இந்த தனியார் சானல்களில் ஒளிபரப்பப்படும் பாட்டு நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துக்கொள்ளும் பாடகர்கள் ஓரிரு வரிகள் பாட, அது படு மொக்கையாகவே இருந்தாலும், போட்டியாளர்கள் முதல் நடுவர்கள் வரையில் பேசி வைத்தது போல எல்லோரும் “ஆஹா.. ஓஹோ.. அடடடடடடா.. அப்பப்பப்பப்பா..” என்று ஓவராக ரியாக்ட் செய்கிறார்கள். அவர்கள் போடும் சீனுக்கு நம் ஞானத்தின் மீது வேற நமக்குச் சந்தேகம் வருகிறது. இது போன்ற நிகழ்ச்சிகளை முற்றிலும் புறக்கணிக்கலாம் என சில நேரங்களில் எண்ணினாலும் விளம்பர யுத்திகளுக்கு அடிமையாகிப் போய்விட்ட நம் புத்தி கேட்டுத் தொலைக்க மாட்டேங்குறது.
ஒரு காலத்தில் தலை சிறந்து விளங்கிய ஒரு இசைக் கலைஞரை சபையில் வைத்து நீங்கள் பாடியதில் பிழையிருந்தது எனச் சுட்டிக்காட்டி சங்கடத்தில் தள்ளவோ அவமானப்படுத்தவோ வேண்டாம் என்பதில் நானும் உங்களோடு தான் நிற்கிறேன். அதே நேரத்தில், பொய் கலந்த ஒரு மிகைப்படுத்தப்பட்ட பாராட்டு என்பது அங்கு தேவையில்லை, அதை அவர்கள் விரும்பவும் மாட்டார்கள் என்றே தோன்றுகிறது. அவர்கள் வரட்டும், அவர்களால் முடிந்தளவு பாடட்டும், இதுவரையில் இசைக்கு அவர்கள் செய்த மரியாதையை அவர்களுக்குத் திருப்பிக் கொடுக்க முயற்சிப்போம், அவர்களுடனான நினைவுகளை தேடி எடுத்துப் பகிர்வதில் மகிழ்ச்சி கொள்வோம், எழுந்து நின்று கை தட்டுவோம், காலில் விழுந்து வணங்குவோம், அத்தோடு நிறுத்துக் கொள்வோம். அவர்கள் பாடிய பாட்டோ மீட்டிய இசையோ அவர்களை கௌரவப்படுத்திய அளவிற்கு நாம் ஒன்றும் பெரிதாகச் செய்துவிட முடியாது என்பது என் தாழ்மையான கருத்து.
No comments:
Post a Comment