Friday, November 15, 2013

சச்சின்ன்ன்ன்…. சச்சின்!! - 2

கிரிக்கெட் எனக்குக் கொஞ்சமும் பழகிறாத நாட்கள் அவை. பக்கத்து வீட்டில் நம்மை விட பெரிய பையன் ஒருவன் இருந்து அவன் செய்வதையெல்லாம் நம் வயதையும் மீறி நாம் எப்படி செய்ய முயற்சிப்போமோ, உதாரணத்துக்கு, அவன் தன் முழுக்கைச் சட்டையை மடித்துவிட்டுக் கொள்ள நாமும் மடித்துவிட்டுத் திரிய முயற்சிப்போம், நாம் அணிந்திருப்பது அரைக்கை சட்டையாக இருக்கும் என்பது வேறு விஷயம், அப்படித்தான் அந்நாட்களில் என் சுற்றத்தின் நடுவில் மிகப் பிரபலமாகியிருந்த கிரிக்கெட்டை தொடர முயன்றேன். அந்த ஆரம்ப நாட்களில் எனக்கு தெரிந்த மிகப்பெரிய கிரிக்கெட் ரகசியங்கள் இரண்டு. ஒன்று பேட். மற்றொன்று பால். அதன் பிறகு கொஞ்சம் தேறி ஃபோர், சிக்ஸ், வைட் பற்றி தெரிந்து கொண்டேன். அப்போதும் நோ பால் சற்று குழப்பம் தருவதாகவே படும். அதையும் சிறிது நாட்களில் புரிந்துக் கொண்டேன்.

குழந்தைகளை கடைக்கு அழைத்துச் செல்கையில், அங்கு இருக்கும் சில மிட்டாய்களைச் சுட்டிக் காட்டி, அது வேணும் என்று கேட்பார்கள். எனக்கு ரொம்ப பிடிக்கும் எனச் சொல்வார்கள். உண்மையில் அதை அதுவரை கண்ணால் பார்த்திருக்கக் கூட மாட்டார்கள். ஆனாலும் அவர்களுக்குப் பிடிக்கும் என்பதில் அவ்வளவு நேர்மையாக தங்களைக் காட்டிக் கொள்வார்கள். அப்படிக் காட்டிக் கொள்வதில் உண்மையில் கொஞ்சம் உண்மையும் இருக்கும். பிடித்திருக்கிறது என்பது தான் அந்த நேர்மையான உண்மை. அப்படி கிரிக்கெட்டில் எனக்குப் பிடித்த வீரர் சச்சின்.

1998-இன் ஒரு ஏப்ரல் இரவு அது. பத்து மணியை கடந்த நிமிடங்களில் எனக்குத் தூக்கம் சொக்கிக் கொண்டிருந்தது. கூடத்தில் இருந்த தொலைக்காட்சிப் பெட்டி முன்பு என் அப்பாவும் இரண்டு சித்தப்பாக்களும் ஏறத்தாழ சிலைகள் போல அசைவற்றுக் கிடந்தார்கள். அப்பாவை, ‘தூங்க வா’ என எங்கே நச்சரிக்கத் தொடங்கிவிடுவேனோ என்ற எச்சரிக்கையில், எனது பலவீனம் அறிந்து, உனக்குப் பிடிச்ச சச்சின் ஆடுறான் பாரு என்று சொன்னார்கள். சச்சின் என்று சொல்லிவிட்டார்களே, அப்புறம் என்ன சொல்லுவது, நானும் தூக்கத்தைக் கட்டுபடுத்திக் கொண்டு உட்கார்ந்திருந்தேன்.

டக்வர்த் லூயிஸ் விதி, நெட் ரன் ரேட் என எனக்குக் கொஞ்சமும் விளங்காத விஷயங்களை என் அப்பாவும் சித்தப்பாவும் பேசிக் கொண்டிருந்தார்கள். நிர்ணயிக்கப்பட்டிருந்த இலக்கை நோக்கி ஆடிக் கொண்டிருந்த இந்தியா சில விக்கெட்களை இழந்து தடுமாறிக் கொண்டிருந்தது என்பது அவர்கள் பேசிக் கொண்டிருந்ததை வைத்து என்னால் அப்போதே புரிந்துக் கொள்ள முடிந்தது. சச்சின் மீது மொத்த நம்பிக்கையையும் வைத்து மொத்த இந்தியாவும் விழித்திருந்த இரவுகளில் அதுவும் ஒன்று. என் அப்பா சித்தப்பாவும் அப்படித்தான் சிலையாகி இருந்திருக்க வேண்டும்.

