள முடிவதில்லை. அதே நேரத்தில், பிரிவது என்பதில் ஒருவர் தீர்க்கமாக இருக்கும்பட்சத்தில், உருகுதலும், உயிர் விடுதலும் முட்டாள்தனம் என்பதில் எனக்கும் நூறு சதவிகித உடன்பாடே.

மனம் விட்டுப் பேசாததால் மட்டுமே விட்டு போன உறவுகள் இங்கு அதிகம் என்றிருக்க, நாம் ஏன் அதைச் செய்துப் பார்க்கக் கூடாது என்று யாருக்கும் தோன்றுவதுமில்லை, அப்படியே தோன்றினாலும், சம்மந்தப்பட்ட இருவரும் ஒரே நேரத்தில் தயாராய் இருப்பதுமில்லை.

என்ன செய்ய, பிக்கப்களுக்கும் எஸ்கேப்களுக்கும் நடுவில் மாட்டிக் கொண்டால், பாவம் இந்த காதல், பாடாய்ப் படத் தான் வேண்டும்.

Friday, December 27, 2013

ஆண் ஆதிக்கம் ஒரு அசிங்கம்!

இந்த சமூகம் இன்னும் ஆண் ஆதிக்கத்தில் தான் இயங்கி வருகிறது என்பதை நாம் எப்போதெல்லாம் மறக்கிறோமோ, அப்போதெல்லாம் ஒரு பாலியல் பலாத்காரச் செய்தி நம்மை துளைக்கிறது. இப்படிப்பட்டக் குற்றத்தில் ஈடுபடும் ஆண்களை திட்டும் போதுகூட, ‘இவனெல்லாம் நல்ல குடும்பத்துல பொறந்திருக்க மாட்டான்’ என்று மறைமுகமாக ஒரு பெண்ணையே குறை கூறும் அளவில் தான் இன்னும் இந்தச் சமூகம் தன்னை அடையாளப்படுத்திக் கொள்கிறது. பெண்களின் மீதான ஈர்ப்பு போல, இந்த ஆண் ஆதிக்க உணர்வும், ஆண்களின் மரபணுக்களில் ஊடுருவிவிட்ட ஒரு விஷயமாக மாறியிருக்கிறதோ என்ற அச்சம் வருகிறது.

நம் வீட்டில் உள்ள பெண்களை நாம் ஒழுங்காக நடத்தாத வரையில் நாட்டிலுள்ள பெண்களை நாடும் மரியாதையாய் நடத்தாது என்பதை ஒவ்வொரு ஆணும் உணரும் நாள் என்று வருமோ?

கொஞ்சம் உறைக்கும்படிச் சொல்வதானால், வீட்டில் இருக்கும் பெண்ணை ஒரு நாயை போல நாம் கடித்தால், நாளை தெருவில் இறங்கி நடக்கையில், வேறொரு சொறி நாய் அவளை கடிக்காது என்ற எந்த நிச்சயமும் இல்லை.

செய்தி: திருநள்ளாறில் தோழிக்காக காத்துக் கொண்டிருந்த ஒரு பெண்ணை பதினைந்து பேர், மொட்டை மாடி, சுடுகாடு என மூன்று வெவ்வேறு இடங்களில் வைத்து கூட்டு பாலியல் வன்புணர்வு செய்திருக்கிறார்கள்.

Monday, December 16, 2013

வியாபாரம் – பிச்சை – கடமை

சனிக்கிழமை கடற்கரைக்குச் சென்றிருந்த போது, ஒரு சிறுமி, ‘இந்த ஸ்டிக்கர் வாங்கிக்கோ கா.. பத்து ரூவா தான் கா.. ப்ளீஸ் கா..’ என்றதும், என் மனைவி, ஒரு ஸ்டிக்கர் அட்டையை வாங்கிக் கொண்டு பத்து ரூபாய் கொடுத்தாள். அந்தச் சிறுமி அப்படிப் போனதும், இன்னுமொரு சிறுமி வந்து, எதையோ நீட்டி வாங்கிக்கக் சொல்லி, ‘பத்து ரூவா தான் கா.. ப்ளீஸ் கா’ என்றாள். என்னவள், ‘இல்லம்மா வேண்டாம்’ என்று தவிர்க்க முயன்ற போது. ‘வாங்கலனாலும் பரவாயில்ல கா.. பத்து ரூவா வாச்சும் குடுக்கா’ என்றாள் அந்தச் சிறுமி.

ஒரு முறை, பைக்கில் பயணித்துக் கொண்டிருந்த என் நண்பனை ட்ராஃபிக் கான்ஸ்டபிள் ஒருவர் வழி மடக்கி, ‘லைசன்ஸ் காட்டு’ என்று சொல்லியிருக்கிறார். என் நண்பனும் எடுத்துக் காட்டியிருக்கிறார். வண்டி ஆர்.சி புக், இன்சூரன்ஸ் என அவர் கேட்க, அவற்றையும் காண்பித்திருக்கிறார். ‘எல்லாம் சரியா தான் இருக்கு, பாத்தா படிக்கிற பையன் மாதிரி வேற தெரியுற, அப்புறம் ஏன் பா இப்படி வேகமா போற, சரி சரி, ஒரு அம்பது ரூவா ஃபைன கட்டிட்டுப் போ’ என்று சொல்லி, கையில் அவ்வளவு பணமில்லை என்று சொன்ன என் நண்பனிடம், அவன் வாலட்டில் வைத்திருந்த முப்பது ரூபாயை வாங்கிக் கொண்ட பிறகுதான் விட்டிருக்கிறார் அந்த கடமை தவறாத அதிகாரி.

பை தி வே, நான் சொன்ன இந்த இரண்டு விஷயத்திற்கும் எந்த சம்மந்தமும் இல்லை.

Wednesday, December 11, 2013

பாரதி யாரு?

பெண்கள் மீது அதிக அக்கறை கொண்ட ஒரு நபருக்கு இன்று பிறந்தநாள். ஆங்கிலேயரின் ஆட்சிக் காலத்தில், அவர்கள் வீட்டுப் பெண்ணுக்கு ஏதாவது ஒன்றென்றாலும் துடிதுடித்துப் போவார் என்றால் பாருங்களேன்.

அட என்னப்பா முழிக்குறீங்க. நம்ம மதராஸபட்டணம் ஆர்யாவிற்கு தான் இன்று பிறந்தநாள்.
ஆமாம்… அது யாருப்பா பாரதியாரு??

பி.கு: இந்த பதிவின் நோக்கத்தைப் புரிந்துக்கொள்ளாது, யாரேனும் ‘ஹாப்பி பர்த் டே மை ஸ்வீட் ஜாமி’ என்று பின்னூட்டம் இட்டுவிடுவார்களோ என பயத்தில் பதறிப்போய் இந்த பின்குறிப்பை இணைக்கிறேன். இன்று மகாகவி பாரதியாரின் பிறந்தநாள்.

Tuesday, December 10, 2013

அஷ்டமி நவமி!

மு.கு: ஃபேஸ்புக்கில் யாரோ ஒரு புண்ணியவான் எழுதி பகிர்ந்திருந்ததை அப்படியே இங்கு பகிர்ந்திருக்கிறேன்.  எனக்கும் இந்த எழுத்துக்கும் எள்ளளவும் சம்மந்தம் இல்லை என்பதை தெளிவு படுத்திக் கொள்கிறேன்.

சென்ற வாரம் நான் என் சகோதரி வீட்டிற்கு சென்றிருந்தேன். அங்கு உணவருந்தி ஓய்வெடுத்த பின் அவர்கள் நீண்ட நாட்களாக ஒரு வீட்டுமனை வாங்க வேண்டும் எனக் கூறி வந்ததை நினைவுபடுத்தினேன். எனக்குத் தெரிந்த ஒருவர் நல்ல இடத்தில் ஒரு வீட்டுமனை இருப்பதாகவும் விலையும் சற்று சகாயமாகவுள்ளதாகவும் கூறினார். அதைப் போய் இன்று பார்த்துவிட்டு வரலாம் என்று கூறினேன். உடனே என் சகோதரி இன்று வேண்டாம் அண்ணே என்றாள். நான் ஏன்? இன்று விட்டால் மனை கிடைக்காமல் போகலாம் வேகமாக விற்று வருவதாகக் கேள்விப் பட்டேன். இன்று ஏன் வேண்டாம் என்கிறாய்? எனச் சகோதரியைக் கேட்டேன். அவர் இன்று அஷ்டமி, நாளை நவமி என்றாள்.ஆகையால் நாளை மறுநாள் போய் பார்க்கலாம் என்று சொன்னார். நான் அஷ்டமி, நவமி என்றால் என்ன? ஏன் கூடாது என்பதற்குக் காரணம் என்ன? என்று கேட்டேன். அதற்கு என் சகோதரி எனக்கு விளக்கம் தெரியாது அண்ணே, ஆனால் எல்லோரும் அவை நல்ல நாட்கள் இல்லை என்பதால் நானும் கூறினேன் என்று கூறினார். நான் சிரித்துக் கொண்டே அஷ்டமி, நவமியில் நீங்கள் சாப்பிடுவதில்லையா? ரயில், பஸ், விமானம் ஆகியவை ஓடுவதில்லையா? மருத்துவமனை, வங்கிகள் மற்றும் அலுவலகங்கள் செயல்படுவதில்லையா? அவசர அறுவை சிகிச்சையைத் தவிர்க்கிறோமா? என்று கேட்டேன். அதற்கு என் சகோதரி போங்க அண்ணா நீங்க எப்போதும் இப்படித் தான் எடக்கு முடக்காகப் பேசுவீர்கள் என்று கேலி செய்தார். நான் இல்லையம்மா இதற்கு விளக்கம் கூறுகிறேன். நாம் ஓரளவு படித்தவர்கள் எதையும் அறிவுப்பூர்வமாக சிந்தித்துத் தெரிந்து கொள்ள வேண்டாமா? என்று கேட்டேன். மைத்துனரும், என் சகோதரியும் நீங்கள்தான் விளக்குங்களேன் என்றார்கள். நான் பின்வரும் விளக்கத்தைக் கூறினேன்.

ஒரு மாதத்திற்கு அமாவாசை, ஒரு பவுர்ணமி வரும். அந்த இரு நிகழ்ச்சிகளும் பூமி மற்றும் சந்திரனின் சுழற்சியால் ஏற்படுவதை நீங்கள் அறிவீர்கள். நாட்களைச் சுட்டிக்காட்ட அமாவாசையிலிருந்து அல்லது பவுர்ணமியிலிருந்து எத்தனையாவது நாள் என்று குறிப்பிட்டுக் காட்டவே பிரதமை முதல் சதுர்த்தசி வரை 14 நாட்களுக்கும் பெயரிட்டிருக்கிறார்கள். பெயர் தமிழில் வைத்திருந்தால் விளங்கும். சமஸ்கிருதம் ஆதிக்கத்தில் இருந்தபோது தமிழ் வருடங்களின் பெயரை கூட பொருள் தெரியாத வடமொழியில் அல்லவா வைத்து விட்டார்கள்? நாமும் அதை மாற்ற மனமின்றி வைத்துக் கொண்டு திண்டாடுகிறோம். அதே போல் தான் நாட்களின் பெயர்களும் பின்வருமாறு வடமொழியில் உள்ளன என்று விளக்கினேன்.

