அவள் பிறந்து ஓரிரு வாரங்கள் இருக்கும்.
இரவு எந்நேரமும் அழுதுக் கொண்டே இருப்பாள்.
அது பசியா, தூக்கமா, வலியா அல்லது உடலுக்கு வேறேதேனும் கஷ்டமா ஒன்றுமே விளங்காது.
கண்களை இருக்க மூடி அவளது பிஞ்சு இதழ்கள் வழி கசியும் அந்த அழுகைச் சத்தத்தை இன்று நினைத்துப் பார்த்தாலும் என்னை ஏதோ செய்கிறது.
எத்தனையோ இரவுகளில் அவள் பாட்டி குழந்தைய அழாம எந்தக் கஷ்டமுமில்லாம பாத்துக்கோ தாயி என அம்மனுக்கு காசு முடித்து வைத்திருக்கிறாள்.
மடியில் கிடத்தியும், தோளில் சுமந்து நடந்தும், கைகளையே தூலியாக்கியும், பிறகென்னென்னவோ செய்துப் பார்த்தும் நின்றுப்போகாத அந்த அழுகை கொஞ்சம் கொஞ்சமாக தானாகவே அடங்கி ஒரு கட்டத்தில் அவள் தூங்கிப் போவாள்.
ஏன் அழுகிறாள் என்ற கேள்விக்கு மட்டும் எந்த ஒரு இரவிலும் பதில் கிடைத்ததில்லை.
குழந்தைகளின் அழுகைச் சத்தத்திற்கு எரிச்சலடைந்த காலமெல்லாம் கடந்து இரண்டு நாட்களுக்கு முன்பு நான் வசிக்கும் அபார்ட்மெண்டின் நான்காவது தளத்திலிருந்து ஒலித்த ஒரு பச்சிளம் குழந்தையின் அழுகுரலுக்கு என்னைப் பதறிப் போகச் செய்திருப்பவள் என் மகள்.