Thursday, January 9, 2014

ஐ.டி எம்ப்லாயீஸ் என்றாலே தியாகிகள் தானே!

ஒரு மணிநேரத்திற்கு முன்பு (இப்போ பத்து பத்தாகுது) இரவுக்கான உணவை ஆர்டர் செய்துவிட்டு பார்சலுக்காக ஒரு பிரபல ஹோட்டலில் காத்திருந்தேன். நான் அமர்ந்திருந்த நாற்காலிக்கு இடதுபுறம் இருந்த நாற்காலி காலியாக இருந்தது. இருபத்து எட்டு வருகிறது, முப்பத்து மூன்று வருகிறது, நாற்பதுக்கான பில்லும் தயாராகிறது, எனக்கான முப்பது மட்டும் இன்னும் காணும், காத்திருந்தேன்.

‘பேருக்குத்தான் பெரிய ஹோட்டல், இவனுங்க ஒரு தோச கொடுக்குறதுக்குள்ள அரிசி ஊற வச்சு மாவறச்சு தோச சுட்டுறலாம்’ என்று நொந்துக் கொண்டிருந்த என்னைப் போல் ஒருவனை, ‘அட.. பார்க்கலாமே!’ எனத் திரும்பிய போது, ஒரு சிறுமியின் குறுகுறுப் பார்வை என் கண்களை மொத்தமாய் மறைத்திருந்தது. காலியாக இருந்ததாக நான் சொன்ன அந்நாற்காலி மீது தன் முழங்கால் ஒன்றை ஊன்றியபடி, விசித்திரமான ஒரு பார்வைக்கேவுரியச் சாய்ந்த தலையோடு என்னையே பார்த்துக் கொண்டிருந்தாள். எனக்கு ஒரு மாதிரியாக இருந்தாலும், ‘குழந்தையாச்சே.. சிரிச்சு வைப்போம்’ என்று சிரித்தேன். அவளிடம் சொல்லிக்கும்படியான எந்தவொரு அசைவும் இல்லாமல் போனது என்னை மேலும் ஒரு மாதிரியாக்கியது.

பொதுவாக, இது மாதிரியான பொது இடங்களுக்குச் செல்லும் போது, அங்கு இருக்கும் பெண் குழந்தைகளை (குழந்தைகளை மட்டும் தான்) கண்ணடித்துக் காட்டி நான் வம்பிழுப்பதுண்டு. அவைகளும், அம்மாவின் முந்தானைக்குப் பின் ஒளிந்திருந்துவிட்டு மீண்டும் எட்டிப் பார்க்கும். எங்களுக்குள் ஒரு விளையாட்டு அது. ஆனால், இந்த அனுபவம் இது தான் முதல் முறை. நான் எவ்வளவு தான் பார்வையைத் தவிர்த்தாலும், அந்தச் சிறுமி விடுவதாகத் தெரியவில்லை. ஒரு கட்டத்தில், என் இடது கை மணிக்கட்டு அருகில் லேசாகச் சொறிந்தாள். திரும்பினேன்.

சிரித்தாள். பதிலுக்குச் சிரித்தேன்.

‘இது என்ன கீறியிருக்கு’ என்று என் கன்னம் மேலுள்ள ஒரு தழும்பைச் சுட்டி மழலையாகக் கேட்டாள். ‘அதுவா.. உன்ன மாதிரி சின்னதா இருக்கும் போது, உன் ஃபிரண்ட் மாதிரி ஒருத்தன் விளையாட்டா கீறிட்டான்’ என்று விளையாட்டாகத் தான் சொன்னேன். அது ஏனோ, அதுக்கும் பக்கத்து நாற்காலியில் அமர்ந்திருந்த ஒரு விஷமம் பிடித்தவனுக்குப் பிடிக்காமல் போயிற்று. அவன் அந்தச் சிறுமியிடம், ‘வேற ஒன்னுமில்லடா.. அந்த மாமா, ஒழுங்கா படிக்காம முட்ட மார்க் வாங்கினாங்களா (இந்த இடத்தில் என்னை ஒருமுறை அவன் பார்த்துக்கொண்டதும், அச்சிறுமி உம் கொட்டியதும், ரொம்ப முக்கியம் என்று உள்ளுக்குள் நான் குமுறிக் கொண்டதும் சொல்லி மாளாது), அதான்.. அவங்க டீச்சர் கன்னத்து மேலேயே சூடு வச்சுட்டாங்க’ என்று முடித்தான். அவனை முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்த என்னை நோக்கி, ‘கொயந்த பாஸ்’ என்பது போலச் சிரித்தான். நானும் சிரித்துத் தொலைத்தேன்.