1. பவுர்ணமி, அமாவசைக்கு அடுத்த நாள் பிரதமை பிரதமர் என்றால் முதல்வர் என்று பொருள். அதுபோல் பிரதமை என்றால் முதல் நாள். 2. துவிதை என்றால் இரண்டாம் நாள் தோ என்றால் இரண்டு. துவிச் சகர வண்டி என்று சைக்கிளைக் கூறுவது தங்களுக்கு தெரியும். 3. திரிதியை என்றால் மூன்றாம் நாள் திரி என்றால் மூன்று அல்லவா? 4. சதுர்த்தி என்றால் நான்காம் நாள் சதுரம் நான்கு பக்கங்கள் கொண்டது. 5. பஞ்சமி என்றால் அய்ந்தாம் நாள் பாஞ்ச் என்றால் அய்ந்து எனப் பொருள். 6. சஷ்டி என்றால் ஆறாம் நாள். 7. சப்தமி என்றால் ஏழாம் நாள். சப்த ஸ்வரங்கள் என ஏழு ஸ்வரங்களைக் கூறுவதில்லையா? 8. அஷ்டமி என்றால் எட்டாம் நாள். அஷ்டவக்கிரம் என்று எட்டு கோணல்களைக் கூறுவதையும் அஷ்ட லட்சுமி என்றெல்லாம் கூறக் கேட்டிருக்கிறோம். 9. நவமி என்றால் ஒன்பதாம் நாள் நவ என்றால் ஒன்பது என்றும் நவ கிரகங்கள் என்பதும் தங்களுக்குத் தெரியும். 10. தசமி என்றால் பத்தாம் நாள் தஸ் என்றால் பத்து அல்லவா? தாரம் என்ற கடவுளின் அவதாரங்களைக் கூறக் கேட்டிருக்கிறோம். 11. ஏகாதசி என்றால் பதினொன் றாம் நாள் ஏக் என்றால் ஒன்று தஸ் என்றால் பத்து இரண்டின் கூட்டுத் தொகை பதினொன்று. 12. துவாதசி என்றால் பன்னிரண்டாம் நாள் தோ/துவி என்றால் இரண்டு தஸ் என்றால் பத்து எனவே இதன் கூட்டுத்தொகை பன்னிரண்டு ஆகும். 13. திரியோதசி என்றால் பதிமூன் றாம் நாள் திரி என்றால் மூன்று + தஸ் என்றால் பத்து ஆகப் பதிமூன்று. 14. சதுர்த்தசி என்றால் பதினான்காம் நாள் சதுர் (சதுரம்) என்றால் நான்கு அத்தோடு தஸ் என்ற பத்து சேர்த்தால் பதினான்கு என ஆகும். சதுர்த்தசிக்கும் அடுத்தது பவுர்ணமி அல்லது அமாவாசை ஆகி விடும்.

இப்படி நாட்களைக் சுட்டிக் காட்ட வைத்த பெயர்களில் என்ன வேறுபாடு இருக்கிறது? அமாவாசை அல்லது பவுர்ணமிக்குப் பிறகு வரும் எட்டாம் நாளும் ஒன்பதாம் நாளும் கெட்டவை என்பதற்கு ஏதேனும் அறிவியல் பூர்வமான விளக்கம் இருந்தால் கூறுங்கள். என் சகோதரியும் மைத்துனரும் வாயடைத்துப் போயினர். இந்த விளக்கம் கண்டு அவர்கள் மிகத் தெளிவு பெற்றனர். நான் மேலும் கூறினேன்.

அட்சய திரிதியையில் தங்கம் வாங்க அறியாத மக்கள் தங்கக் கடைக்கு ஓடுவதும் அறியாமையே என்றேன். என் சகோதரி மிகவும் ஆர்வமாக இதற்கும் விளக்கம் கூறுங்கள் அண்ணா என்று கேட்டுக் கொண்டாள். க்ஷயம் என்றால் தேய்வு (-க்ஷயரோகம் = எலும்புருக்கு நோய் அக்ஷயம் என்றால் வளர்ச்சி அதாவது வளர்பிறையில் அமாவாசையிலிருந்து மூன்றாம் நாள் திரிதியை என்று ஏற்கெனவே விளக்கிக் கொண்டோம். அதாவது வளர்பிறையில் மூன்றாம் நாள் இதில் என்ன சிறப்பு இருக்க முடியும்? இது தங்க வியாபாரிகள் சேர்ந்து செய்த விற்பனை உத்தியே ஆகும் என்று விளக்கம் கூறினேன். மக்கள் எப்படி அறியாமையில் மூழ்கிப் போயிருக்கிறார்கள் என்று அனைவரும் பரிதாபப்பட்டோம். பிறகு அன்றே மூவரும் சென்று வீட்டு மனையைப் பார்வையிட்டு இடம் பிடித்திருந்ததால் முன் பணம் செலுத்தி பத்திர நகல்களை வாங்கி வந்தோம். அஷ்டமி, நவமி பார்த்துத் தாமதம் செய்திருந்தால் இந்த வாய்ப்பு கிட்டுமா என்று மகிழ்ந்தோம். “செய்யும் வேலைகளின் வெற்றி தன்னை நம்பி இல்லை, கடவுளை நம்பித்தான் இருக்கிறது“ என்று நினைத்து உருவாக்கப்பட்ட “நல்ல நேரம்,கெட்ட நேரம்“ என்ற பயங்கள் உலகெங்கும் மனிதனை ஆட்டிப்படைக்கின்றன.(நம் நாட்டில் கொஞ்சம் அதிகம்) இந்திய அளவில் உள்ள பஞ்சாங்கங்களின்படி ஒரு மாதத்திற்கு எவ்வளவு கெட்ட நேரம் வருகிறது என்று கணக்கிட்டுப்பார்ப்போம். வாரத்தில் செவ்வாய்,சனி நல்ல காரியம் துவங்கக்கூடாது(10 நாட்கள்). மாதத்தின் அஷ்டமி,நவமி நன்மைக்கு உகந்தது அல்ல(4நாட்கள்). பாட்டிமுகம் நாளில் நல்லது செய்வது நல்லதில்லை(2 நாட்கள்). ஒரு மாதத்தில் வரும் ராகு காலம், எமகண்டம்,குளிகை இவற்றின் கூட்டுத்தொகை (3 முக்கால்) தவிர கௌரி பஞ்சாங்கத்தின் படி நன்மை செய்ய தகாத நாட்கள் 2 நாட்கள். ஆக மொத்தத்தில் ஒரு மாதத்தில் 21 முக்கால் நாட்கள் நாம் நல்லது செய்ய பயந்தால் எப்படி உருப்பட…எப்படி முன்னேற…? என்று தணியும் நம் மக்களிடம் நிரம்பியுள்ள அறியாமையின் மோகம்?

Friday, December 6, 2013

நெல்சன் மண்டேலா

கல் உடைக்கனும்,
கண்ட வெள்ளைத்தோல் வாய்களின்
ஏச்சு சகிக்கனும்!

உடை மறக்கனும்,
உட்காரக்கூட முடியா இடத்தில்
நீட்டிப் படுக்கனும்!

உதை பொறுக்கனும்,
ரத்தம் கித்தம் சிந்தினாலும்
உடல் பிழைக்கனும்!

குரல் எழுப்பனும்,
பற்கள் உடை பட்டாலுமே
நாவு துடிக்கனும்!

இனம் உயரனும்,
குனிந்து குனிந்தே பழகிவிட்ட
தலை நிமிரனும்!

சுயம் ஒதுக்கனும்,
மண் தந்த மக்களுக்கென்றே
உயிர் எழுதனும்!

செய்தனன் யாவும் ஏன்
பெய்தன யாவுமே!

உன் புகழ் சொல்லியே
பெயர் புவிதனை ஆளுமே!

பி.கு: நெல்சன் மண்டேலா அவர்களின் இருப்பத்தேழு வருட சிறை வாழ்க்கையை வியந்ததில் தாமாய் வந்து விழுந்த வார்த்தைகளை கொஞ்சம் ஒழுங்கிப்படுத்தி வைத்திருக்கிறேன்.  மாபெரும் தலைவரின் நிகரில்லாத் தியாகத்திற்கு ஏதோ என்னால் இயன்றதொரு சிறிய அர்ப்பணிப்பு.

Thursday, December 5, 2013

உனக்கானது மழை!

நீர் ஆவியாகிறது!
நீராவி மேலெழுகிறது!
திரவமாக்குதல் அதனை துளிகளாக்க
அத்துளிகள் சேர்ந்து மேகமாகிறது!
ஒரு கட்டத்தில்,
புவியீர்ப்புக்கு இணங்கிடும் தன் எடையால்,
அத்துளிமூட்டை அவிழ நேர்கிறது!

மழையை விளக்கிக் கொண்டிருந்த அறிவியலுக்கு,
தெரிந்ததெல்லாம் இவ்வளவுதான்!
மிச்சத்தை சொல்லத் தொடங்கியது
காதலியல்!

அதுவரையில்..
ஒரு ஆறாக ஓடிக்கொண்டிருந்த,
ஒரு குளமாக தேங்கிப்போயிருந்த,
ஒரு கிணறாக புதைந்துக்கிடந்த,
நீருக்கு..

உன் உச்சந்தலையில் தொடங்கி,
வகுடு வழி பயணித்து,
நெற்றிக் குங்குமத்தின் மஞ்சல் வாசம் முகர்ந்ததும்,
புருவ எல்லை கடக்கும் முன்னரே
ஒரு சிலிர்ப்பு ஏற்பட்டு விடுகிறது!

மூக்கின் மீதான ஒற்றையடி பாதையில்,
வேண்டுமென்றே அடி பிறளத்துடிக்கும்
துளிகள் சிலவற்றிற்கு,
உன் விழிகளுள் விழுந்து மரிக்கத்தான்
ஆசை ஒன்றும் முளைக்கிறது!

இளஞ்சிவப்பில் குளித்திருக்கும்
உன் இதழ்களை வருடிவிட்டு,
தாடை நுனியில்
சொட்டும் நொடியில்
‘மறுவாழ்வு இது’ என்று புரிகிறது!

தோள்களில் வழுக்கிய
உந்தன் மார்வழி பிரயாணம்,
பூர்வ ஜென்மத்துப் பலனொன்றை
அதி ரகசியமாய் திருடி,
நீருக்கே தெரியாமல் நீருக்குள் கலக்கிறது!

தேகம் முழுக்க ஓடிக் களைத்தும்,
தொப்புள் குளமாய் தேங்கித் தவித்தும்,
கணுக்கால் இறங்குகையிலே
இறந்துவிடத் துடிக்கும்
மொத்தத் துளிகளின்
மறுஜென்மம் தான் இந்த மழை!

தேவதையே,
உனக்கானது மழை!

Tuesday, December 3, 2013

மெய்யுணர்தல் 5

நண்பர்களின் பிறந்தநாளுக்கு அவர்களை ஃபோனில் அழைத்து ‘ஹாப்பி பர்த் டே’ எனச் சொல்லிவிட்டு, அதன் பிறகும், ‘இன்னைக்கு என்ன ஸ்பெஷல்’, ‘கோயிலுக்கு போகலயா’, ‘டின்னருக்கு என்ன பிளான்’ என அந்நாளின் கொண்டாட்டங்கள் சுற்றியே பல மணி நேரங்கள் பேச முடியும்போது, அப்பா அம்மாவின் பிறந்தநாளுக்கு மட்டும் ஃபோன் செய்த கையோடு, ஒரு ஹாப்பி பர்த் டே சொல்லி முடித்தும் முடிக்காகததுமாய், “அப்புறம்..” என்று ஒரு நாட்டு நடப்புக்கோ, அன்றைய சமையல் கதைக்கோ உடன் தாவி விடுகிற அளவில் தான் நாம் நம் எதார்த்தத்தை நிரூபிக்க முயல்கிறோம்.

நெருங்கிய நண்பன், நெருங்கிய தோழி என சொல்வதில் இல்லாத ஒரு கூச்சம், நமது இரத்தச் சொந்தங்களுடனான நம் நெருக்கத்தை விவரிக்க முயற்சிக்கையில், கண்கள் எட்டாதத் தூரத்திலிருந்து ஓடி வந்து நம் மீது சட்டென்று ஏறிக் கொள்கிறது.

பி.கு: இவையெல்லாம் உணராமல் சொல்லப்படாத காதல்களுக்கு இன்றளவும் நாம் ‘இதயம்’ முரளியை கலாய்த்துக் கொண்டிருக்கிறோம்.

