Thursday, November 7, 2013

ஹ்ம்ம்ம்.. அது தீபாவளி!!

பண்டிகை நாளுக்கு முன்னர் இரண்டு மூன்று நாட்கள், பின்னர் ஒரிரண்டு நாட்கள் என விடுமுறை காலம் தன் இஷ்டத்திற்கு விரிந்து கிடக்கும். பத்து இருபது நாட்கள் முன் தொடங்கியே வீட்டில் கை முறுக்குகள், இனிப்புப் பண்டங்கள் எனத் தயாராகத் தொடங்கி மணம் வீசி வந்திருக்கும். போதாத குறைக்கு சொந்தங்கள் நண்பர்கள் வீட்டிலிருந்து வேறு தூக்கு தூக்காய் வந்து இறங்கியிருக்கும்.

இரத்தக் கொதிப்பு, சக்கரை வியாதி போன்ற குறைபாடுகளால் கைகள் கட்டிப் போடப்பட்டிருந்தாலும், கொஞ்சமும் கட்டுப்படாத குழந்தை மனம் வீட்டுப் பெரியவர்களை ஒரு சில அதிரசங்களையும் கை முறுக்குகளையும் திருட உட்படுத்தும் வேளையில், இனிப்புத் தூக்குகள் பத்திரப்பட்டிருக்கும் அலமாரிகளுக்குப் பின்னால் ஒளிந்து கண்ணாமூச்சி ஆடிக்கொண்டிருக்கும் குழந்தைகள் நம்மிடம் கையும் களவுமாக மாட்டிக் கொள்ள, நமக்கும் மாமூல் வழங்கப்பட்டிருக்கும்.

பள்ளி விடுமுறை தொடங்கும் முந்தைய நாள் மாலை கடைசி வகுப்பில் அப்பா அந்த வருடம் புதிதாய் வாங்கி வந்த ராக்கெட்களைப் ஏதோ ஏற்கனவே பத்த வைத்துவிட்ட களிப்பில் நாம் வானில் உயர பறந்து கொண்டிருப்போம். பள்ளி முடிவடைந்ததை குறிக்கும் அந்த கடைசி மணி ஒலிக்கையில் அந்த வருட தீபாவளிக்கு நம் ஊரில் வெடிக்கக் காத்திருக்கும் மொத்தப் பட்டாசுகளின் சத்தத்தையும் நாம் உரக்கக் கூச்சலிட்டு தோற்கடித்திருப்போம். நேரே வீடு சென்று, புத்தக மூட்டையிடம் ‘உனக்கும் எனக்கும் அடுத்த மூன்று நாட்களுக்கு வாய்கால் தகராறு’ என்ற ரீதியில் அதற்கு ஒரு பெரிய கும்பிடு போட்டு அறையின் ஒரு ஓரத்தில் கிடாசிவிட்டு, பட்டாசுப் புகையினுள் தொலைந்து போயிருப்போம்.

அங்கு தொடங்கி அடுத்து பள்ளி துவங்கும் நாள் வரை எந்நேரமும் வெடி மருந்துகள் அப்பப்பட்டே காட்சி தரும் நம் கை விரல்களை ஒவ்வொரு உணவுக்கு முன்னும் ஹமாம் சோப்புகள் காப்பாற்றிக் கொடுத்திருக்கும்.

இப்படியெல்லாம் தீபாவளியை கொண்டாடிவிட்டு இன்றும் கொண்டாடுகிறோமே (?) உப்பு சப்பில்லாத ஒரு தீபாவளியை.

No comments:

Post a Comment