தலைவர் கவுண்டமணியின் கிளாசிக் ஒற்றை வரியைத் தழுவிய ஒரு வரி மட்டும் எனக்குள் எக்கோ மோடில் சரியாக மூன்று முறை ஒலித்தது.

Wednesday, January 8, 2014

மேக்கிங் ஆஃப் ‘அடிமை கனவுகள்’

ஒவ்வொரு அடிமையின் மனதிற்குள்ளும் தனக்கும் ஒரு நாளில் விடுதலை கிடைக்காதா என்ற ஏக்கம் இருக்கும். நிஜத்தில் கிடைக்காத ஒன்றை கனவுகளில் கொண்டாடப் பழகிய மனிதர்கள் என்ற வகையில் தனக்கு விடுதலை கிடைக்கும் அந்த நொடி எப்படி இருக்கும் அல்லது எப்படி இருக்க வேண்டும் என்பதை ஒரளவிற்கு முடிவு செய்திருப்பார்கள். அது பலவருட அடிமைத்தனத்தின் பாதிப்பாகவோ, நியாயமான ஒரு எதிர்ப்பார்ப்பின் நிழலாகவோ அவர்களின் ஆழ் மனதிற்குள் எழுப்ப ஆளில்லாமல் தூங்கிக்கொண்டிருக்கும்.

ஆழ்மன எண்ணங்கள் தான் கனவுகளாக மாறுகின்றன என்பது அறிவியல் நமக்குள் புகுத்தியிருக்கும் நம்பிக்கை. அதன் அடிப்படையில், விடுதலைக்கான அக்கணம் அவ்வப்போது கனவுகளில் வந்து போவதில் ஆச்சர்யம் இல்லையெனினும், வந்து.. போய்விடுகிறது என்பதிலுள்ள சொல்லழுத்தம் வலியை மட்டுமே தரத்தக்கது.

கள்ளம் அறியாத ஒரு குழந்தையின் சுவாசத்தில் புத்துயிர்பெறும் சோப்பு நுரை, எப்படி கம்பிகளின் பிடியிலிருந்து விலகி, நீர்குமிழிகள் உருவத்தில் புதுவாழ்க்கை பெற்று, சுதந்திரக் காற்றில் மிதந்துச் செல்கிறதோ, அதற்கு நிகரான ஒரு விடுதலையை, சங்கிலிகள் அனுமதித்த எல்லைகளுக்குள் சுருங்கிப் போய்விட்ட ஒரு இருட்டு உலகத்தில் வாழும் தானும் பெற ஏங்கிடும் ஒரு அடிமையின் குமுறலாக எழுத நினைத்ததன் விளைவு தான் ‘அடிமை கனவுகள்’.

Tuesday, January 7, 2014

அடிமை கனவுகள்

ஒரு பிஞ்சுக் கை பற்றியிருக்கும்
பிளாஸ்டிக் உடையணிந்த துருபிடித்தக் கம்பியின்
மறுமுனை வளைவில் பூத்திருந்த ஒரு துளையை
அதுவரையில் திரையிட்டிருந்த சோப்பு நுரை

இன்னும் கள்ளம் மொழிந்திடாத நாவின்
எச்சில் ஈரம் தொட்டு வீசிடும்
சில்லிட்ட சுவாசக் காற்று
ஜவ்வுபோல இழுத்ததில் பிய்ந்து

சிறகுகள் முளைத்த
பல கண்ணாடிப் பறவைகளாகி
ஒரு வெட்டவெளியில்
சுதந்திர ஊர்வலம் புறப்படுகையில்

ஒரு அடிமையின் கனவு
ஒவ்வொருமுறையும் கலைக்கப்படுகிறது.