Thursday, November 28, 2013

ஐ.டி வேலை

ஐந்து வருடத்திற்கு முன்பு அந்தக் கேள்வியை நம்மிடம் கேட்டவர்கள் எல்லாம் இப்போது நாம் ஐ.டியில் கைநிறைய சம்பளம் (சிலருக்கு வாய் நிறைய வருமே.. புரிகிறது..) வாங்குவதைப் பார்த்து அமைதியாகிவிட்டார்கள். ஆனால் தற்போது அந்தக் கேள்வியை, டாலர்களுக்காக அடையாளங்களை தொலைத்து நிற்கும் நாமே நம்மிடம் கேட்டுக்கொள்ள வேண்டியிருக்கிறது. அது என்ன கேள்வி என்று யோசிக்கிறீர்கள்தானே. கேள்வியை தெரிந்துக் கொண்டால் இன்னும் ரொம்பவே யோசிக்க வேண்டியிருக்கும். பரவாயில்லையா??
.

.
.
.
.

“நீயெல்லாம் எப்போதான் உருப்படப் போறியோ?”

Wednesday, November 27, 2013

விவாகம் + ரத்து + ஏன்?

முன்பை விட அதிக எண்ணிக்கையிலான காதல் திருமணங்கள் விவாகரத்தில் (பெரும்பாலானவை ஓரிரு வருடங்களுக்குள்ளாகவே) முடிவதாக ஒரு பதிவில் படித்தேன். காதலுக்கு இது சோகமான விஷயம் தான். காதலிக்கும் போது கல்யாணம் செய்துகொள்ளத் தோன்றும் பலருக்கு, கல்யாணம் செய்து கொண்ட பிறகு காதலிக்கத் தோன்றுவதில்லையோ என்ற சந்தேகம் தான் வருகிறது.

இந்த உலகில் பிரிந்த நண்பர்கள் சேர்ந்துக்கொள்ளும் அளவிற்கு பிரிந்த காதலர்களோ தம்பதிகளோ சேருவதில்லை. வாழ்க்கைத் துணையும் நாமும் நல்ல நண்பர்களாய் இருத்தல் எவ்வளவு முக்கியம் என்பதை உணர்த்த இதைவிட ஒரு பெரிய புள்ளி விவரம் தேவையென்று தோன்றவில்லை.

Tuesday, November 26, 2013

நவம்பர் 26

முன்பின் பழக்கமில்லாத ஒரு நபரை காப்பாற்ற,
முன்பின் பழக்கமில்லாத ஒரு பெரும் வலியை,
முன்பின் பழக்கமில்லாத ஒரு கரும் இருளை,
முன்பின் பழக்கமில்லாத ஒரு கலையாத் தூக்கத்தை,
முன்பின் பழக்கமில்லாத ஒரு கொடிய பிரிவை,
முன்பின் பழக்கமில்லா,
முகமளவில் கூடப் பரிட்சயமில்லாத
ஏதோவொரு நபரின் கைகளில் இயங்கும்
ஏகே47 துப்பும் குண்டுகளிடம்,
வரமாய் பெற்றிட,
நம்மில் யாரேனும் தயாராய் இருக்கிறோமா?

26/11 மும்பை தாக்குதல் பற்றிய இரத்தக்கறை அகலா நினைவுகள் என்னை துருவித் துருவிக் கேட்பது இந்த கேள்வியைத் தான்.

Thursday, November 21, 2013

பெங்களூரு ஏடிஎம் தாக்குதல்

#1
பெங்களூரில் ஏடிஎம் அறையில் பெண் தாக்கப்பட்ட சிசிடிவி பதிவினை இப்பொழுதுதான் பார்த்தேன். அந்த பெண்மனி தற்போது கோமாவில் கிடக்கிறாள் என்ற செய்தியைவிட கொஞ்சமும் மனுஷத்தன்மை காட்டாத அந்த காட்டுமிராண்டி இன்னும் எங்கோ சுதந்திரமாய் சுற்றித் திரிந்துக் கொண்டிருக்கிறான் என்பதுதான் அதிகமாய் பாதிக்கிறது.

#2
ஒவ்வொரு ஏடிஎமுக்கும் ஒரு செக்யூரிட்டி கட்டாயம் என அறிவித்து அனைத்து வங்கிகளுக்கும் மூன்று நாள் கெடு விதிக்கப்பட்டிருப்பதாக தெரிகிறது. எல்லாம் சரி. அவர்கள் நியமிக்கும் அந்த நபர் நாற்பது ஐம்பது வயது கடந்தவராக இல்லாமல், இத்தகைய காட்டுமிராண்டிகளை கையாளத் தக்கவராக இருப்பின் சந்தோஷமே.

#3
பெங்களூரு ஏடிஎம் தாக்குதல் விவகாரத்தில் தேடப்பட்டு வரும் அந்த நபர் பற்றி தகவல் கொடுப்பவர்க்கு ஒரு லட்ச ரூபாய் சன்மானமாக வழங்கப்படும் என அறிவித்திருக்கிறது காவல்துறை. இப்பொழுது யாராவது அந்த நபரை பிடிக்க உதவி, அந்த ஒரு லட்ச ரூபாய் பெற்று, தாக்கப்பட்ட அந்த பெண்மணியின் மருத்துவ செலவுக்கே கொடுத்தால், அது மனித நேயம்.

Tuesday, November 19, 2013

காதலும்.. பெண்மையும்..

அடியே கள்ளி..

என் மீதான
ஆசைகளை எல்லாம்
கண்களால் பேசிவிட்டு,
கோபங்களை மட்டும்
ஏனோ
உதட்டால் பேசிவிடுகிறாய்!

கேட்டால்..
இதில் தான்
பெண்மை வாழ்வதாகச் சொல்கிறாய்!

எங்கே,
இன்றொரு நாள் மட்டும்..

உனது ஆசைகளை
உதடுகளால் பேசிவிட்டு,
கோபங்கள் இருப்பின்
அதை உன்
கண்களால் பேசிப் பாரேன்!

பார்க்கிறேன் நானும்..
எதில் பெண்மை அதிகமென்று!!

Friday, November 15, 2013

சச்சின்ன்ன்ன்…. சச்சின்!! - 2

கிரிக்கெட் எனக்குக் கொஞ்சமும் பழகிறாத நாட்கள் அவை. பக்கத்து வீட்டில் நம்மை விட பெரிய பையன் ஒருவன் இருந்து அவன் செய்வதையெல்லாம் நம் வயதையும் மீறி நாம் எப்படி செய்ய முயற்சிப்போமோ, உதாரணத்துக்கு, அவன் தன் முழுக்கைச் சட்டையை மடித்துவிட்டுக் கொள்ள நாமும் மடித்துவிட்டுத் திரிய முயற்சிப்போம், நாம் அணிந்திருப்பது அரைக்கை சட்டையாக இருக்கும் என்பது வேறு விஷயம், அப்படித்தான் அந்நாட்களில் என் சுற்றத்தின் நடுவில் மிகப் பிரபலமாகியிருந்த கிரிக்கெட்டை தொடர முயன்றேன். அந்த ஆரம்ப நாட்களில் எனக்கு தெரிந்த மிகப்பெரிய கிரிக்கெட் ரகசியங்கள் இரண்டு. ஒன்று பேட். மற்றொன்று பால். அதன் பிறகு கொஞ்சம் தேறி ஃபோர், சிக்ஸ், வைட் பற்றி தெரிந்து கொண்டேன். அப்போதும் நோ பால் சற்று குழப்பம் தருவதாகவே படும். அதையும் சிறிது நாட்களில் புரிந்துக் கொண்டேன்.

குழந்தைகளை கடைக்கு அழைத்துச் செல்கையில், அங்கு இருக்கும் சில மிட்டாய்களைச் சுட்டிக் காட்டி, அது வேணும் என்று கேட்பார்கள். எனக்கு ரொம்ப பிடிக்கும் எனச் சொல்வார்கள். உண்மையில் அதை அதுவரை கண்ணால் பார்த்திருக்கக் கூட மாட்டார்கள். ஆனாலும் அவர்களுக்குப் பிடிக்கும் என்பதில் அவ்வளவு நேர்மையாக தங்களைக் காட்டிக் கொள்வார்கள். அப்படிக் காட்டிக் கொள்வதில் உண்மையில் கொஞ்சம் உண்மையும் இருக்கும். பிடித்திருக்கிறது என்பது தான் அந்த நேர்மையான உண்மை. அப்படி கிரிக்கெட்டில் எனக்குப் பிடித்த வீரர் சச்சின்.

1998-இன் ஒரு ஏப்ரல் இரவு அது. பத்து மணியை கடந்த நிமிடங்களில் எனக்குத் தூக்கம் சொக்கிக் கொண்டிருந்தது. கூடத்தில் இருந்த தொலைக்காட்சிப் பெட்டி முன்பு என் அப்பாவும் இரண்டு சித்தப்பாக்களும் ஏறத்தாழ சிலைகள் போல அசைவற்றுக் கிடந்தார்கள். அப்பாவை, ‘தூங்க வா’ என எங்கே நச்சரிக்கத் தொடங்கிவிடுவேனோ என்ற எச்சரிக்கையில், எனது பலவீனம் அறிந்து, உனக்குப் பிடிச்ச சச்சின் ஆடுறான் பாரு என்று சொன்னார்கள். சச்சின் என்று சொல்லிவிட்டார்களே, அப்புறம் என்ன சொல்லுவது, நானும் தூக்கத்தைக் கட்டுபடுத்திக் கொண்டு உட்கார்ந்திருந்தேன்.

டக்வர்த் லூயிஸ் விதி, நெட் ரன் ரேட் என எனக்குக் கொஞ்சமும் விளங்காத விஷயங்களை என் அப்பாவும் சித்தப்பாவும் பேசிக் கொண்டிருந்தார்கள். நிர்ணயிக்கப்பட்டிருந்த இலக்கை நோக்கி ஆடிக் கொண்டிருந்த இந்தியா சில விக்கெட்களை இழந்து தடுமாறிக் கொண்டிருந்தது என்பது அவர்கள் பேசிக் கொண்டிருந்ததை வைத்து என்னால் அப்போதே புரிந்துக் கொள்ள முடிந்தது. சச்சின் மீது மொத்த நம்பிக்கையையும் வைத்து மொத்த இந்தியாவும் விழித்திருந்த இரவுகளில் அதுவும் ஒன்று. என் அப்பா சித்தப்பாவும் அப்படித்தான் சிலையாகி இருந்திருக்க வேண்டும்.

“இந்த மேட்ச் தோத்துட்டா நம்ம ஃபைனல் போக முடியாதா?” என் அப்பா.

“அப்படி சொல்ல முடியாது. தோத்தாலும் நெட் ரன் ரேட் நல்லா இருந்தா நியூசிலாந்த ஓரங்கட்டிட்டு நம்ம ஃபைனல் போயிடலாம்”, இது என் சித்தப்பா.

“ஓ!”, என் அப்பா.

“ஓ ஹோ!”, இது நான்.

ஆங்கிலம் அவ்வளவாய் படிக்கத் தெரியாதவர்கள் நாளிதழ்களில் உள்ள எழுத்துக்களை நிராகரித்துவிட்டு படங்களை வேடிக்கை பார்ப்பது போல நான் அவர்கள் பேசிக் கொண்டிருந்ததையெல்லாம் மொத்தமாய் நிராகரித்துவிட்டு சச்சினை மட்டும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன். ஒரு கட்டத்திற்கு மேல், தூக்கத்தை கட்டுப்படுத்த முடியாமல் என் அப்பா மடியில் தலை வைத்து உறங்கியிருந்தேன். இடையிடையே சச்சின் விளாசிய ஃபோர், சிக்ஸர்களுக்கு என் சித்தப்பா ஆர்ப்பரித்ததில் தூக்கம் பூசப்பட்டிருந்த கண்கள் திறந்து பார்த்த ஞாபகம் கொஞ்சமாய் இருக்கிறது. மற்றபடி வேறெதுவும் நினைவில் இல்லை.

