சிக்னலில் குழந்தை கொண்டு பிச்சை எடுப்பவர்களைப் பற்றியும், அந்தக் குழந்தைகள் எப்போதும் தூங்கிக் கொண்டே இருப்பதற்கானக் காரணத்தை விளக்கியும் இணையத்தில் உலவும் செய்திகள் காவல் துறைக்கும் அரசுக்கும் தெரியாமல் இருக்குமா என்ன. சென்னையில் இன்றும் பல இடங்களில் அவர்களை பார்க்க முடிகிறது.
எங்கேனும் பார்க்கும்போதெல்லாம் அவர்கள் கையில் இருக்கும் குழந்தையை கூர்ந்து கவனித்துள்ளேன். சப்தங்களால் மட்டுமே சூழப்பட்ட, வாகன நெரிசல் மிக்கச் சாலைகளிலும், எந்த ஒரு சின்ன அசைவும் காட்டிறாது, கண்கள் இறுக்கி, அப்படி ஒரு ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும். “குழந்தைக்கு பால் வாங்கக் கூட காசு இல்ல யா” என்று அந்த பெண்மணி (தாய் என்று சொல்ல ஏனோ பிடிக்கவில்லை) நம்மிடம் கூறுவாள். குழந்தை மீது பரிதாபமும், அதை வைத்து பிச்சை எடுத்து வாழ நினைக்கும் அவள் மீது கோபமும் ஒரே நேரத்தில் பொத்திக்கொண்டு வரும். எதை எந்த அளவிற்குக் வெளிக்காட்டுவதெனத் தெரியாமலேயே அங்கிருந்து உடன் விலகி நடந்து விடுகிறேன். சில அடி தூரத்தில், என் மனசாட்சி, அந்த குழந்தையை மட்டும் திரும்பிப் பார்க்க முயற்சிக்கிறது.
உங்களில் யாருக்கேனும் இப்படி நிகழ்ந்திருக்கிறதா?
பி.கு: அடுத்த முறை அப்படி யாரையேனும் பார்க்க நேர்ந்தால், நேராகப் போய் அவர்களிடம் கேட்டுவிடப் போகிறேன், “ஏன் குழந்தை எப்போதும் தூங்கிட்டே இருக்கு?” னு. யாரைக் கூட்டி எவ்வளவு பிரச்சனை பண்ணினாலும் பராவாயில்லை.
No comments:
Post a Comment