நவம்பர் 16க்குப் பிறகு கிரிக்கெட் பார்ப்பதையே, இன்னும் சொல்லப் போனால், கிரிக்கெட் தொடர்வதையே நிறுத்திக் கொண்டுள்ளேன். திடீரென யாராவது ஸ்கோர் என்ன ஆச்சு என்று என்னைக் கேட்கும் போது தான், ‘ஆமா ல.. அப்படி ஒன்னு தொடர்ந்துட்டு தான் இருக்குல’ என்று ஒரு முறை முகம் துடைத்துக் கொள்கிறேன். ஒரு காலத்தில் முப்பொழுதிற்கும் உணவாக இருந்த கிரிக்கெட் இன்றைய தினத்தில் ‘கோலி தான் அடுத்த சச்சின்’, ‘மெய்யப்பன் விவகாரத்தில் வாய் திறக்க மறுத்தார் தோணி’ என்று ஃபேஸ்புக்கில் பகிரப்படும் சில செய்திகளின் தலைப்பைப் படிப்பதோடு நின்றுவிடுகிறது.
கடந்த ஞாயிறன்று கூட, ‘மாலை பேசுகிறேன்’ என்று காலை சொல்லியிருந்ததை மறந்து இரவு 9 மணிக்கு தொடர்பு கொண்ட போது, “ஃபைனலாச்சே.. மேட்சு பார்த்துட்டு இருப்ப னு நானும் விட்டுட்டேன்” என்று அம்மா சொல்லும் வரை, மார்ச் 30ம் தேதி ஆஸ்திரேலியாவிற்கு எதிரான யுவராஜின் சிறப்பான ஆட்டம் குறித்து அலுவலகத்தில் நண்பர்கள் சிலாகித்துக் கொண்டிருந்தது மறந்து போயிருந்தது.
யுவராஜ் சிங். 2002 இங்கிலாந்தில் நடைபெற்ற நாட்வெஸ்ட் தொடரில் பெவிலியன் பால்கனியில் சிவனேயென்று நின்று கொண்டிருந்த கங்குலி ஆவேசப்பட்டு தன் ஜெர்ஸியை கழற்றி காற்றில் சுழற்றியதற்கு முக்கியக் காரணமாகிப் போனதில் தொடங்கி இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரங்களில் ஒருவர்.
ஆஸ்திரேலியாவின் மைக்கேல் பெவனுக்கு நிகராகப் பேசப்படும் அளவிற்கு அவ்வளவு வெற்றிகளை உறுதிபடுத்தி சர்வதேச அளவில் மிகச் சிறந்த ஒரு நடுநிலை ஆட்டக்காரராக பெயர் எடுத்தவர்.
குனிந்தால் கையில் சுலபமாகச் சிக்கிவிடக்கூடிய பந்தைக் கூடப் பிடிக்க முயற்சிக்காமல், பௌன்டரி லைனில் நிற்க வைக்கப்பட்டிருக்கும் ஏதோவொரு உயரமான பந்து வீச்சாளரை நோக்கி கை தூக்கும் கலாச்சாரத்தில் மொத்த இந்திய அணியும் தத்தளித்துக் கொண்டிருந்த காலக்கட்டத்தில், பாய்ன்ட் ரீஜனில் இடப்பக்கம் ஒரு பத்து அடி, வலப்பக்கம் ஒரு ஏழு அடி, தலைக்கு மேல் ஒரு ஆறு அடி எனத் தன்னைச் சுற்றியும் பந்து எந்தத் திசையில் சென்றாலும் பறந்துப் பறந்து பிடித்தும், பிடித்த வேகத்தில் ஸ்டம்பை பதம் பார்த்தும் இந்திய அணியில் ஒரு ஃபீல்டிங் புரட்சியையே கொண்டு வந்த பெருமைக்கும் சொந்தக்காரர் இவரே தான்.
இதெல்லாம் போதாதென்று இக்கட்டானச் சூழ்நிலைகளில் எதிரணியின் முக்கிய பேட்ஸ்மன்களை தனது ஸ்லோ லெஃப்ட் ஆர்ம் மூலம் வீட்டுக்கும் அனுப்பி வைத்திருக்கிறார். மொத்தத்தில் கபில் தேவுக்குப் பிறகு இந்தியா கண்டெடுத்த மிகச் சிறந்த ஆல்ரவுன்டர் என்றால் அது யுவராஜ் தான்.
இருபது ஓவர் போட்டிகளுக்கான உலகக் கோப்பை 2007ல் தொடங்கி நடத்தப்பட்டு வருகிறது. அந்த முதல் உலகக் கோப்பையை இந்தியா வெல்வதற்கு ஜொகிந்தர் ஷர்மா பந்தை மிஸ்பா கிண்டிக் கொடுத்து அதை ஸ்ரீசாந்த் பிடித்துப் பைத்தியம் போல கத்தியதற்கெல்லாம் முன்னால், இந்தியாவை அந்த ஃபைனல் வரை கொண்டுச் சேர்த்ததில் யுவராஜின் பங்கு மகத்தானது. இங்கிலாந்துக்கு எதிரான முக்கிய க்ரூப் ஆட்டம் ஒன்றில் ஸ்டுவர்ட் ப்ராட் பந்து வீச்சில் ஒரே ஓவரில் ஆறு சிக்ஸர்கள், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் முப்பது பந்துகளில் எழுபது ரன்கள். இன்று வரை என்னால் மறக்க முடியாத இரண்டு இரவுகள் அவை.