அடுத்த நாள் காலை எழுந்த போது, இந்தியா ஃபைனலில் நுழைந்துவிட்டதென அப்பா சொன்னார். “சச்சின்?” என்றேன். “சென்ட்சுரி!” என்றார். எனக்கு சச்சினை மேலும் சில மடங்குகள் அதிகம் பிடிக்கத் தொடங்கியது. நான் தூங்கியதில் பார்க்கத் தவர விட்ட சச்சினின் அந்த மேஜிக்கல் இன்னிங்க்ஸை அதன் பிறகு பலநூறு தடவை மறு ஒளிபரப்பாகவும், யூ ட்யூபிலும் பார்த்தாகி விட்டது. இன்று பார்த்தாலும் உடல் புல்லரித்துப் போகச் செய்யும்.

1998-இல் இந்தியா-ஆஸ்திரேலியா-நியூசிலாந்து நாடுகளுக்கு இடையில் நடைபெற்ற முத்தரப்பு ஒரு நாள் தொடர், கோகோ கோலா கப்-இன் கடைசி லீக் ஆட்டம் அது. முதலில் ஆடிய ஆஸ்திரேலியா ஐம்பது ஓவர்களில் 284 குவித்தது. பின்னர் டக்வொர்த் லூயில் விதிப்படி வெற்றி இலக்கான 277-ஐ 46 ஓவர்களில் எடுக்க வேண்டும் என்று நிர்ணயிக்கப்பட்டது. மற்ற வீரர்கள் ஒரு பக்கம் சொர்ப்ப ரன்களில் பெவிலியன் திரும்பிக் கொண்டிருக்க, ஆஸ்திரேலிய பத்துவீச்சை துவம்சம் செய்து சச்சின் அசுரத்தனமாக விளையாடி 143 ரன்கள் குவித்து ஆட்டமிழப்பார். 46 ஓவர்களின் இறுதியில் இந்தியா 250 ரன்கள் மட்டுமே எடுத்து 26 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வியைத் தழுவும். ஆனால்.. அந்த தோல்விக்கு முன், இந்தியா ஃபைனலில் நுழைய என்ன தேவையோ அதை சிறப்பாக செய்து முடித்திருப்பார் அந்த கிரிக்கெட் கடவுள்.

ஆம்.. சாகப் போகிறவர்களை சாவிலிருந்து காப்பாற்றுபவர் கடவுள் எனில், எங்கள் சச்சினும் கடவுள் தான்.

Thursday, November 14, 2013

சச்சின்ன்ன்ன்…. சச்சின்!!

இன்று காலை 7.30 மணி தொடங்கி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சானலே கதி என்று அமர்ந்திருந்தேன். சச்சின் பற்றி நிறைய பேசினார்கள். கவாஸ்கர், சித்து, அக்ரம், கங்குலி, டிராவிட், லக்ஷ்மன் என முன்னால் வீரர்கள் பலரும் தங்கள் கருத்துக்களை தெரிவித்துக் கொண்டிருந்தார்கள். இடையிடையே பயிற்ச்சியில் ஈடுபட்டிருந்த சச்சினை காட்டினார்கள். பத்து வருடத்திற்கு முன் இதே போன்றதொரு நிகழ்ச்சியில் நான் பார்த்து ஆச்சர்யப்பட்ட அதே சச்சினை இன்றும் அதைவிட பெரிய ஆச்சர்யத்துடன் பார்க்க முடிகிறது என்பதே எல்லா பெரிய ஆச்சர்யங்களைக் காட்டிலும் மிகப் பெரிய ஆச்சர்யமாக இருந்தது.

நான் தனியாய் அமர்ந்திருந்த கூடத்தில் என்னை சுற்றிலும் வட்டமடித்துக் கொண்டிருந்த மௌன உதடுகள் என்னுடன் ஏதோ பேச முயற்சித்துக் கொண்டிருந்தன. நான் அவற்றை கண்டு கொள்ளவேயில்லை. என் நிராகரிப்பை மீறியும் என் செவியினை தொட முயன்ற சில மௌனங்களை மட்டும் எனது மௌனத்தின் கைகளால் கழுத்தை நெறித்து பேச விடாமல் தடுத்துக் கொண்டிருந்தேன். ‘தெரியும் தானே உனக்கு, உன் சச்சின் விளையாடப் போகும் கடைசி சர்வதேச போட்டி இது தான்’ என எனக்கு அவை தரும் நினைவுகளைச் சுமந்து என்னால் நிம்மதியாக நடமாட முடியாது என்பது தெரியும். இன்னும் சிறிது நேரத்தில் நான் அலுவலகம் செல்ல வேண்டும் என்ற கட்டாயம் வேறு. நான் அவைகளை பேச விடுவதில்லை என்பதில் உறுதியாகவே இருந்தேன். இறுக்கத்தில் ஒரு சில மௌனங்கள் இறந்தும் போயிருந்தன, ஆனால் அவைகளுக்காக சிந்த என்னிடம் வேறு கண்ணீர் இல்லை. நான் அமைதியாக சச்சினை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தேன்.

மூன்று பேட்களோடு ஒரு சிறுவனுக்குரிய துள்ளலுடன் படியில் இறங்கி வந்ததில் தொடங்கி, பயிற்சியாளர் டங்கன் ஃபிளட்சருடனான உரையாடல் போதும், நேரே சென்று பிட்சை ஒரு முறை ஆராய்ந்தறிந்த போதும், சக வீரர்களுடனான ஹடிலின் போதும், கை கால்களை நீட்டி சில ஸ்ட்ரெட்ச்கள் செய்த போதும், பயிற்சியின் ஒரு பங்காய் ஒரு சில பந்துகளை எதிர்கொண்ட போதும், என்னால் திரும்பத் திரும்பப் புரிந்துக் கொள்ள முடிந்தது ஒரே ஒரு விஷயம் மட்டும் தான். சச்சின் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றாலும், சச்சினுக்குள் இருக்கும் கிரிக்கெட் என்றுமே ஓய்வு பெறப் போவதில்லை.

பி.கு: அடுத்தச் சில நாட்களுக்கு நான் எழுதப்போவது வெறும் சச்சினைப் பற்றி மட்டும் தான் இருக்கும். படிக்க விருப்பமில்லாதவர்கள், சச்சின் பெயர் கேட்டால் கடுப்பாவபர்கள், இதெல்லாம் ரொம்ப ஓவர்யா னு நினைப்பவர்கள் மற்றும் இன்ன பிற சச்சின் எதிர்பாளர்கள் என யாராவது இருப்பின், தயவு செய்து இந்தப் பக்கம் வந்து விடாதீர்கள் என்று ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ படக் கிளைமாக்ஸில் சந்தானம் கேட்டுக் கொள்வது போல மிகவும் ‘தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்’. :)

Wednesday, November 13, 2013

மனிதம் நேசிக்கிறோமா?

எதில் மனநிறைவு அடைகிறோமோ இல்லையோ, நாம் நமது சுற்றம் வரை நலமாக இருந்தால் போதும் என்பதில் மட்டும் சுலபத்தில் மனநிறைவு அடைந்துவிடுகிறோம். இவ்வுலகின் ஒவ்வொரு உயிரைப் பேணிக் காப்பதிலும் நம் ஒவ்வொருக்கும் பொறுப்பிருக்கிறது என்பதை என்றைக்காவது உணர்ந்து செயல் பட்டிருக்கிறோமா என்று யோசித்துப் பார்த்தால் இல்லை.

சாலையில் விரைந்து கொண்டிருப்போம், நம் கண் முன் ஒரு விபத்து நிகழும், நாமும் வாகனத்தை நிறுத்துவோம், உதவ என்று நினைத்துவிட வேண்டாம், நமக்கு வேடிக்கை பார்ப்பது அதைவிட மிக முக்கியமாச்சே.

இரவு அலுவலகம் விடுத்து பேருந்து நிறுத்தத்திலிருந்து வீட்டை நோக்கி நடந்து கொண்டிருப்போம், சாலையோரம் ஒரு குடிமகன் உடை கலைந்து கிடப்பான், உற்றுப் பார்த்துவிட்டு ச்சீ என்று நடையைக் கட்டுவோம். எவன் கோவனம் காத்துல பறந்தா நமக்கென்ன.

நீரு என்ன கிழிச்சீரு னு என் மேல யாரும் எகிற வேண்டாம், நாம னு சொன்னதுல நானும் தான் அடக்கம். நேற்று தூக்கமில்லாமல் உலாத்திக் கொண்டிருந்தச் சமயத்தில் Restoring Faith in Humanity என்ற தலைப்பில் பகிரப்பட்டிருந்த ஒரு காணொளி எனக்குள் ஒரு பாதிப்பை எற்படுத்தியது.  நேரம் இருந்தால் நீங்களும் கூகுள் செய்துப் பாருங்கள்.  மனிதம் நேசிக்கப்படட்டும்.

டேக் டைவர்ஷன்

பல்லாவாரம் மேம்பால இறக்கத்தில் தொடங்கி (துரைப்பாக்கம்-பல்லாவரம் இணைப்புச் சாலை வழி GST தொட்டதால், அங்கு தொடங்கி கவனித்ததை மட்டும் தான் சொல்ல முடியும்) ஒவ்வொரு ஐம்பது அடிக்கும் ஒரு காக்கிச் சட்டை, சந்திப்புகள் தோறும் ஓரிரு வெள்ளைச் சட்டைகள் (வாக்கி டாக்கி மற்றும் பிகிலுடன்). அனைத்து யு-டர்ன் சந்திப்புகளையும் தடுத்து, கைகளை ஆரவாரமாய் அசைத்தசைத்து வாகனங்களை எங்கும் (ஓரமாய் கூட) நிறுத்த விடாமல் விரட்டிக் கொண்டிருக்க, நானும் வேடிக்கை பார்த்துக்கொண்டே அப்படியே அவர்களின் வழிக்காட்டுதல்படி பயணி்த்து விட்டேன்.

திருமலை படத்தில் விவேக் திருப்பதி சென்றடையும் ‘டேக் டைவர்ஷன்’ காமெடி நினைவிற்கு வந்தபோது கூட, அதெல்லாம் மிகைப்படுத்தப்பட்டு சினிமாவிற்காக காட்டப்பட்டதென எனக்கு நானே நம்பிக்கை சொல்லிக் கொண்டிருக்கையில், சாலையோரப் பலகை ஒன்றில், பச்சை நிறப் பின்புலத்தில் வெள்ளையில் எழுதப்பட்டிருந்ததை படிக்க நேர்ந்தது.
.
.
.
.
.
.
அடப் பாவிகளா.. என்ன ஏன்டா பெருங்களத்தூருக்கு கூட்டிட்டு வந்தீங்க… நா MEPZ ல ரைட் எடுக்க வேண்டியவன் டா!!

Tuesday, November 12, 2013

காதல் ஒரு குத்தமா?

என்னது… உங்கள்து லவ் மேரேஜ் ஆஆஆஆஆ? சூப்பருங்க… வீட்ல ஒன்னும் சொல்லலையா? அவங்க வீட்லயும் உடனே ஒத்துக்கிட்டாங்களா??

.
.
.
நீங்க இவ்வளோ ஆச்சர்யப்படுற அளவுக்கு காதல் ஒன்னும் வேற்றுக் கிரகக் குரங்கு இல்லயே. உங்கள சொல்லி குத்தமில்ல. எதார்த்தமா பார்க்க வேண்டிய ஒரு விஷயத்த ஆச்சர்யமா பார்க்க வச்சிருக்குன்னா, நம்ம சமூகத்த பாராட்டியே ஆகணும்.

நீங்க லவ் பண்றீங்க தானே?

எழுதத் தொடங்கிய காலத்தில் எனது கவிதைகளைப் படித்துவிட்டு பலரும் கேட்டிருக்கிறார்கள், “உண்மையைச் சொல்லுங்க, நீங்க லவ் பண்றீங்க தானே?” என்று. அவர்களுக்கெல்லாம் ஒரு மெல்லிய புன்னைகயை மட்டுமே பதிலாகக் கொடுத்திருக்கிறேன். 

