Tuesday, April 22, 2014

கடிந்து கொல் காதலே – III

இறை வேண்டுகிறேன்.
இணக்கம் தூண்டுகிறேன்.
நொடி கணமும்
குறையின்றியே நேசிக்கிறேன்.

இருந்தும்..
தூரத் தூக்கியெறிய
உனக்குத் தேவைப்படுவதெல்லாம்
ஒரேயொரு கோபம் மட்டும் தான்!!

கோபம்..
எனக்குத் தெரியும்,
வீரியம் ஏறிய
ஒரு பெரும் வலியின் முகமென்று!

எந்த முகத்தையும் நேருக்கு நேர்
பார்த்துப் பழகியவன் நான்.
நீ காட்டு!
என் பொறுமையுடன் போராடி
முடிந்தால் வென்றுவிட்டுப் போகட்டும்!
ஆனால்,
போய் தொலையட்டும் அது!!

ஏங்கேனும் ஒரு அகண்ட நிலப்பரப்பில்
கால் கடுக்க ஓடி
எல்லையோர நீரற்ற ஆழ்க் கிணறொன்றில்
தலை கீழ் குதித்து
கபாலம் சிதறி மறியட்டும்!!

இந்த வாழ்க்கை..
எந்தன் காதல்..
நம் உலகம்..
இதில் ஒன்றையேனும் சீண்டிப் பார்க்கக் கூட
இங்கு யாருக்கும் அனுமதி கிடையாது
உன் ஒருத்தியைத் தவிர..

சொல்லி வை!

Thursday, April 17, 2014

எலெக்ஷன் பலியாடுகள்!

கடந்த வாரம் பேருந்தில் பயணித்த போது அருகில் இருந்தவர் அரசியல் தொடர்பானப் பேச்சுகளை மெல்லத் தொடங்கினார். ஒவ்வொரு கட்சியை பற்றியும் நல்லபடியாகச் சொல்ல ஆரம்பித்து முடிக்கையில் காதோடுச் சேர்த்து நம் மூக்கையும் பொற்றிக் கொள்ளும் அளவிற்கு நாறடித்து விட்டார். அரசியல் பேச்சென்பதால் ஆரம்பத்திலிருந்தே விருப்பமில்லை. நானும் குனிந்து நெளிந்து எதிர் திசை திரும்பியென என்னென்னமோ செய்துப் பார்த்தும் அவர் விடுவதாயில்லை. அவர் பேசுவதோடு நிறுத்தினால் கூடப் பரவாயில்லை, ஒவ்வொரு கட்சியைக் கழுவி ஊற்றிவிட்டப் பிறகும், இது நான் நினைக்குறது மட்டும் தான், தம்பிக்கு எப்படி புடிபடுது னு தெரியல என்று என்னையும் கோர்த்து விட்டுக் கொண்டிருந்தார்.

உச்சி வெயிலில் அடைந்தபடி ஓடும் ஒரு தகரடப்பா பேருந்தில் இப்படி ஒரு மனிதருக்கு அருகில் உட்கார வச்சுட்டியே ஆண்டவா என்று கண் மூடிய நான் அதிர்ஷ்ட வசமாக அப்படியே தூங்கிப் போயிருக்கிறேன். நிறுத்தம் வரக் கண்விழித்துப் பார்த்தபோது, மனிதன் முன்னிருக்கைக்கு இடம்பெயர்ந்திருந்தார். பாவம் அங்கு என்னைப் போலவே ஒரு பலியாடு சிக்கி நெளிந்துக் கொண்டிருந்தது.

Wednesday, April 9, 2014

அன்சங் ஹீரோ (Unsung Hero)

‘இந்தச் சமூகத்தில் நீ யார்?’ என இனி யாராவது என்னை நோக்கி கேள்வி எழுப்பினால், அவர்களுக்குப் போட்டுக் காண்பிக்க ஒரு காணொளி கிடைத்திருக்கிறது. நான் யாராக இருக்க முயல்கிறேன் என்பதை சில நேரங்களில் என்னால் வார்த்தைகளால் விளக்க முடிவதில்லை. நான் சொல்லும் பாதியைக் கூட கேள்வி கேட்டவர்களால் புரிந்துக் கொள்ள முடிவதில்லை. இனி அந்தக் கவலைகளெல்லாம் இருக்காது.