“இந்த மேட்ச் தோத்துட்டா நம்ம ஃபைனல் போக முடியாதா?” என் அப்பா.

“அப்படி சொல்ல முடியாது. தோத்தாலும் நெட் ரன் ரேட் நல்லா இருந்தா நியூசிலாந்த ஓரங்கட்டிட்டு நம்ம ஃபைனல் போயிடலாம்”, இது என் சித்தப்பா.

“ஓ!”, என் அப்பா.

“ஓ ஹோ!”, இது நான்.

ஆங்கிலம் அவ்வளவாய் படிக்கத் தெரியாதவர்கள் நாளிதழ்களில் உள்ள எழுத்துக்களை நிராகரித்துவிட்டு படங்களை வேடிக்கை பார்ப்பது போல நான் அவர்கள் பேசிக் கொண்டிருந்ததையெல்லாம் மொத்தமாய் நிராகரித்துவிட்டு சச்சினை மட்டும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன். ஒரு கட்டத்திற்கு மேல், தூக்கத்தை கட்டுப்படுத்த முடியாமல் என் அப்பா மடியில் தலை வைத்து உறங்கியிருந்தேன். இடையிடையே சச்சின் விளாசிய ஃபோர், சிக்ஸர்களுக்கு என் சித்தப்பா ஆர்ப்பரித்ததில் தூக்கம் பூசப்பட்டிருந்த கண்கள் திறந்து பார்த்த ஞாபகம் கொஞ்சமாய் இருக்கிறது. மற்றபடி வேறெதுவும் நினைவில் இல்லை.

அடுத்த நாள் காலை எழுந்த போது, இந்தியா ஃபைனலில் நுழைந்துவிட்டதென அப்பா சொன்னார். “சச்சின்?” என்றேன். “சென்ட்சுரி!” என்றார். எனக்கு சச்சினை மேலும் சில மடங்குகள் அதிகம் பிடிக்கத் தொடங்கியது. நான் தூங்கியதில் பார்க்கத் தவர விட்ட சச்சினின் அந்த மேஜிக்கல் இன்னிங்க்ஸை அதன் பிறகு பலநூறு தடவை மறு ஒளிபரப்பாகவும், யூ ட்யூபிலும் பார்த்தாகி விட்டது. இன்று பார்த்தாலும் உடல் புல்லரித்துப் போகச் செய்யும்.

1998-இல் இந்தியா-ஆஸ்திரேலியா-நியூசிலாந்து நாடுகளுக்கு இடையில் நடைபெற்ற முத்தரப்பு ஒரு நாள் தொடர், கோகோ கோலா கப்-இன் கடைசி லீக் ஆட்டம் அது. முதலில் ஆடிய ஆஸ்திரேலியா ஐம்பது ஓவர்களில் 284 குவித்தது. பின்னர் டக்வொர்த் லூயில் விதிப்படி வெற்றி இலக்கான 277-ஐ 46 ஓவர்களில் எடுக்க வேண்டும் என்று நிர்ணயிக்கப்பட்டது. மற்ற வீரர்கள் ஒரு பக்கம் சொர்ப்ப ரன்களில் பெவிலியன் திரும்பிக் கொண்டிருக்க, ஆஸ்திரேலிய பத்துவீச்சை துவம்சம் செய்து சச்சின் அசுரத்தனமாக விளையாடி 143 ரன்கள் குவித்து ஆட்டமிழப்பார். 46 ஓவர்களின் இறுதியில் இந்தியா 250 ரன்கள் மட்டுமே எடுத்து 26 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வியைத் தழுவும். ஆனால்.. அந்த தோல்விக்கு முன், இந்தியா ஃபைனலில் நுழைய என்ன தேவையோ அதை சிறப்பாக செய்து முடித்திருப்பார் அந்த கிரிக்கெட் கடவுள்.

ஆம்.. சாகப் போகிறவர்களை சாவிலிருந்து காப்பாற்றுபவர் கடவுள் எனில், எங்கள் சச்சினும் கடவுள் தான்.

No comments:

Post a Comment