அந்தச் சிறு புன்னகையில் அவர்கள் எதிர்பார்த்த ‘ஆமாம்’, நான் சொல்ல நினைத்த ‘இல்லை’ இரண்டும் சம அளவில் கலந்து வைத்திருப்பேன். அவரவருக்கு வேண்டிய பாதியை மட்டும் எடுத்துக் கொண்டு பதிலுக்கு சிரிப்பார்கள். அந்தச் சிரிப்புகள் ஒவ்வொன்றும், எனது அடுத்த புன்னகை எப்படி அமைய வேண்டும் என்பதற்கான திருத்தங்கள் எனப் புரிந்துக் கொண்டிருக்கிறேன். 

Friday, November 8, 2013

செவ்வாய் தோஷம்

செவ்வாய் கிரகம், மங்கள்யான் எனப் பேசிக் கொண்டிருந்த வேளையில் செவ்வாய் தோஷம் பற்றி சிலர் பேசி இருந்தார்கள். உடனே, செவ்வாய் தோஷம் இங்கு எத்தனை திருமணங்களை தடுத்து நிறுத்தியிருக்கும் என்ற கேள்வி எழுந்தது. நூறு? ஆயிரம்? லட்சம்? இன்னும் அதிகமாய் இருக்குமோ என்னவோ, தெரியவில்லை.

காலமும் படிப்பறிவும் இந்த நிலையை முற்றிலும் மாற்றிவிடும் என்று நம்பப்படுகிறது. ஆனால், சமீபத்தில் கூட ஒரு பொறியியல் பட்டதாரி இந்த காரணம் சொல்லி ஒரு பெண்ணை நிராகரித்ததாக ஒரு செய்தியை படித்த நியாபகம் இருக்கிறது. ஒரு வேளை இத்தகைய நிராகரிப்புகளின் எண்ணிக்கை முன்பைக்காட்டிலும் குறைந்துள்ளதாக ஆய்வுகள் சொன்னால் சந்தோஷம் தான்.

செவ்வாய் தோஷம் அப்படி என்னதான் சொல்லி இந்த மக்களை பயமுறுத்தியிருக்கிறது என்பதறிய சில வலைப்பக்கங்களை துழாவினேன். அவற்றின் படி, ஜாதகங்கள் மூன்று வகையாகப் பார்க்கப்படுகின்றன. செவ்வாய் தோஷம் உள்ளது ஒன்று, செவ்வாய் தோஷம் இல்லாதது இரண்டு, செவ்வாய் தோஷம் இருந்தும் சில விதிகளின் அடிப்படையில் அஃது செவ்வாய் தோஷம் அற்றது என்று எடுத்துக்கொள்ளப்படும் முன்றாவது. ஒரு ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் இருக்கிறது என்பதை எதன் அடிப்படையில் கணிக்கிறார்கள் எனப் புரிந்துக்கொள்ள முயன்றபோது, அங்கு லக்னம், வீடு என்று எனக்கு விளங்காத சொற்கள் மூலம் விளக்கியிருந்தார்கள், அதனால் விட்டுவிட்டேன்.

இரண்டாவது ரக ஜாதகம் இரண்டுடனோ, மூன்றுடனோ அல்லது மூன்றாவது ரகம் மூன்றுடனோ சேர்ப்பதில் எந்த பிரச்சனையும் இல்லை என்று சொல்லும் அந்தப் பதிவுகள், முதல் ரகம், அதாவது செவ்வாய் தோஷம் உள்ள ஜாதகத்தை இரண்டுடனோ, மூன்றுடனோ சேர்ப்பதை ஒப்புக்கொள்ளவில்லை. துணையின் உயிருக்கு ஆபத்து, தம்பதிகளுக்கு இடையில் தீரா மனப் பிரச்சனை, குடும்பத்தில் பணப் பிரச்சனை என இன்னும் நீள்கிறது அந்த விளைவுகள் பட்டியல். அவர்கள் திரும்பத் திரும்பச் சொல்வதெல்லாம் ஒன்றே ஒன்று தான். செவ்வாய் தோஷம் உள்ள ஒருவரை செவ்வாய் தோஷம் உள்ள இன்னொருவரோடு தான் சேர்க்க வேண்டும். மைனஸ் இன்டு மைனஸ் பாடிடிவ் என்ற விதிப்படியோ என்னவோ.

இதையெல்லாம் வீட்டில் பெற்றோர்கள் பார்க்கும் வரன்களுக்குச் சரி, காதல் திருமணங்களுக்கு என்கிறீர்களா? நியாயப்படி நீங்கள் ஜாதகமே பார்க்கக் கூடாது. காதலை உங்களுக்கு அறிமுகப்படுத்திய விதியிடமே உங்கள் வாழ்க்கையையும் ஒப்படைத்துவிட்டு வாழ்வின் இரண்டாம் அத்தியாயத்தை நம்பிக்கையுடனும் மகிழ்ச்சியுடனும் தொடங்குங்கள். சொல்லப்பட்ட விளைவுகளில் பெரிதாய் தெரியும் உயிர் இழப்பைத் தவிர வேறு எதையும் நல்லதொரு புரிதல் கொண்டு சமாளித்துவிடலாம். அப்போ உயிரிழப்பு? உங்களுக்காக ஏற்கனவே பதில் எழுதிவிட்டார் சுஜாதா. “சாகுற நாள் தெரிஞ்சு போச்சுனா, வாழ்ற நாள் நரகமாய்டும்.” :)

சரி, இந்த செவ்வாய் தோஷம் நம்மைப் பிடிக்காமல் இருக்க என்ன செய்யலாம்? ரொம்ப சிம்பில். செவ்வாய் தோஷம் பற்றிய இந்நம்பிக்கைகள் நமக்குப் பிடிக்காமல் போக வேண்டும்.

# இப்படியே விட்டா ஜலதோஷம் பிடிச்சவங்களுக்கு ஜலதோஷம் பிடிச்சவங்கள தான் கல்யாணம் பண்ணி வைக்கணும் னு சொல்லுவாங்க போல. சும்மா ஒரு காமெடிக்கு.

Thursday, November 7, 2013

ஹ்ம்ம்ம்.. அது தீபாவளி!!

பண்டிகை நாளுக்கு முன்னர் இரண்டு மூன்று நாட்கள், பின்னர் ஒரிரண்டு நாட்கள் என விடுமுறை காலம் தன் இஷ்டத்திற்கு விரிந்து கிடக்கும். பத்து இருபது நாட்கள் முன் தொடங்கியே வீட்டில் கை முறுக்குகள், இனிப்புப் பண்டங்கள் எனத் தயாராகத் தொடங்கி மணம் வீசி வந்திருக்கும். போதாத குறைக்கு சொந்தங்கள் நண்பர்கள் வீட்டிலிருந்து வேறு தூக்கு தூக்காய் வந்து இறங்கியிருக்கும்.

இரத்தக் கொதிப்பு, சக்கரை வியாதி போன்ற குறைபாடுகளால் கைகள் கட்டிப் போடப்பட்டிருந்தாலும், கொஞ்சமும் கட்டுப்படாத குழந்தை மனம் வீட்டுப் பெரியவர்களை ஒரு சில அதிரசங்களையும் கை முறுக்குகளையும் திருட உட்படுத்தும் வேளையில், இனிப்புத் தூக்குகள் பத்திரப்பட்டிருக்கும் அலமாரிகளுக்குப் பின்னால் ஒளிந்து கண்ணாமூச்சி ஆடிக்கொண்டிருக்கும் குழந்தைகள் நம்மிடம் கையும் களவுமாக மாட்டிக் கொள்ள, நமக்கும் மாமூல் வழங்கப்பட்டிருக்கும்.

பள்ளி விடுமுறை தொடங்கும் முந்தைய நாள் மாலை கடைசி வகுப்பில் அப்பா அந்த வருடம் புதிதாய் வாங்கி வந்த ராக்கெட்களைப் ஏதோ ஏற்கனவே பத்த வைத்துவிட்ட களிப்பில் நாம் வானில் உயர பறந்து கொண்டிருப்போம். பள்ளி முடிவடைந்ததை குறிக்கும் அந்த கடைசி மணி ஒலிக்கையில் அந்த வருட தீபாவளிக்கு நம் ஊரில் வெடிக்கக் காத்திருக்கும் மொத்தப் பட்டாசுகளின் சத்தத்தையும் நாம் உரக்கக் கூச்சலிட்டு தோற்கடித்திருப்போம். நேரே வீடு சென்று, புத்தக மூட்டையிடம் ‘உனக்கும் எனக்கும் அடுத்த மூன்று நாட்களுக்கு வாய்கால் தகராறு’ என்ற ரீதியில் அதற்கு ஒரு பெரிய கும்பிடு போட்டு அறையின் ஒரு ஓரத்தில் கிடாசிவிட்டு, பட்டாசுப் புகையினுள் தொலைந்து போயிருப்போம்.

அங்கு தொடங்கி அடுத்து பள்ளி துவங்கும் நாள் வரை எந்நேரமும் வெடி மருந்துகள் அப்பப்பட்டே காட்சி தரும் நம் கை விரல்களை ஒவ்வொரு உணவுக்கு முன்னும் ஹமாம் சோப்புகள் காப்பாற்றிக் கொடுத்திருக்கும்.

இப்படியெல்லாம் தீபாவளியை கொண்டாடிவிட்டு இன்றும் கொண்டாடுகிறோமே (?) உப்பு சப்பில்லாத ஒரு தீபாவளியை.

Wednesday, November 6, 2013

ஃபேஸ்புக் தீபாவளி

பல வருடங்களுக்குப் பிறகு இந்த தீபாவளியை என் பள்ளிக் காலங்களில் கொண்டாடியபடி கொண்டாடினேன் என்று பேசிக்கொண்டிருந்தேன். அப்படி என்ன செய்தாய் என்றார்கள்.
ஃபேஸ்புக் பக்கம் தல வச்சி கூட படுக்கல.

நண்பர்கள், உறவினர்களை நேரில் சந்தித்தோ, நேரில் சந்திக்க முடியாமல் போக தொலைபேசியில் அழைத்தோ பண்டிகை தின சந்தோஷங்களை பகிர்வது என்பது மறந்தே போக இன்று பக்கத்து வீட்டுப் பையனுக்கும் ஃபேஸ்புக்கில் தான் வாழ்த்து சொல்கிறோம். அவனும் அதுக்கு ஒரு ‘லைக்’கை போட்டு ஒரு ‘தாங்கஸ் ப்ரோ’ வும் அனுப்புகிறான்.

மைன்டு வாய்ஸ்: ஒரு அரை மணி நேரத்திற்கு முன்னாடிதானடா நீங்க ரெண்டு பேரும் ஒரே வீட்டு வாசல்ல ஒன்னா வெடி வெடிச்சுட்டு இருந்தீங்க.

கடுப்பேத்துறாங்க மை லார்ட்!

சச்சினும் மற்ற எந்த ஒரு விளையாட்டு வீரர் போலதானே. அவருக்கும் வயதாகும், ஓய்வு பெற வேண்டி வரும் என்பது தெரிந்ததுதானே. பிறகு ஏன் இவ்வளவு எமோஷனல் ஆகுறீர்கள். உங்கள் அப்பாவிற்கு கவாஸ்கர், கபில் தேவ் எப்படியோ, அப்படித்தான் சச்சின் உங்களுக்கு. உங்கள் பையனுக்கு கோலி. அவன் பையனுக்கு எனத் தொடர முயன்ற போது, “மவனே…” கூடவே நான்கைந்து வார்த்தைகளும் ஒத்து இசைக்கத் துடித்தன. விளையாட்டு, வயது, விருப்பம் ஆகியவற்றை சுற்றியுள்ள எதார்த்தம் கூட புரியாத அளவிற்கு இங்கு யாரும் முட்டாளாய் இருப்பதில்லை என்பதை ஏனோ இவர்கள் புரிந்து கொள்ளத் தவறுகிறார்கள்.