O & M பற்றிக் கேள்விப் பட்டிருப்பீர்களா என்று தெரியவலில்லை. Oglivy & Mather என்பதன் சுருக்கம் தான் அது. பாங்காக்கை தலைமையகமாகக் கொண்டு இயங்கி வரும் ஒரு விளம்பர நிறுவனம். அந்த நிறுவனம் பற்றியும் அவர்கள் தயாரிக்கும் விளம்பரங்கள் பற்றியும் இணையத்தில் சமீபத்தில் தான் படித்தறிந்துக் கொண்டேன். உணர்வுப்பூர்வமான விளம்பரங்கள் தருவதில் வல்லவர்களாகத் தெரிகிறார்கள். குறிப்பாக Thai Life Insurance க்காக சுமார் இரண்டு வருடங்களுக்கு முன்பு அவர்கள் தயாரித்திருந்த ஒரு விளம்பரம் மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றிருக்கிறது.

அது காது கேளாத, வாய் பேச இயலாத ஒரு அப்பா, அவருக்குப் பிறந்த ஒரு சிறுமி அவ்விருவர் பற்றிய உணர்வுப்பூர்வமானதொரு படைப்பு. ‘Silence of love’ என்று கூகுள் செய்துப் பாருங்கள். அந்தக் காணொளியை வெறும் வர்தக ரீதியான விளம்பரமாக ஏற்றுக் கொள்ள முடியாமல் உள்ளம் திணறும். கொஞ்சம் கண்ணீர் எட்டிப்பார்க்கும். இவ்விரண்டுக்கும் நான் உத்திரவாதம். பார்த்துவிட்டுச் சொல்லுங்கள்.

இப்பொழுது அதே நிறுவனம், அதே Thai Life Insurance க்காக மற்றுமொரு காணொளியை தயாரித்திருக்கிறது. அநாமதேய மனிதன் ஒருவர் சாலையோர நடைபாதையில் நடந்து வருகிறான். அருகாமையில் இருக்குமொரு கட்டிடத்தின் மேல்தளத்தில் கழிவு நீர் வடிவதற்காக அமைக்கப்பட்டிருக்கும் குழாய் அவனைக் குளிப்பாட்டுகிறது. ஒரு நிமிடம் நின்று அன்னாந்துப் பார்த்துவிட்டு அருகில் இருக்கும் இலைகளற்றுக் காணப்படும் ஒரு காய்ந்தச் செடியை தொட்டியோடு அந்தக் கழிவு நீர் விழும் இடத்திற்குக் கிடத்துகிறான். தன் நடையை தொடர்கிறான்.

ஒரு பத்து பதினைந்து அடி முன்னால், வயது முதிர்ந்தப் பெண்ணொருத்தி தனது தள்ளு வண்டியை சாலையிலிருந்து அந்த நடைபாதை மேட்டில் ஏற்ற சிரமப் படுவதைப் பார்க்கிறான். ஓடிப் போய் உதவுகிறான்.

அடுத்த ஷாட்டில், உணவு விடுதியின் நாற்காலி ஒன்றிலமர்ந்து பசியாறிக் கொண்டிருக்கும் அவனிடம் ஒரு நாய் உணவு கேட்டுப் பாவமாய் நிற்கிறது. தனது தட்டிலிருந்து ஒரு லெக் பீஸை எடுத்து அந்த நாய்க்கு கொடுக்கிறான். அதைக் கவனித்தக் கடைக்காரன் தலையசைத்துத் தனது உடன்பாடின்மையை வெளிப்படுத்துகிறான். அவனது நடைப்பயணம் தொடர்கிறது.

சிறிது தூரத்தில் ஒரு தாய், ஒரு சிறுமி அருகருகே அமர்ந்து பாதசாரிகளை நோக்கிக் கைக்கூப்பிப் பிச்சை எடுப்பதைப் பார்த்து நிற்கிறான். சிறுமி முன் கிடத்தப்பட்டிருக்கும் ஒரு சிறு வெண்பலகையில் ‘படிப்புக்காக’ என்று எழுதியிருக்கிறது. தனது பணப்பையை வெளியெடுத்து அதிலிருந்த இரண்டு நோட்டுகளையும் அந்தச் சிறுமியின் கைகள் பிடித்திருக்கும் ஒரு காகிதக் குவலையில் திணிக்கிறான். அது அருகில் இருக்கும் ஒரு கடைக்காரரை திருப்திப்படுத்துவதாய்த் தெரியவில்லை. அவரும் தலையசைக்கிறார்.