Monday, January 6, 2014

மெய்யுணர்தல் 6

பள்ளியில் காலை இறைவணக்கக் கூட்டத்தில் ‘இன்றைய சிந்தனை’ என்ற பெயரில் தினமும் ஒரு வாசகம் இடம்பெறும். ஆங்கில வழி பாடம் கற்பிக்கும் முறையை வழக்கத்தில் கொண்டிருந்த ஒரு மெட்டிரிக்குலேஷன் பள்ளி என்பதால், ‘டூடேஸ் தாட் இஸ்..’ என்று ஆரம்பித்து, சுழற்சி முறையில் தேர்ந்தெடுக்கப்படும் ஒரு மாணவனோ மாணவியோ மைக் முன் அவதரித்து, பெரும்பாலான நாட்களில் ஊர் பெயர் தெரியாத யாரோ ஒரு வெளிநாட்டுப் பிரபலம் சொன்னதை, மனப்பாடம் செய்தபடி அப்படியே ஒப்பித்துவிட்டு மறைந்துவிடுவர்.

அந்தக் காலக்கட்டத்தில், அப்படிப் பகிரப்பட்ட எந்த ஒரு தாட்-க்கும் முக்கியத்துவம் கொடுத்து உணர முயற்சிக்காத நாம், இன்று வாழ்க்கையில் வெறும் அனுபவங்களை மட்டுமே பரிசளித்திருக்கும் தருணங்கள் பல கடந்து வந்துவிட்ட பிறகு, நம் நிலைக்குப் பொருந்தும் மேற்கோள் சுமக்கும் புகைப்படங்களை தேடிப் பிடித்து, கொஞ்சமும் சலிக்காமல் பேஸ்புக்கில் பகிர்ந்தும், மணிக்கணக்கில் அவற்றையே திரும்பத் திரும்ப வாசித்தும் வலியாற்றிக் கொள்கிறோம்.

எவ்வளவு படித்தும் விளங்கிறாத சில மேற்கோள்களின் அர்த்தம், பட்டால் தான் புரிகிறது.

பெத்த ரசிகரூ.. ஊ… ஊ

சச்சின், ரஹ்மான், வைரமுத்து இவர்களின் தீவிர ரசிகன் என்று சொல்லிக் கொள்வதற்கு அவர்களைப் பற்றிய ஏ டூ சட் தெரிந்து வைத்திருக்க வேண்டும் என்று ஒரு போதும் நினைத்ததில்லை.

அப்படித் தெரிந்து வைத்திருக்கும் ஒரு ரசிகனை எங்கேனும் சந்திக்க அல்லது அவர் பற்றி படிக்க நேரும் போது, ஒரு வியப்பு பிறந்திருக்கே தவிர, எந்த ஒரு தாழ்வு மனப்பான்மையோ ஒருவித குற்ற உணர்ச்சியோ என்னை தொந்தரவு செய்ததில்லை.

புள்ளி விவரங்களை தெரிந்து வைத்திருப்பவன் தான் பெரிய ரசிகன் என்று சொல்வதானால், செய்திகள் கோர்க்கும் பத்திரிக்கைக்காரர்கள் தான் அந்தப் பட்டியலில் முதலில் நிற்பார்கள்.

என்னைப் பொருத்தவரையில், தான் நேசித்துத் தொடரும் ஒரு பிரபலத்தை, ஏன் அப்படி நேசிக்கிறோம், எதனால் அவ்வளவு தீவிரமாய் தொடர்கிறோம் என்பதை புரிந்து வைத்திருக்கும் ஒவ்வொருவரும் பெரிய ரசிகர் தான்.