Tuesday, October 8, 2013

விவாகரத்து செய்யேல்!!

எண்ணிக்கையில் பெருகி வரும் விவாகரத்துகள் பற்றிய ஒரு கவலையாய் தன்னை அடையாளப்படுத்திக் கொண்ட ஒரு பதிவில், ஒரு கணவனும் மனைவியும் நீண்ட காலம் சேர்ந்து குப்பை கொட்ட சார்பு நிலை அவசியம் என்பது போல சொல்லப்பட்டிருந்தது. அதாவது, இன்று அறுபதாம் கல்யாணம், என்பாதம் கல்யாணம் எனக் காணும் பெருசுகளின் காலத்தில், சம்பாதிக்கும் இடத்தில் வகித்த கணவனைச் சார்ந்து மனைவிமார்களும், குழந்தைகளைப் பெற்றெடுத்து, அவர்களின் வளர்ப்பு, வீட்டு நிர்வாகம், சமையல் என இதர வீட்டு வேலைகளைக் கவனித்துக் கொண்ட மனைவியைச் சார்ந்து கணவன்மார்களும் இருந்ததால் அந்த தம்பதியர்களால் நாற்பது ஐம்பது ஆண்டுகள் சேர்ந்து வாழ முடிந்ததாகச் சொல்லிப் போகிறது அந்தப் பதிவு.

சார்பு நிலை அவசியம் என்பதில் எனக்கு சற்றும் உடன்பாடு இல்லை. கணவன் உத்தியோகமற்று, சம்பாத்தியமற்ற நிலையிலும் கூட, எத்தனையோ குடும்பங்களை பெண்கள் தன்னந்தனியாகவே கையாள்கிறார்கள். சுமாராக சமைக்கும், குழந்தை பெறாத மனைவியோடு கூட கணவன்மார்கள் அன்போடு வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார்கள். அடிப்படையில், தன் துணை புரியும் தவறுகளையும் அவர் தம் குறைகளையும் ஏற்றுக்கொள்ளவதில் தான் இங்கு பலருக்கும் பிரச்சனை. தன் துணையைவிட இவ்வுலகின் எந்த விஷயமும் பெரிதில்லை என்ற உண்மையான எண்ணம் உள்ளவர்களாக மாறுவதில் தான் நம்மில் பலரும் தவறுகிறோம்.

***
தவறுகள் புரியாத ஒருவனுக்கும்
தவறுகள் புரியாத ஒருத்திக்கும்
திருமணம் என்பது சாத்தியமேயில்லை!
அது இயற்கைக்கு முரணானதும் கூட!!

***
சில சமயங்களில்,
நம்மிடமே நாம் நம்
தோல்வியை ஒப்புக்கொள்வதில்லை!
புதிதாய் இணைந்த உயிர் மட்டும்
எப்படி விதிவிலக்காகும்..
ஏற்றுக்கக் கற்றுக்கொள்ளுங்கள்!

No comments:

Post a Comment