பிறகு அதேநாளில் தனது குடியிருப்புப் பகுதியில் மூடியிருக்கும் ஒரு கதவின் வாயிலில் வாழைப் பழச் சீப்பு ஒன்றை தொங்க விடுவது, தான் வளர்க்கும் பறவைகளுக்கு இரை வைப்பது, செடி கொடிகளுக்குத் தண்ணீர் பாய்ச்சுவது, குளித்துச் சுத்தமாவது, மண்டியிட்டு இறை வணக்கம் செலுத்துவது, ஒரு சராசரி உணவு உண்பதுவென அவனது தினசரி வாழ்க்கையின் தரம் காட்டப்படுகிறது.

இது தான் அவன். இது தான் அவனது வாழ்க்கை. இதனால் அவனுக்கு என்ன கிடைக்கப் போகிறது, அவனைச் சுற்றியுள்ள சமூகம் என்ன மாற்றம் கண்டுவிடப் போகிறது, அதையெல்லாம் அந்தக் காணொளியைப் பார்த்துத் தெரிந்துக் கொள்ளுங்கள்.

நல்லவனாய் இருப்பது எதையேனும் சாதிப்பதற்கோ நிரூபிக்கவோ அல்ல கடைசி வரை வெறும் நல்லவனாய் மட்டுமே இருப்பதற்கு. இதை இந்த உலகம் என்று புரிந்துக் கொள்கிறதோ, அன்று தொடங்கி உலகில் மனிதம் ஒன்று மட்டுமே ஓங்கி நிற்கும்.

Tuesday, April 8, 2014

சிங் இஸ் கிங்

நவம்பர் 16க்குப் பிறகு கிரிக்கெட் பார்ப்பதையே, இன்னும் சொல்லப் போனால், கிரிக்கெட் தொடர்வதையே நிறுத்திக் கொண்டுள்ளேன். திடீரென யாராவது ஸ்கோர் என்ன ஆச்சு என்று என்னைக் கேட்கும் போது தான், ‘ஆமா ல.. அப்படி ஒன்னு தொடர்ந்துட்டு தான் இருக்குல’ என்று ஒரு முறை முகம் துடைத்துக் கொள்கிறேன். ஒரு காலத்தில் முப்பொழுதிற்கும் உணவாக இருந்த கிரிக்கெட் இன்றைய தினத்தில் ‘கோலி தான் அடுத்த சச்சின்’, ‘மெய்யப்பன் விவகாரத்தில் வாய் திறக்க மறுத்தார் தோணி’ என்று ஃபேஸ்புக்கில் பகிரப்படும் சில செய்திகளின் தலைப்பைப் படிப்பதோடு நின்றுவிடுகிறது.

கடந்த ஞாயிறன்று கூட, ‘மாலை பேசுகிறேன்’ என்று காலை சொல்லியிருந்ததை மறந்து இரவு 9 மணிக்கு தொடர்பு கொண்ட போது, “ஃபைனலாச்சே.. மேட்சு பார்த்துட்டு இருப்ப னு நானும் விட்டுட்டேன்” என்று அம்மா சொல்லும் வரை, மார்ச் 30ம் தேதி ஆஸ்திரேலியாவிற்கு எதிரான யுவராஜின் சிறப்பான ஆட்டம் குறித்து அலுவலகத்தில் நண்பர்கள் சிலாகித்துக் கொண்டிருந்தது மறந்து போயிருந்தது.

யுவராஜ் சிங். 2002 இங்கிலாந்தில் நடைபெற்ற நாட்வெஸ்ட் தொடரில் பெவிலியன் பால்கனியில் சிவனேயென்று நின்று கொண்டிருந்த கங்குலி ஆவேசப்பட்டு தன் ஜெர்ஸியை கழற்றி காற்றில் சுழற்றியதற்கு முக்கியக் காரணமாகிப் போனதில் தொடங்கி இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரங்களில் ஒருவர்.

ஆஸ்திரேலியாவின் மைக்கேல் பெவனுக்கு நிகராகப் பேசப்படும் அளவிற்கு அவ்வளவு வெற்றிகளை உறுதிபடுத்தி சர்வதேச அளவில் மிகச் சிறந்த ஒரு நடுநிலை ஆட்டக்காரராக பெயர் எடுத்தவர்.