அதன் பிறகு 2011 கிரிக்கெட் உலகக் கோப்பை. சச்சினின் கடைசி உலகக் கோப்பை. ஒரு வகையில் முதலாவதும் கூட. 1983 க்குப் பிறகு இந்தியா உலகக் கோப்பையை கைப்பற்றியது. அந்தத் தொடர் நெடுக்க பேட்டிங், பந்துவீச்சு, ஃபீல்டிங் என அனைத்துத் துறைகளிலும் யுவராஜ் தனித்துக் காணப்பட்டார். அவ்வளவு திறமையான யுவராஜை அதுவரை பார்த்ததில்லை என்றுகூட சிலர் புகழ்ந்துத் தள்ளினார்கள். எதிர்ப்பார்த்தது போலவே தொடர் நாயகன் விருது யுவராஜக்கே வழங்கப்பட்டது.
சில மாதங்கள் ஓடின. 2012 பிப்ரவரியில் யுவராஜ் புற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளார் என்ற செய்தி வெளியுலகிற்குத் தெரிய வந்தது. ஒரு சில பத்திரிக்கைகளில், 2011 உலகக் கோப்பையின் போதே அவருக்குப் புற்று நோய் இருந்திருக்கக்கூடும், அதனுடன் தான் விளையாடியிருக்கிறார் என்றும் சொல்லப்பட்டிருந்தது.
சிகிச்சைக்காக அமெரிக்கா பறந்தார் யுவராஜ். உடலளவிலான பாதிப்புகளைக்காட்டிலும் மனதளவிலான பாதிப்புகளால் தான் புற்று நோய் மிகப் பெரிய நோயாகப் பார்க்கப்படுகிறது. யுவராஜ் குணமாகித் திரும்பி வருவாரா, அப்படியே வந்தாலும் அவரால் பழைய சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியுமா. அவர் அமெரிக்காவில் கீமோதெரப்பிக்கு உட்படுத்தப்பட்டிருந்த போது இந்தியாவில் அவரது கிரிக்கெட் வாழ்க்கை கேள்விக்குறியாகிக் கொண்டிருந்தது. ஆனால் யுவராஜ் குணமாகி வந்தார். அவரால் பழைய சிறப்பான ஆட்டத்தையும் வெளிப்படுத்த முடிந்தது. அதற்கான மிகச் சமீபத்திய ஒரு சாட்சியத்தை தான் அம்மா நினைவூட்டியிருக்கிறாள்.
அன்றிரவு இந்தியாவை ஆறு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இலங்கை வீழ்த்தியிருந்தது. இந்தியா நிர்ணயித்திருந்த இலக்கை அறிந்துக்கொண்டதும் இலங்கையின் பந்துவீச்சு சிறப்பாக இருந்திருக்க வேண்டும் என்று நினைத்துக்கொண்டு உறங்கினேன்.
மறுநாள் காலை இணையதளத்தில் யுவராஜை பொங்கல் வைத்துக் கொண்டிருந்தார்கள். என்ன விஷயமென்று பார்த்தால், யுவராஜ் வீணடித்தப் பந்துகள் மட்டும் அவர்களுக்குக் கிடைத்திருந்தால் அடுத்த இரண்டு உலகக் கோப்பை வெல்வதற்கான ஓட்டங்களைக் கூட முன்கூட்டியே எடுத்து வைத்திருப்பார்கள் போல பேசியிருந்தார்கள். சில மணி நேரங்களுக்குப் பிறகு, டைம்ஸ் ஆஃப் இந்தியா இணையத்தளத்தில் யுவராஜ் வீடு மீது கல் வீச்சு என்ற செய்தியையும் படிக்க நேர்ந்தது. உடனே ஃபேஸ்புக்கில் லாகின் செய்தேன். எனக்குக் கோபம் வரும்போதெல்லாம் ஏனோ அதைத் தான் செய்கிறேன். அங்கும் அவர்கள் யுவராஜை விட்டு வைக்கவில்லை.
யுவராஜ் சிங் இலங்கை ஜெர்ஸி அணிந்திருக்கும் (எடிட் செய்யப்பட்ட) ஒரு புகைப்படம் “HERO FOR SRILANKA” என்ற வாக்கியத்துடன் அங்கு உலா வந்துக் கொண்டிருந்தது. அது என்னமோ சரி தான். நம்மாள் ஒருவரை கிரிக்கெட் விளையாடும் பிற நாடுகளில் கூட ஹீரோவாகப் பார்த்தாலும் பார்ப்பார்கள், நாம் வீடு தேடிப் போய் கல் விட்டு அடிப்போம். அந்தப் புகைப்படத்தை எடிட் செய்த புண்ணியவான் யாராக இருப்பினும், அதே மாதிரி, கிரிக்கெட் விளையாடும் அனைத்து நாடுகளின் ஜெர்ஸியுடனும் தலா ஒரு புகைப்படம் ரிலீஸ் செய்யுமாறு மிகப் பணிவுடன் கேட்டுக் கொண்டு ஒரு ஸ்டேட்டஸ் போட்டேன்.
மூன்று வருடங்களுக்கு முன்பு ‘வர்ல்ட் கப் ஹீரோ’, இப்பொழுதோ ‘யுவி சக்ஸ்’. நாக்கில் நரம்பில்லாதவர்கள். நன்றி மறந்தவர்கள். ஒரு சிலர் மட்டும் அந்நியாயமாய் பேசியவர்களுக்குப் பதிலடி கொடுத்தும், யுவராஜை ஆதரித்தும் எழுதியிருந்தார்கள். கொஞ்சம் நிம்மதியாய் இருந்தது.
யுவராஜ் ஒரு உண்மையான் வீரன். அவன் திரும்பி வரும் காலம் வெகு தொலைவில் இல்லை. ஐ சப்போர்ட் யுவி.