Friday, November 8, 2013

செவ்வாய் தோஷம்

செவ்வாய் கிரகம், மங்கள்யான் எனப் பேசிக் கொண்டிருந்த வேளையில் செவ்வாய் தோஷம் பற்றி சிலர் பேசி இருந்தார்கள். உடனே, செவ்வாய் தோஷம் இங்கு எத்தனை திருமணங்களை தடுத்து நிறுத்தியிருக்கும் என்ற கேள்வி எழுந்தது. நூறு? ஆயிரம்? லட்சம்? இன்னும் அதிகமாய் இருக்குமோ என்னவோ, தெரியவில்லை.

காலமும் படிப்பறிவும் இந்த நிலையை முற்றிலும் மாற்றிவிடும் என்று நம்பப்படுகிறது. ஆனால், சமீபத்தில் கூட ஒரு பொறியியல் பட்டதாரி இந்த காரணம் சொல்லி ஒரு பெண்ணை நிராகரித்ததாக ஒரு செய்தியை படித்த நியாபகம் இருக்கிறது. ஒரு வேளை இத்தகைய நிராகரிப்புகளின் எண்ணிக்கை முன்பைக்காட்டிலும் குறைந்துள்ளதாக ஆய்வுகள் சொன்னால் சந்தோஷம் தான்.

செவ்வாய் தோஷம் அப்படி என்னதான் சொல்லி இந்த மக்களை பயமுறுத்தியிருக்கிறது என்பதறிய சில வலைப்பக்கங்களை துழாவினேன். அவற்றின் படி, ஜாதகங்கள் மூன்று வகையாகப் பார்க்கப்படுகின்றன. செவ்வாய் தோஷம் உள்ளது ஒன்று, செவ்வாய் தோஷம் இல்லாதது இரண்டு, செவ்வாய் தோஷம் இருந்தும் சில விதிகளின் அடிப்படையில் அஃது செவ்வாய் தோஷம் அற்றது என்று எடுத்துக்கொள்ளப்படும் முன்றாவது. ஒரு ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் இருக்கிறது என்பதை எதன் அடிப்படையில் கணிக்கிறார்கள் எனப் புரிந்துக்கொள்ள முயன்றபோது, அங்கு லக்னம், வீடு என்று எனக்கு விளங்காத சொற்கள் மூலம் விளக்கியிருந்தார்கள், அதனால் விட்டுவிட்டேன்.

இரண்டாவது ரக ஜாதகம் இரண்டுடனோ, மூன்றுடனோ அல்லது மூன்றாவது ரகம் மூன்றுடனோ சேர்ப்பதில் எந்த பிரச்சனையும் இல்லை என்று சொல்லும் அந்தப் பதிவுகள், முதல் ரகம், அதாவது செவ்வாய் தோஷம் உள்ள ஜாதகத்தை இரண்டுடனோ, மூன்றுடனோ சேர்ப்பதை ஒப்புக்கொள்ளவில்லை. துணையின் உயிருக்கு ஆபத்து, தம்பதிகளுக்கு இடையில் தீரா மனப் பிரச்சனை, குடும்பத்தில் பணப் பிரச்சனை என இன்னும் நீள்கிறது அந்த விளைவுகள் பட்டியல். அவர்கள் திரும்பத் திரும்பச் சொல்வதெல்லாம் ஒன்றே ஒன்று தான். செவ்வாய் தோஷம் உள்ள ஒருவரை செவ்வாய் தோஷம் உள்ள இன்னொருவரோடு தான் சேர்க்க வேண்டும். மைனஸ் இன்டு மைனஸ் பாடிடிவ் என்ற விதிப்படியோ என்னவோ.

இதையெல்லாம் வீட்டில் பெற்றோர்கள் பார்க்கும் வரன்களுக்குச் சரி, காதல் திருமணங்களுக்கு என்கிறீர்களா? நியாயப்படி நீங்கள் ஜாதகமே பார்க்கக் கூடாது. காதலை உங்களுக்கு அறிமுகப்படுத்திய விதியிடமே உங்கள் வாழ்க்கையையும் ஒப்படைத்துவிட்டு வாழ்வின் இரண்டாம் அத்தியாயத்தை நம்பிக்கையுடனும் மகிழ்ச்சியுடனும் தொடங்குங்கள். சொல்லப்பட்ட விளைவுகளில் பெரிதாய் தெரியும் உயிர் இழப்பைத் தவிர வேறு எதையும் நல்லதொரு புரிதல் கொண்டு சமாளித்துவிடலாம். அப்போ உயிரிழப்பு? உங்களுக்காக ஏற்கனவே பதில் எழுதிவிட்டார் சுஜாதா. “சாகுற நாள் தெரிஞ்சு போச்சுனா, வாழ்ற நாள் நரகமாய்டும்.” :)

சரி, இந்த செவ்வாய் தோஷம் நம்மைப் பிடிக்காமல் இருக்க என்ன செய்யலாம்? ரொம்ப சிம்பில். செவ்வாய் தோஷம் பற்றிய இந்நம்பிக்கைகள் நமக்குப் பிடிக்காமல் போக வேண்டும்.

# இப்படியே விட்டா ஜலதோஷம் பிடிச்சவங்களுக்கு ஜலதோஷம் பிடிச்சவங்கள தான் கல்யாணம் பண்ணி வைக்கணும் னு சொல்லுவாங்க போல. சும்மா ஒரு காமெடிக்கு.

No comments:

Post a Comment