குனிந்தால் கையில் சுலபமாகச் சிக்கிவிடக்கூடிய பந்தைக் கூடப் பிடிக்க முயற்சிக்காமல், பௌன்டரி லைனில் நிற்க வைக்கப்பட்டிருக்கும் ஏதோவொரு உயரமான பந்து வீச்சாளரை நோக்கி கை தூக்கும் கலாச்சாரத்தில் மொத்த இந்திய அணியும் தத்தளித்துக் கொண்டிருந்த காலக்கட்டத்தில், பாய்ன்ட் ரீஜனில் இடப்பக்கம் ஒரு பத்து அடி, வலப்பக்கம் ஒரு ஏழு அடி, தலைக்கு மேல் ஒரு ஆறு அடி எனத் தன்னைச் சுற்றியும் பந்து எந்தத் திசையில் சென்றாலும் பறந்துப் பறந்து பிடித்தும், பிடித்த வேகத்தில் ஸ்டம்பை பதம் பார்த்தும் இந்திய அணியில் ஒரு ஃபீல்டிங் புரட்சியையே கொண்டு வந்த பெருமைக்கும் சொந்தக்காரர் இவரே தான்.

இதெல்லாம் போதாதென்று இக்கட்டானச் சூழ்நிலைகளில் எதிரணியின் முக்கிய பேட்ஸ்மன்களை தனது ஸ்லோ லெஃப்ட் ஆர்ம் மூலம் வீட்டுக்கும் அனுப்பி வைத்திருக்கிறார். மொத்தத்தில் கபில் தேவுக்குப் பிறகு இந்தியா கண்டெடுத்த மிகச் சிறந்த ஆல்ரவுன்டர் என்றால் அது யுவராஜ் தான்.

இருபது ஓவர் போட்டிகளுக்கான உலகக் கோப்பை 2007ல் தொடங்கி நடத்தப்பட்டு வருகிறது. அந்த முதல் உலகக் கோப்பையை இந்தியா வெல்வதற்கு ஜொகிந்தர் ஷர்மா பந்தை மிஸ்பா கிண்டிக் கொடுத்து அதை ஸ்ரீசாந்த் பிடித்துப் பைத்தியம் போல கத்தியதற்கெல்லாம் முன்னால், இந்தியாவை அந்த ஃபைனல் வரை கொண்டுச் சேர்த்ததில் யுவராஜின் பங்கு மகத்தானது. இங்கிலாந்துக்கு எதிரான முக்கிய க்ரூப் ஆட்டம் ஒன்றில் ஸ்டுவர்ட் ப்ராட் பந்து வீச்சில் ஒரே ஓவரில் ஆறு சிக்ஸர்கள், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் முப்பது பந்துகளில் எழுபது ரன்கள். இன்று வரை என்னால் மறக்க முடியாத இரண்டு இரவுகள் அவை.

அதன் பிறகு 2011 கிரிக்கெட் உலகக் கோப்பை. சச்சினின் கடைசி உலகக் கோப்பை. ஒரு வகையில் முதலாவதும் கூட. 1983 க்குப் பிறகு இந்தியா உலகக் கோப்பையை கைப்பற்றியது. அந்தத் தொடர் நெடுக்க பேட்டிங், பந்துவீச்சு, ஃபீல்டிங் என அனைத்துத் துறைகளிலும் யுவராஜ் தனித்துக் காணப்பட்டார். அவ்வளவு திறமையான யுவராஜை அதுவரை பார்த்ததில்லை என்றுகூட சிலர் புகழ்ந்துத் தள்ளினார்கள். எதிர்ப்பார்த்தது போலவே தொடர் நாயகன் விருது யுவராஜக்கே வழங்கப்பட்டது.

சில மாதங்கள் ஓடின. 2012 பிப்ரவரியில் யுவராஜ் புற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளார் என்ற செய்தி வெளியுலகிற்குத் தெரிய வந்தது. ஒரு சில பத்திரிக்கைகளில், 2011 உலகக் கோப்பையின் போதே அவருக்குப் புற்று நோய் இருந்திருக்கக்கூடும், அதனுடன் தான் விளையாடியிருக்கிறார் என்றும் சொல்லப்பட்டிருந்தது.