“சச்சினும் மற்ற எந்த ஒரு விளையாட்டு வீரர் போல தானே” என்பதில் தொட்டு அடிப்படைப் புரிதலே அங்கு தவறாக இருந்தது. எங்களால் அவரை அப்படிச் சாதாரணமாய் பார்க்க முடியவில்லை என்பது தான் உங்களுக்கும் எங்களுக்கும் இடையில் இருக்கும் ஒரே வித்தியாசம். அவர் இந்த இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறார்கள் என்று மகிழ்வதா, அதன் பிறகு அவர் ஆடவே மாட்டாரே என்று வருந்துவதா என்பது தெரியாமல் நாங்களே மிகவும் குழம்பிப்போய் உள்ளோம். நீங்க வேற ஏன் டா இம்ச பண்ணுறீங்க.

Tuesday, November 5, 2013

மங்கள்யான்!

செவ்வாய் கிரகத்தில் உயிர் வாழ்வதற்கானச் சாத்தியங்களை ஆராய உருவாக்கப்பட்ட இந்தியாவின் 450 கோடி ரூபாய்ச் சொத்து இன்று பிற்பகல் 2:38 மணிக்கு சும்மா ஜொய்ங்குனு கிளம்பிருச்சுங்கிறது தான் செய்தி. அடுத்த வருடம் செப்டம்பர் மாதம் இந்த மங்கள்யான் செவ்வாய் கிரகத்தை அடையும் என்பது கணிப்பு. அப்படி நடக்கையில், அமெரிக்கா, ரஷ்யா, ஐரோப்பிய கூட்டமைப்பைத் தொடர்ந்து, மார்ஸ் மிஷனை வெற்றிகரமாக முடித்துக் காட்டிய நான்காவது நாடு என்ற பெருமையை இந்தியா பெறும் என்பது குறிப்பிடத்தக்கது. இதுவரை மேற்கொள்ளப்பட்ட நாற்பது முயற்சிகளில் சீனாவின் முயற்சி உட்பட மொத்தம் இருபத்து முன்று முயற்சிகள் மண்ணைக் கவ்வியிருக்கின்றன என்ற உண்மை இந்த மிஷன் எவ்வளவு சவாலானது என்பதை ஒரளவிற்கு உணர்த்தவே செய்கிறது.

செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பப்படுகிறதால் ‘மங்கள்’யான் என்று பெயர், அது சரி. ஆனால் அதையும் செவ்வாய்க் கிழமையன்று தான் ஏவ வேண்டுமா? தாங்க முடியல உங்க செவ்வாய் மோகம்!!

# செவ்வாயன்று செவ்வாய்க்கு ஒரு செவ்வாயே பறக்கிறதே.. அடடே.. ஆச்சர்யக்குறி!

Friday, October 25, 2013

அவள் பிறந்த நாள்!!

வெயில் மங்கியிருந்த ஒரு மதிய வேளையில் அவள் வீடு திரும்பியிருந்தாள். ஒரு எட்டு வயது உடல் தாங்கிக் கொள்ள முடியாத ஒரு கத்திக் கீறலை தைரியமாகத் தாங்கியிருந்தாள் என்பது எனக்குத் தெரியும். அறுவை சிகிச்சை அரங்கிற்குள் நுழைய மறுத்தபடி அம்மாவை பார்த்து அவள் அழுத நிமிடங்கள் பற்றி அம்மா சொல்லியிருந்தது நினைவிற்கு வந்தது. எப்படி இருக்கு இப்போ? வலிக்குதா? என்றெல்லாம் கேட்கத் தோன்றவில்லை. அவளாகவே எழுந்து போகும் வரையில் அவளை என் மடியில் படுக்க வைத்துக்கொள்ள வேண்டும் போலத் தோன்றியது. அதுவரையில் உடன் விளையாடும் குழந்தையாக, அவ்வப்போது சண்டை போட்டுக் கொள்ளும் தோழனாக, அவளது பொய்க் கண்ணீரால் அப்பாவிடம் எப்போதும் வசை வாங்கும் அண்ணனாக மட்டுமே உணர்ந்திருந்த என்னை, முதன் முறையாக தந்தை ஸ்தானத்தை உணரச் செய்த அவளின் ஒரு ஏக்கப் பார்வை இன்னும் என் கண்களை நிரப்பிக் கொண்டிருக்கிறது.

கடவுள் எனக்கு ஒரு தங்கையை பரிசளித்த நாள் இது.

Thursday, October 24, 2013

இதுக்கு ஒரு முடிவே இல்லையா?

இந்த தனியார் சானல்களில் ஒளிபரப்பப்படும் பாட்டு நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துக்கொள்ளும் பாடகர்கள் ஓரிரு வரிகள் பாட, அது படு மொக்கையாகவே இருந்தாலும், போட்டியாளர்கள் முதல் நடுவர்கள் வரையில் பேசி வைத்தது போல எல்லோரும் “ஆஹா.. ஓஹோ.. அடடடடடடா.. அப்பப்பப்பப்பா..” என்று ஓவராக ரியாக்ட் செய்கிறார்கள். அவர்கள் போடும் சீனுக்கு நம் ஞானத்தின் மீது வேற நமக்குச் சந்தேகம் வருகிறது. இது போன்ற நிகழ்ச்சிகளை முற்றிலும் புறக்கணிக்கலாம் என சில நேரங்களில் எண்ணினாலும் விளம்பர யுத்திகளுக்கு அடிமையாகிப் போய்விட்ட நம் புத்தி கேட்டுத் தொலைக்க மாட்டேங்குறது.

ஒரு காலத்தில் தலை சிறந்து விளங்கிய ஒரு இசைக் கலைஞரை சபையில் வைத்து நீங்கள் பாடியதில் பிழையிருந்தது எனச் சுட்டிக்காட்டி சங்கடத்தில் தள்ளவோ அவமானப்படுத்தவோ வேண்டாம் என்பதில் நானும் உங்களோடு தான் நிற்கிறேன். அதே நேரத்தில், பொய் கலந்த ஒரு மிகைப்படுத்தப்பட்ட பாராட்டு என்பது அங்கு தேவையில்லை, அதை அவர்கள் விரும்பவும் மாட்டார்கள் என்றே தோன்றுகிறது. அவர்கள் வரட்டும், அவர்களால் முடிந்தளவு பாடட்டும், இதுவரையில் இசைக்கு அவர்கள் செய்த மரியாதையை அவர்களுக்குத் திருப்பிக் கொடுக்க முயற்சிப்போம், அவர்களுடனான நினைவுகளை தேடி எடுத்துப் பகிர்வதில் மகிழ்ச்சி கொள்வோம், எழுந்து நின்று கை தட்டுவோம், காலில் விழுந்து வணங்குவோம், அத்தோடு நிறுத்துக் கொள்வோம். அவர்கள் பாடிய பாட்டோ மீட்டிய இசையோ அவர்களை கௌரவப்படுத்திய அளவிற்கு நாம் ஒன்றும் பெரிதாகச் செய்துவிட முடியாது என்பது என் தாழ்மையான கருத்து.

Friday, October 18, 2013

குழந்தை கொண்டு பிச்சை

சிக்னலில் குழந்தை கொண்டு பிச்சை எடுப்பவர்களைப் பற்றியும், அந்தக் குழந்தைகள் எப்போதும் தூங்கிக் கொண்டே இருப்பதற்கானக் காரணத்தை விளக்கியும் இணையத்தில் உலவும் செய்திகள் காவல் துறைக்கும் அரசுக்கும் தெரியாமல் இருக்குமா என்ன. சென்னையில் இன்றும் பல இடங்களில் அவர்களை பார்க்க முடிகிறது.

எங்கேனும் பார்க்கும்போதெல்லாம் அவர்கள் கையில் இருக்கும் குழந்தையை கூர்ந்து கவனித்துள்ளேன். சப்தங்களால் மட்டுமே சூழப்பட்ட, வாகன நெரிசல் மிக்கச் சாலைகளிலும், எந்த ஒரு சின்ன அசைவும் காட்டிறாது, கண்கள் இறுக்கி, அப்படி ஒரு ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும். “குழந்தைக்கு பால் வாங்கக் கூட காசு இல்ல யா” என்று அந்த பெண்மணி (தாய் என்று சொல்ல ஏனோ பிடிக்கவில்லை) நம்மிடம் கூறுவாள். குழந்தை மீது பரிதாபமும், அதை வைத்து பிச்சை எடுத்து வாழ நினைக்கும் அவள் மீது கோபமும் ஒரே நேரத்தில் பொத்திக்கொண்டு வரும். எதை எந்த அளவிற்குக் வெளிக்காட்டுவதெனத் தெரியாமலேயே அங்கிருந்து உடன் விலகி நடந்து விடுகிறேன். சில அடி தூரத்தில், என் மனசாட்சி, அந்த குழந்தையை மட்டும் திரும்பிப் பார்க்க முயற்சிக்கிறது.
உங்களில் யாருக்கேனும் இப்படி நிகழ்ந்திருக்கிறதா?

பி.கு: அடுத்த முறை அப்படி யாரையேனும் பார்க்க நேர்ந்தால், நேராகப் போய் அவர்களிடம் கேட்டுவிடப் போகிறேன், “ஏன் குழந்தை எப்போதும் தூங்கிட்டே இருக்கு?” னு. யாரைக் கூட்டி எவ்வளவு பிரச்சனை பண்ணினாலும் பராவாயில்லை.

Thursday, October 17, 2013

இந்தியா வெற்றி!!

விராட் கோலி மின்னல் வேக சதம். இந்தியர் ஒருவரால் பூர்த்தி செய்யப்பட்ட அதி வேக சதம். 52 பந்தில் 100 ரன்கள் விளாசி சேவாக்-இன் முந்தைய சாதனையான 60 பந்துச் சதத்தை பின்னுக்குத் தள்ளினார்.

சிகர் தவான், ரோஹித் ஷர்மா அபார தொடக்கம். தவான் ஐந்து ரன்னில் சதத்தை தவற விட்டிருந்தாலும், ஷர்மா தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 141 ரன்கள் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இப்படியாக, இந்தியர்கள் அசுரத்தனமாக விளையாடி ஜெயித்தார்கள் என்று பலரும் சொல்ல கேட்க முடிகிறது. ஆனால் என்ன செய்ய, சச்சின் இல்லாததால் பார்க்க தான் முடியவில்லை.

Wednesday, October 16, 2013

மெய்யுணர்தல் 4!

நியாயம் ஒவ்வொரு முறையும் மிக நேர்மையாகத் தான் தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ள முயற்சிக்கிறது. நாம் நிராகரித்து விடுகிறோம். தன் பக்கம் இருக்கும் உண்மைக் காரணங்களை ஒரு முறை உரக்கப் பேசிப் பார்க்கிறது. அவற்றை ஏற்க மறுத்து விடுகிறோம். கொஞ்சம் பொறுமையிழப்பதில் எட்டிப்பார்க்கும் தன் கோபத்தின் வாயைப் பொத்தி அதனை தனக்குள் இறுக்கி அமர்த்திவிட்டு தரையிறங்கியும் பார்க்கிறது. பதிலுக்கு ஒரு பெருந்தோல்வியை தூக்கி அதன் கைகளில் வைத்து விடுகிறோம். தோற்க விரும்பாதவர்கள் அவர்களுக்கென எழுதப்பட்டத் தோல்வியை தனக்குக் கொடுத்துவிட்டுத் தப்பிக்கப் பார்ப்பார்கள் என்ற வழக்கம் புரிய வர, இனியும் போராடிப் பிரயோஜனம் இல்லையென ஒரு கட்டத்தில் மௌனம் நாடுகிறது. சந்தர்ப்பங்களை தனக்குச் சாதகமாக்கிக் கொள்ளப் பழகிவிட்ட மனித குணம் அந்த மௌனத்தையும் விட்டு வைப்பதாயில்லை. தோல்விக்கான நியாயத்தின் ஒப்புதல் என அதற்கு ஒரு பட்டம் கட்டி நியாத்தின் நிஜத்தை மொத்தமுமாய் அழித்துவிட முயற்சிக்கிறோம். மனிதன் ஒரு மிருகம். ஒப்புக்கொள்ள வேண்டி உள்ளது.

