Friday, August 30, 2013

ஜன்னல் தோழி!!

கடனுக்குக் காற்றைப் பெற்று,
விலையின்றி நமக்கு விற்கும்
பொதுநலப் பிரதிநிதி அவள்!

கடன் கொடுக்கினன் சினம் எடுப்பின்,
பதைபதைத்து, கதவடித்து
சூறாவளி தடுத்திடுவாள்!

அணல் வெயில் கக்கும்போதும்,
துளிவியர்வை துடைத்திடவே..
சுடுமென்றும் பாராமல்,
தனை மறந்துத் தாழ் திறக்கிறாள்!

கடுமழை கொட்டுகையில்..
சில்லென்றக் காற்றோடு,
சிறுசிறுச் சாரல் சேர்த்து
சருமம் ஈரமாக்குமே..
சுகமான நினைவுகள்!

பொழுதும் சாய்ந்திடவே..
நிலமகளைக் கண்டிடத்தான்
நிலாமகள் வந்திடுவாள்.
அத்தேவதையின் தேகத்தோடு,
தென்னங்கீற்றும் கொஞ்சுமந்த
அழகான காட்சியைத் தான்
கொடுத்தே கொன்றிடுவாள்!!

Friday, August 2, 2013

என்னுள்ளும் ஒரு குழந்தை!

முன்பொரு நாள்
கோயிலில் கண்ட காட்சி..

ஒரு வயதே ஆன
குழந்தை ஒன்று!

அவனை,
கையில் சுமந்தபடி
அவன் தாய்!

நம்மின் ஒவ்வொரு
விரல் அசைவும்
அவள் பழக்கிவிட்டது தானே..
இதோ,
அக்குழந்தையும் பழகுகிறது..
கடவுளை வணங்கிட!

பிஞ்சு கரங்களைக்
கூப்பும் முயற்சியில்
அந்த தாய்!

முத்தமிட்டுக் கொள்ளும்
தன் கைகளை
ஆவலாய் பார்க்கும்
அக்குழந்தை!

இனமறியா
ஒரு சிரிப்பு வேறு அதற்கு!!

தனது
கைகளை மட்டும்
கடவுளுக்கு கூப்பிவிட்டு,
கண்களால்
அவன் தாயை
தரிசிக்கிறது அப்பிஞ்சு!

தாய்மையும்,
மழலைத்தனமும்,
எனை வென்று விட்ட
கனம் அதில்..

என்னுள்ளும்
ஒரு குழந்தை மெல்ல,
எட்டிப்பார்த்து சிரிக்கிறது..
கண்ணில் சிறு துளிகளுடன்!!