சிகிச்சைக்காக அமெரிக்கா பறந்தார் யுவராஜ். உடலளவிலான பாதிப்புகளைக்காட்டிலும் மனதளவிலான பாதிப்புகளால் தான் புற்று நோய் மிகப் பெரிய நோயாகப் பார்க்கப்படுகிறது. யுவராஜ் குணமாகித் திரும்பி வருவாரா, அப்படியே வந்தாலும் அவரால் பழைய சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியுமா. அவர் அமெரிக்காவில் கீமோதெரப்பிக்கு உட்படுத்தப்பட்டிருந்த போது இந்தியாவில் அவரது கிரிக்கெட் வாழ்க்கை கேள்விக்குறியாகிக் கொண்டிருந்தது. ஆனால் யுவராஜ் குணமாகி வந்தார். அவரால் பழைய சிறப்பான ஆட்டத்தையும் வெளிப்படுத்த முடிந்தது. அதற்கான மிகச் சமீபத்திய ஒரு சாட்சியத்தை தான் அம்மா நினைவூட்டியிருக்கிறாள்.

அன்றிரவு இந்தியாவை ஆறு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இலங்கை வீழ்த்தியிருந்தது. இந்தியா நிர்ணயித்திருந்த இலக்கை அறிந்துக்கொண்டதும் இலங்கையின் பந்துவீச்சு சிறப்பாக இருந்திருக்க வேண்டும் என்று நினைத்துக்கொண்டு உறங்கினேன்.

மறுநாள் காலை இணையதளத்தில் யுவராஜை பொங்கல் வைத்துக் கொண்டிருந்தார்கள். என்ன விஷயமென்று பார்த்தால், யுவராஜ் வீணடித்தப் பந்துகள் மட்டும் அவர்களுக்குக் கிடைத்திருந்தால் அடுத்த இரண்டு உலகக் கோப்பை வெல்வதற்கான ஓட்டங்களைக் கூட முன்கூட்டியே எடுத்து வைத்திருப்பார்கள் போல பேசியிருந்தார்கள். சில மணி நேரங்களுக்குப் பிறகு, டைம்ஸ் ஆஃப் இந்தியா இணையத்தளத்தில் யுவராஜ் வீடு மீது கல் வீச்சு என்ற செய்தியையும் படிக்க நேர்ந்தது. உடனே ஃபேஸ்புக்கில் லாகின் செய்தேன். எனக்குக் கோபம் வரும்போதெல்லாம் ஏனோ அதைத் தான் செய்கிறேன். அங்கும் அவர்கள் யுவராஜை விட்டு வைக்கவில்லை.

யுவராஜ் சிங் இலங்கை ஜெர்ஸி அணிந்திருக்கும் (எடிட் செய்யப்பட்ட) ஒரு புகைப்படம் “HERO FOR SRILANKA” என்ற வாக்கியத்துடன் அங்கு உலா வந்துக் கொண்டிருந்தது. அது என்னமோ சரி தான். நம்மாள் ஒருவரை கிரிக்கெட் விளையாடும் பிற நாடுகளில் கூட ஹீரோவாகப் பார்த்தாலும் பார்ப்பார்கள், நாம் வீடு தேடிப் போய் கல் விட்டு அடிப்போம். அந்தப் புகைப்படத்தை எடிட் செய்த புண்ணியவான் யாராக இருப்பினும், அதே மாதிரி, கிரிக்கெட் விளையாடும் அனைத்து நாடுகளின் ஜெர்ஸியுடனும் தலா ஒரு புகைப்படம் ரிலீஸ் செய்யுமாறு மிகப் பணிவுடன் கேட்டுக் கொண்டு ஒரு ஸ்டேட்டஸ் போட்டேன்.

மூன்று வருடங்களுக்கு முன்பு ‘வர்ல்ட் கப் ஹீரோ’, இப்பொழுதோ ‘யுவி சக்ஸ்’. நாக்கில் நரம்பில்லாதவர்கள். நன்றி மறந்தவர்கள். ஒரு சிலர் மட்டும் அந்நியாயமாய் பேசியவர்களுக்குப் பதிலடி கொடுத்தும், யுவராஜை ஆதரித்தும் எழுதியிருந்தார்கள். கொஞ்சம் நிம்மதியாய் இருந்தது.

யுவராஜ் ஒரு உண்மையான் வீரன். அவன் திரும்பி வரும் காலம் வெகு தொலைவில் இல்லை. ஐ சப்போர்ட் யுவி.

