நியாயம் ஒவ்வொரு முறையும் மிக நேர்மையாகத் தான் தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ள முயற்சிக்கிறது. நாம் நிராகரித்து விடுகிறோம். தன் பக்கம் இருக்கும் உண்மைக் காரணங்களை ஒரு முறை உரக்கப் பேசிப் பார்க்கிறது. அவற்றை ஏற்க மறுத்து விடுகிறோம். கொஞ்சம் பொறுமையிழப்பதில் எட்டிப்பார்க்கும் தன் கோபத்தின் வாயைப் பொத்தி அதனை தனக்குள் இறுக்கி அமர்த்திவிட்டு தரையிறங்கியும் பார்க்கிறது. பதிலுக்கு ஒரு பெருந்தோல்வியை தூக்கி அதன் கைகளில் வைத்து விடுகிறோம். தோற்க விரும்பாதவர்கள் அவர்களுக்கென எழுதப்பட்டத் தோல்வியை தனக்குக் கொடுத்துவிட்டுத் தப்பிக்கப் பார்ப்பார்கள் என்ற வழக்கம் புரிய வர, இனியும் போராடிப் பிரயோஜனம் இல்லையென ஒரு கட்டத்தில் மௌனம் நாடுகிறது. சந்தர்ப்பங்களை தனக்குச் சாதகமாக்கிக் கொள்ளப் பழகிவிட்ட மனித குணம் அந்த மௌனத்தையும் விட்டு வைப்பதாயில்லை. தோல்விக்கான நியாயத்தின் ஒப்புதல் என அதற்கு ஒரு பட்டம் கட்டி நியாத்தின் நிஜத்தை மொத்தமுமாய் அழித்துவிட முயற்சிக்கிறோம். மனிதன் ஒரு மிருகம். ஒப்புக்கொள்ள வேண்டி உள்ளது.
No comments:
Post a Comment