Thursday, October 10, 2013

முதல் துரோகம்!

இந்த உலகின் முதல் துரோகம் யாரால் நிகழ்ந்திருக்கும்? எவருக்கிடையில் அல்லது எதற்கிடையில் அது நடந்திருக்கும்?அது எப்படிப்பட்டதாக இருந்திருக்கும்? அந்த வலி எப்படி இருந்திருக்கும்? அந்த துரோகத்திற்கு தண்டனை என்னவாக இருந்திருக்கும்?

விஜய் டிவியின் ‘தமிழ் பேச்சு எங்கள் மூச்சு’ பிரபலமும், சன் நியூஸ் செய்தி வாசிப்பாளருமான திரு. நெல்சன் அவர்கள் முன் வைத்திருந்த கேள்விகள் இவை. அவர் கேட்டிருந்த இந்த கேள்விகள் போக, இதை படித்த போது எனக்குள் வேறு நிறைய கேள்விகள் கேட்கப்பட்டன. எல்லாவற்றையும் ஒரே பதிவு மூலம் விவாதிக்க முடியும் என்று தோன்றவில்லை. இருப்பினும், எழுதத் தூண்டும் தலைப்பு இந்த முதல் துரோகம். நம் ஒவ்வொருவருக்குள்ளும் இதைப் பற்றிய ஒரு தனி கதை இருக்கும். விரைவில் அப்படி ஆழமாய் அலசிப் பார்க்கும் ஒரு பதிவையும் எழுத ஆவலாய் இருக்கிறேன். நேரம் கை கொடுத்தால் சீக்கிரமே பதிவிடுகிறேன். அதுவரையில் என்னால் முடிந்தது திரு.நெல்சனின் கேள்விகளுக்கு நான் எழுதியிருந்த பதிலை இங்கே உங்களோடு பகிர்வது மட்டும் தான்.

“சுயநலத்தின் பிறப்பால், நம்பிக்கை வைத்திருந்த ஒருவருக்கும் அந்த நம்பிக்கைக்குச் சொந்தக்காரருக்கும் இடையில், விவரிக்க முடியாத ஒரு அசிங்கமாய், உயிரையே திருப்பிப் போட்ட ஒரு வலி தந்து நிகழ்ந்திருக்கும் அந்த முதல் துரோகம், கண்டிப்பாக தண்டனை பெற்றிருக்காது, மாறாக, அதுவரையில் யாராலும் அசைத்திட முடியாமல், பெருமிதத்தோடுச் சிரித்துக்கொண்டிருந்த அந்த நம்பிக்கையை அது தண்டித்திருக்கும், கொஞ்சமும் கருணையில்லாமல் கொன்று போட்டிருக்கும்.”

Tuesday, October 8, 2013

விவாகரத்து செய்யேல்!!

எண்ணிக்கையில் பெருகி வரும் விவாகரத்துகள் பற்றிய ஒரு கவலையாய் தன்னை அடையாளப்படுத்திக் கொண்ட ஒரு பதிவில், ஒரு கணவனும் மனைவியும் நீண்ட காலம் சேர்ந்து குப்பை கொட்ட சார்பு நிலை அவசியம் என்பது போல சொல்லப்பட்டிருந்தது. அதாவது, இன்று அறுபதாம் கல்யாணம், என்பாதம் கல்யாணம் எனக் காணும் பெருசுகளின் காலத்தில், சம்பாதிக்கும் இடத்தில் வகித்த கணவனைச் சார்ந்து மனைவிமார்களும், குழந்தைகளைப் பெற்றெடுத்து, அவர்களின் வளர்ப்பு, வீட்டு நிர்வாகம், சமையல் என இதர வீட்டு வேலைகளைக் கவனித்துக் கொண்ட மனைவியைச் சார்ந்து கணவன்மார்களும் இருந்ததால் அந்த தம்பதியர்களால் நாற்பது ஐம்பது ஆண்டுகள் சேர்ந்து வாழ முடிந்ததாகச் சொல்லிப் போகிறது அந்தப் பதிவு.

சார்பு நிலை அவசியம் என்பதில் எனக்கு சற்றும் உடன்பாடு இல்லை. கணவன் உத்தியோகமற்று, சம்பாத்தியமற்ற நிலையிலும் கூட, எத்தனையோ குடும்பங்களை பெண்கள் தன்னந்தனியாகவே கையாள்கிறார்கள். சுமாராக சமைக்கும், குழந்தை பெறாத மனைவியோடு கூட கணவன்மார்கள் அன்போடு வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார்கள். அடிப்படையில், தன் துணை புரியும் தவறுகளையும் அவர் தம் குறைகளையும் ஏற்றுக்கொள்ளவதில் தான் இங்கு பலருக்கும் பிரச்சனை. தன் துணையைவிட இவ்வுலகின் எந்த விஷயமும் பெரிதில்லை என்ற உண்மையான எண்ணம் உள்ளவர்களாக மாறுவதில் தான் நம்மில் பலரும் தவறுகிறோம்.

***
தவறுகள் புரியாத ஒருவனுக்கும்
தவறுகள் புரியாத ஒருத்திக்கும்
திருமணம் என்பது சாத்தியமேயில்லை!
அது இயற்கைக்கு முரணானதும் கூட!!

***
சில சமயங்களில்,
நம்மிடமே நாம் நம்
தோல்வியை ஒப்புக்கொள்வதில்லை!
புதிதாய் இணைந்த உயிர் மட்டும்
எப்படி விதிவிலக்காகும்..
ஏற்றுக்கக் கற்றுக்கொள்ளுங்கள்!

Friday, October 4, 2013

பிளடி டாக்.. செத்துப் போயிட்டான்

தெருமுனை விளக்குக் கம்பத்தில் சாய்ந்தபடி
யாரோ ஒருவர் உட்கார்ந்திருந்தது போல தெரிய,
அருகில் சென்று பார்த்தபோது.. அது நீ!

‘என்னடா இங்கு.. அதுவும் இந்த நேரத்துல’
எனக் கேட்க
நீ அழத் தொடங்கினாய்.

உன் விசும்பல் சத்தம்
மொத்த வீதியின் அமைதியையும் விழுங்கத் தொடங்கியதறிந்து,
‘சரி வா.. பன்னென்டு ஆய்டுச்சு..
வீட்டுக்குப் போய் பேசலாம்’
உன் கை பிடித்து இழுத்தேன். நீ வர மறுத்தாய்.

உன் விரல்களுக்கு நடுவில் சிகரெட் சுட்ட வடு,
உனது மறுகை கொண்டிருந்த மதுவில் குளித்து
என்னிடம் பரிதாபம் வேண்டி இழித்தது.
எனக்குக் கோபம் தான் வந்தது.

‘ஏன்டா இப்படிக் குடிச்சே அழியுற’ என்றதும்
ஒரு ஞானச் சிரிப்பு அங்குப் பூத்தது.
‘காதல் மச்சி’ என்ற பிதற்றல் வேறு துணை.
‘அதுக்கு???’ என்றேன் கோபமாய்.
பதில் சொன்னாய் நீயும் மௌனமாய்.

ஓங்கி அறையலாம் போல இருப்பினும்
அமைதியாகவே உனை தூக்க முயன்றேன்.
‘வா.. வீட்டுக்குப் போகலாம்’ – இது இரண்டாம் முறை.

‘விடுறா என்னய..’ – ஒரு அலறல் சத்தம்.
‘அவ போயிட்டா….
என்ன மட்டும் சந்தோஷமா இருக்கச் சொல்லுறியா???
அஞ்சு வருஷம் மச்சி..
அஞ்சு வருஷ லவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்’
என லவ்-ஐ ஒரு வழியாய் இழுத்துப் பிய்த்து முடித்தாய்.
எனக்கு சிரிப்புதான் வந்தது.

லவ் தான்!
அஞ்சு வருஷம், நீ சொல்லும் நல்ல ஆழம் தான்!
ஆனால் அந்த ஆழத்தின்
எத்தனாவது அடிக்குப் போய் தேடினாலும்
உன் இந்த நிலைக்கு நியாயம் மட்டும் கிடைக்காது.

உனை வேண்டாமென விட்டுச் சென்றவளுக்காக
உயிர் வேண்டாமென அதை நீ விற்றுக் குடிப்பது
கண்டிப்பாக காதல் இல்லை!
முட்டாள் தனத்திற்கு முப்பாட்டன் முறை தான் வரும்!!

நீ வருவது போல தெரியாததால்,
நான் வீடு திரும்பிக் கொண்டிருந்தேன்.
வழியில்,
உன் வீட்டு வாசல் முன் உன் அம்மா,
‘நீ எப்படியும் இப்படித்தான் போவ னு காத்துட்டிருந்தேன்.
நாளைக்கு அவனுக்கு திதி ப்பா..
ஞாபகப் படுத்தலாம் னு தான்’ என முடித்தாள்.

‘மறக்கல மா.. வந்துடுறேன்..’
எனச் சொல்ல அவள் தலையசைத்தாள்.
என் கால்களும் அசையத் தொடங்கின.
அழ நிறுத்தியிருந்த கண்கள்
மீண்டும் தயாராகிக் கொண்டிருந்தன.
.
.
.
.
.
.
.
‘பிளடி டாக்.. செத்துப் போயிட்டான்!’

Tuesday, October 1, 2013

உலக முதியோர் தினம்!

நம்மில் யாரும் பற்கள் இழந்த நம் பொக்கை வாய் எப்படி இருக்குமென யோசித்துப் பார்ப்பதில்லை. நடக்க முடியாமல் போக தடி ஊன்ற வேண்டி வருமே என உணர்வதுமில்லை. நரை தட்டும், பார்வை மங்கும், கேட்கும் திறன் குறையும், தோல் சுருங்கும் என எதையுமே நினைத்துக்கூடப் பார்ப்பதில்லை. ஒவ்வொரு வேளைக்கும் ஒரு தட்டுச் சோறுக்காக இன்னொருவரை எதிர் பார்க்கும் நிலையே ஒரு கொடுமையென நாம் என்றுமே புரிந்து கொள்வதில்லை. தான் பெற்றதுகளே தன்னை வளர்க்க மறுத்ததில் அநாதைகளாகி, கோயில்களில், பிரம்மாண்டக் கடைகளின் வாசலில், பேருந்து நிறுத்தங்களில், நடைபாதைகளி்ல், சாலைச் சந்திப்புகளில் தேங்கும் கார்களின் கண்ணாடி ஜன்னல்களுக்கு வெளியில், எச்சில் இலைகள் குவியும் குப்பைத் தொட்டிகள் பக்கத்தில் என எங்கும், ஒட்டிக் கொண்டிருக்கும் தனது மிச்ச உயிருக்காகக் கையேந்தும், சில நேரங்களில் வயிற்றைத் தடவிக் காட்டி கைகள் கூப்பும் ஜீவன்களாக பல அப்பாக்களையும் அம்மாக்களையும் கண்டும் காணாதபடி நாம் கடந்து சென்று கொண்டே தான் இருக்கிறோம்.

Monday, September 30, 2013

ராஜா ராணி!!

கடந்து மூன்று நாட்களாய் முகப்புத்தகத்தின் எனக்குத் தெரிந்த பெரும்பாலான சுவர்கள் மீது ஒரே காதாலாய் பூசப்பட்டிருக்கிறது.