Thursday, April 3, 2014

மதுரையில் ராஜா

மதுரையில் நாளை மறுநாள் சங்கீதத் திருநாள் என்ற பெயரில் இளையராஜாவின் இசை நிகழ்ச்சி நடக்க இருக்கிறது. இதுவரை இல்லாத அளவில் அரங்கேற இருக்கும் அந்த நிகழ்ச்சியை கார்த்திக் ராஜா ஏற்பாடு செய்திருப்பதாகத் தெரிகிறது. நிகழ்ச்சிக்கான டிக்கெட்டுகளுக்கு ஏகக் கிராக்கி, ரசிகர்கள் எல்லாம் முன்டியடித்துக் கொள்கிறார்கள் என்பதெல்லாம் சொல்லித் தெரிந்துக் கொள்ள வேண்டியதில்லை. ராஜா. இந்த ஒரு வார்த்தை போதும்.

மன்னன் திரைப்படத்தில் சின்ன தம்பி படத்திற்கான முதல் காட்சி டிக்கெட்டுகள் வாங்கும் முதல் இரு நபர்களுக்கு தங்கச் சங்கிலி, தங்க மோதிரம் வழங்கப்படும் ஒரு காட்சியமைப்பு இடம் பெற்றிருக்கும். அது தழுவியோ என்னவோ இந்த நிகழ்ச்சிக்கும் அது மாதிரியான ஒரு ஏற்பாடு செய்திருக்கிறார்கள். அதன்படி, ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் விலை கொடுத்து டிக்கெட் வாங்குவோருக்கு ராஜாவே தன் கையால் டிக்கெட் வழங்குகிறார். 

ராஜாவை சந்திப்பதும், அவர் கையால் டிக்கெட் வாங்குவதும் நிச்சயமாக எந்தத் தங்கச் சங்கிலி-தங்க மோதிரத்தை விடவும் எண்ணிலடங்கா மடங்கு சிறந்ததே. சிலர் அதைப் பிறவிப் பயனாகக் கூடக் கருதுவார்கள். ஆனால், அந்த ஒரு லட்ச ரூபாய் சமாச்சாரம் தான் இடிக்கிறது. அதற்குப் பதிலாய் அந்தப் படத்தில் வருவது போலவே முதல் இரண்டு நபர்களுக்கே அந்த வாய்ப்பினை வழங்கியிருக்கலாமோ என்று தோன்றுகிறது.

இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க, இரண்டரை லட்சம் கொடுத்து ஒரு ரசிகர் ஒரு டிக்கெட்டை வாங்கியிருப்பதாகப் படித்தேன். 

நாமெல்லாம் ரசிகர்கள். இசை, ராஜா மீதானத் தீராக் காதலில், இதைவிட அதிக விலையென்றாலும் கொடுக்கத் தயாராக இருப்போம். ஆனால், இசையென்ற மாபெரும் கலையை, அதுவும் அந்தக் கலையே பெற்றெடுத்தப் பிள்ளையாகப் பார்க்கப்படும் ராஜாவை மையமாகக் கொண்டு நடக்கும் ஒரு நிகழ்ச்சியை ஒருங்கிணைக்கும் மாபெரும் பொறுப்பில் இருப்பவர்கள் இந்த விலைப்பட்டியல் பற்றி இன்னும் கொஞ்சம் யோசித்திருக்க வேண்டாமா? யோசித்திருக்கலாம்.

Tuesday, April 1, 2014

தி ஷேக்ஸ்பியர் & சைகாலஜி 4

“மச்சி கிளம்பலாமா.. ஐயம் டன்”

“இல்ல டா. இன்னும் கொஞ்ச நேரம். இப்போ தான் கெல்லியோடு கால் முடிஞ்சது”

“அந்தக் கிழவனா.. என்ன சொல்றான் %#&#%&”

“டேய் ஏன் இப்படி”

“பத்தரை மணிக்குக் கால் செட் பண்ணுறவன இன்னும் அசிங்கமா கூட திட்டலாம்.. ஆஃபிஸ் கம்யூனிகேட்டராச்சே னு பாக்குறேன்..”

“சரி சரி. ஆன்சைட்டுக்கு ஒரு மெயில் மட்டும் போடனும். டென் மினிட்ஸ்”

“ஓகே அப்போ. நான் கிரௌன்ட் ஃப்ளோர் லாபில வெய்ட் பண்றேன். லேட் பண்ணிடாத. அல்ரெடி பசி உசுரு போகுது”

“ஷ்யூர்”

கார்த்திக் அவே போனான்.

எட்டு வருடங்களுக்கு முன்பு வேலை தேடி சென்னை வந்தபோது எனக்கு அறிமுகமான முதல் நபர் கார்த்திக். சோர்வுகளுக்கும் ஏமாற்றங்களுக்கும் பஞ்சமில்லாமல் இருந்த அந்தக் காலக்கட்டத்தில் ஒரு நேர்கானலில் ஒன்றாக வெளியேற்றப்பட்டோம் என்ற ஒற்றுமையோடுச் சேர்ந்துக் கொண்டோம். அதன் பிறகு, எட்டு வருடங்கள், மூன்று நிறுவனங்கள், மான்ஷனில் தொடங்கி ஏழெட்டு வீடுகள், இருபதுக்கும் மேற்பட்ட ரூம் மேட்ஸ்கள். நாங்கள் மட்டும் அப்படியே இருந்துவிட்டோம். ஒரு வெற்றியாளனின் மற்றொரு வெற்றியாளனுடனானக் கூட்டணியை விட, தோல்வியுற்ற ஒருவனின் மற்றொரு தோல்வியுற்றவனுடனான கூட்டணிக்கு என்றைக்குமே சக்தி அதிகம். எங்கள் விஷயத்திலும் அதுவே உண்மையாகிப் போனது.

மனுஷன் பொதுவாப் பசி தாங்க மாட்டான். பசியில் அவன் பேசும் வார்த்தைகளை மனுஷன் தாங்கமாட்டான். இது தான் கார்த்திக். அவனை நன்கு அறிந்த எல்லோருக்குமே இது தெரியும்.

அன்றிரவு கார்த்திக் என்னை நம்பியும் நான் மெயின் ரோட்டில் உள்ள ஒரு செட்டிநாடு மெஸ்ஸை நம்பியும் வெளியேறினோம். அன்று மட்டும் அந்த மாஸ்டர் மனதிறங்கி, அனைக்கவிருந்த அடுப்பை தொடர்ந்து எறியவிட்டு ஒரு கொத்துப் பரோட்டா போட்டுத் தராமல் போயிருந்தால் கார்த்திக்கின் காரசாரமான வார்த்தைகளுக்கு நானும் கெல்லியும் கொத்துப் பரோட்டா தான்.

அவன் சாப்பிட்டு முடித்து பசி தீர்ந்த்தற்கான அறிகுறிகள் அவன் முகத்தில் தென்படும் வரை நான் அமைதியாக இருந்தேன். மெல்ல பேச்சைத் தொடங்கினேன்.

“டேய் இன்னைக்கு அவன மறுபடியும் பார்த்தேன் டா”

“எவன?”

“அதான் டா, நம்ம மிஸ்ட்ரி மேன்”

“ஆரம்பிச்சுட்டியா.. நீ வேணும்னா பாரு.. அவன பத்தி யோசிச்சு யோசிச்சு ஒரு நாள் நீயும் பைத்தியம் 
ஆகப் போற”

“அந்தாளு ‘நா பைத்தியம்’ னு உன்கிட்ட வந்து சொன்னாரா?”

“எந்தப் பைத்தியம் சொல்லியிருக்கு”

“மூடு. ஒருத்தவங்கள புரிஞ்சுக்கப் பொறுமை இல்லனா உடனே அவங்கள பைத்தியம் னு சொல்றதா. நீ இப்படித்தான் பேசுவனு தெரிஞ்சும் உங்கிட்டையே திரும்பத் திரும்ப சொல்றேன் பாரு. என்னச் சொல்லனும்”

“அப்படியில்லடா.. நா என்ன சொல்ல வந்தேன்னா..”

“நீ ஒன்னும் சொல்லத் தேவையில்ல. நல்லா கொட்டிகிட்டாச்சுல. நடையக் கட்டு”

வழக்கமாக நான் ஓட்ட கார்த்திக் பின்னிருக்கையில் கதை வளர்த்துக் கொண்டே வருவான். நான் அமைதியை விரும்பும் இரவுகளில் மட்டும் அவனை ஓட்டச் சொல்லிவிடுவேன். அன்றிரவு அவன் பேச வேண்டாம் என்று தோன்றியது.