சிலர், வீட்டின் பின்புற புழக்கமில்லா அறையில் பழைய தட்டுமுட்டுச் சாமான்களோடு போட்டு வைத்த தங்களின் காதல்களை எல்லாம் தேடி எடுத்து, யாரேனும் பார்க்கிறார்களா என்ற விழிப்புடன், தூசு தட்டி, கண்கள் ஈரம் கொள்ள, சில நிமிடங்கள் கட்டித் தழுவியிருந்தார்கள்.

நிஜத்தில் இறந்திருந்தாலும், அவரவர் நினைவுகளில் இன்னும் அந்தக் காதல்கள் எல்லாம் வாழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன என்பதற்குச் சாட்சியாய் ஒரு சில முத்தங்கள் கூட அவற்றின் மீது பதிந்திருந்தார்கள்.

காதலிடம் போராடித் தோற்ற ஒரு சிலர் இம்முறை ஒரு வெற்றிக்குத் தங்களை தயார் படுத்தத் தொடங்கியிருந்தார்கள்.

இன்னும் ஒரு சிலர், கல்யாணம் குழந்தைகள் எனக் கண்ட பின்பும் காதலின் ‘கா’ கூடத் தெரியாமல் இதுவரை வாழ்ந்துவிட்டோமே என வெட்கித் தலை குனிந்திருந்தார்கள்.

எல்லாவற்றிற்கும் மேலாக வீன்வாதத்திற்காவது காதலை வம்புக்கு இழுக்கும் சிலரும்கூட, காதல் மோதி கவிழ்திருந்ததோடு இல்லாமல், அவர்களைத் தட்டி எழுப்பிப் பார்த்தபோது, காதலுக்கே உரித்த பாணியில் முகம் முழுக்கப் பற்கள் கொண்டு வழிந்து கொண்டிருந்தார்கள்.

ராஜாராணி, காதலை காதலாகவே கொடுக்க முயற்சித்திருக்கும் ஒரு படம்.

Monday, September 23, 2013

முஜே கடுப்பு ஆத்தா ஹை!!

‘ஷேம் ஷேம் பப்பி ஷேம்’ என்று ஆங்கிலத்தில் சொல்லப்படுவதற்கான ஆர்த்தத்தை,
சனிக்கிழமை ஆஃபிஸ்.. ஷேம் ஷேம்!

ஞாயிறும் என்றால் அது பப்பி ஷேம்!!

என்று நேற்றிரவு அலுவலகத்திலிருந்து வீடு திரும்பு வழியில் தான் நொந்துக் கொண்டேன். “உனக்கென்னயா.. சாஃப்ட்வேர் கம்பெனி வேல, சும்மா ஜம்முனு இருக்க!” என்று இனி யாராவது சொல்லட்டுமே, குமட்டிலேயே குத்துகிறேன்.

மெய்யுணர்தல் 3

1947-ல் ஆங்கிலேயர்களிடமிருந்து போராடிப் பெற்ற விடுதலையை எழுபதுகளில் தொடங்கி மொத்த மேற்கத்திய நாடுகளுக்கும் பிரித்துக் கொடுக்கத் தொடங்கிவிட்டோம் என்பது, விடுமுறை நாட்களில் அலுவலகத்திற்குப் பணிக்கப்படும் ஒவ்வொரு முறையும் தவறாமல் நெஞ்சை உருத்துகிறது. குண்டு துழைத்த காலம் போய் இன்று ரூபாய் இழைக்கிற அசிங்கம் வரைக்கும் அதே அடிமைப் பிழைப்பு அப்படியே தொடர்கிறது என்பதை நம்முள் எத்தனை பேர் உணர்ந்திருக்கிறோம்.

Friday, September 20, 2013

மெய்யுணர்தல் 2

நானும் பல காலமாகக் கவனித்து வருகிறேன். நான்கு வரிகளுக்கு மிகாமல் எழுதப்படும் கவிதையைப் படிக்க நாற்பது நபர்கள் மிகச் சுலபத்தில் கிடைக்கும் இதே உலகில், நாற்பது ஏன் இருபது வரிகள் மீறினாலே ஒரு சில கவிதைகள் காண்பாரற்றுக் கிடக்கும்படி ஆகிவிடுகிறது. அப்படியே வாசிக்கும் ஒரு சிலரும், நுனிப்புல் மேய்வது போல, அங்கொன்றும் இங்கொன்றுமாய் அவரவரை ஈர்க்கும் சில வார்த்தைகள் மட்டும் தேர்ந்தெடுத்துக் கொய்தெடுத்துவிட, கவிதையின் உருவம் சிதைவதோடு அங்குப் படைப்பின் நோக்கமும் உயிரிழக்க நேரிடுகிறது. சிறுகதைகள், நாவல்கள் என எதை எடுத்துக் கொண்டாலும் இதே நிலை தான். வாசிப்போர் எண்ணிக்கை, படைப்பின் நீள எதிர் விகிதத்திலேயே அமைவது, இலக்கியம் மீதான ஏதோவொரு பூர்வ ஜென்மப் பகையை, கணிதம் இப்படித் தீர்த்துக் கொள்கிறதோவென எண்ண வைக்கிறது.

Thursday, September 19, 2013

மனித நேயம்!!

தனது கடையில் இருந்து,
ஒரே ஒரு பன்-ஐயும்
கொஞ்சம் எச்சில் டீயையும்
திருடிச் சென்ற சிறுவனை விரட்டி
ஒட்டம் பிடித்த டீக்கடைக்காரனுக்கு,

அவன் கடை வாசலின்
செத்தச் சிகரெட்டின் மிச்சங்களை
மண்ணுக்குள் மிதிக்கப்படும் இடத்திலிருந்து,
நூறாவது அடியில் காணப்பட்ட
பாழடைந்த குப்பைத் தொட்டிக்குப் பின்னால்,

பயந்து.. பசித்துப் போய் ஒதுங்கியிருந்த
அரையடி உயரயமுமில்லா ஒரு நாய்க்குட்டிக்கு,
டீயில் நனைத்த வெந்த மைதா கொண்டு
அந்தச் சிறுவன்
உயிர் ஊட்டிக் கொண்டிருப்பதைப் பார்த்ததும்,

போன வாரக் குளிர் மழைக்கு ஒதுங்கி
ஒரு டீத் தண்ணிக்குப் பிச்சை கேட்டு
தன் கடைக்கு முன் நடுங்கியபடி கை நீட்டிய
வயது முதிர்ந்த ஒரு கிழவியை
திட்டி அனுப்பியது நினைவிற்கு வந்து,

அதுவரை விரைந்த கால்கள் இரண்டையும்
நொடியில் உறைந்து போகச் செய்து
குற்றவுணர்ச்சியில் முக்கியெடுக்கப்பட்ட கையால்
அவன் கன்னத்தில் ஓங்கி அறைகிறது!

முகம் வியர்த்தபடி முழி துடைத்தபடி
கடை திரும்பிக் கொண்டிருந்த அவனுக்கு,
தன் கடையின் ஒரு டீயின் விலை
சுத்தமாய் மறந்து போயிருந்தது!

Monday, September 16, 2013

கருணைக் கொலைகள்.. தொடரும்!!!

இதயத்தில் ஏற்பட்ட வலி ஏனோ
தொண்டைக்குழியை நிரப்புகிறது!

வயிற்றுச் செதில்களை,
உள் சுரக்கும் அமிலம்
அரிக்கிறதெனத் தெரிந்தும்,
உணவுக்கு வழி மறுக்கப்படுகிறது!

குரல்வலையொட்டி ஒழுகிக் கொண்டிருந்த
வலி கொஞ்சம் துடைத்தெடுக்கப்பட்டு,
செல்லரித்த இடங்களிலெல்லாம்
மெல்லப் பூசப்படுகிறது!

கீறப்பட்ட இடத்தில் தடவிக்கொள்ளப்படும்
ஒரு போதைத் தூள் போல,
உடலெல்லாம் பரவி
மொத்த உயிரையும் தன் கட்டிற்குள் வைக்கிறது
அந்த ராட்சச வலி!

கண்கள் மெல்லச் சொருகிக் கொள்ள
விரல்கள் காற்றில்
யாரையோ தேடுவது போலத் தெரிகிறது!

யாருமேயில்லா அவ்விடத்தில்,
சட்டென்று
ஒரு பெண்ணின் கழுத்து பிடிபடுகிறது!

உணர்ச்சிகள் இழந்த உதடுகள்
வார்த்தை பளு தாளாமல்
தானாகப் பிளந்து கொள்கிறது!

உள் எட்டிப் பார்க்கையில்
பாவம் நாவு
இறந்து கிடக்கிறது!

உறங்கிப் போகும் உயிரையெழுப்ப
இதயம் தன் கடைசி முயற்சி செய்கிறது!
லப் டப்!

சிறிது நேரத்தில்
அங்கு உயிர்
இருப்பது போலவும் தெரியவில்லை!
இருந்தது போலவும் தெரியவில்லை!

காதல் செய்யும்
கருணைக் கொலைகள்.. தொடரும்!!!

மெய்யுணர்தல் 1

பெற்றோர், நண்பன், காதலி, மனைவி, குழந்தைகள் இப்படியாக எல்லோரும் துணை தான். ஆனால், இவர்கள் எல்லோரும் உணர்வுகள் கொண்டவர்கள், காயப்படும் இயல்புடைய உள்ளம் படைத்தவர்கள், எல்லாவற்றிற்கும் மேலாக எமனுக்குக் கடன் பட்டவர்கள், எப்போது வேண்டுமானாலும் தனிமையைப் பரிசளித்துவிட்டு கையசைத்து விடுவார்கள். உங்களின் விருப்பங்கள் பற்றியெல்லாம் யோசிக்கும் அளவிற்கு இங்கு யாருக்கும் நேரம் இருப்பதில்லை. உண்மையில், நேரம் கொடுக்கப்படவில்லை.

சில சமயங்களில், நம்மையும் மீறி, நாமே அறியாமல், நாம் சுயநலமாக நடந்து கொள்வதுண்டு. அப்படி நான் செய்தது தான் இந்தத் தமிழ் மீதான என் காதல் என நினைக்கிறேன். எப்படி யோசித்துப் பார்த்தாலும் இரண்டே காரணங்கள் தான் தோன்றுகிறது. ஒன்று, மொழிக்கு உயிர் வரையறை கிடையாது, எனது விருப்பமின்றி என்னை எப்படியும் பிரியாது. இரண்டு, தனிமையை என் விருப்பத்திற்கு மாற்றியெழுத எனக்கு ஒரு துணை. போதுமே!

Friday, September 13, 2013

நன்றியுடன் காகிதம்!

ஒரு காகிதம், பேனாவிற்கு எழுதும் கடிதமாகப் பார்க்கவும்.

கிழிபடும் என்னை வழிபடச் செய்தாய்!
சுவாசிக்க வைத்தாய்..
பிறர் வாசிக்கவும் வைத்தாய்!

கவிகளின் ஒரு கையாய்,
அறிஞரின் மறு கைபோல்,
எழுத்தாளரின் உயிர்ரேகையே..
வியப்பளிக்கும் உன் வாழ்க்கை!

மேதைகளின் மேஜைகளில்
நீங்கா இடம் உனக்கு!
பாறையோ.. பனிச்சிலையோ..
தடம் மாற்றும் திறனிருக்கு!

நித்தம் நித்தம் உனக்கு யுத்தம் யாருடனோ?!
இரத்தச் சிதரல்களாய்
என் மேல் எழுத்துக்கள்!

உன் கூரிய உதடுகள் குத்தும் முத்தம்..
சத்தமின்றி என் மேல் சரித்திரம் படைக்குதே!

நீல இரத்தம் சிந்தும் இலட்சியவாதியே..
என் நிலை நிமிர்த்தத் தான்
உன்னுடல் சாய்க்கிறாயோ?!

எதிர்பாரா உதவிக்கு நீயே இமயம்!
மறவா பண்புக்கு நானோர் உபயம்!!

                                                        என்றும் நன்றியுடன்,
                                                        காகிதம்.