Thursday, November 14, 2013

சச்சின்ன்ன்ன்…. சச்சின்!!

இன்று காலை 7.30 மணி தொடங்கி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சானலே கதி என்று அமர்ந்திருந்தேன். சச்சின் பற்றி நிறைய பேசினார்கள். கவாஸ்கர், சித்து, அக்ரம், கங்குலி, டிராவிட், லக்ஷ்மன் என முன்னால் வீரர்கள் பலரும் தங்கள் கருத்துக்களை தெரிவித்துக் கொண்டிருந்தார்கள். இடையிடையே பயிற்ச்சியில் ஈடுபட்டிருந்த சச்சினை காட்டினார்கள். பத்து வருடத்திற்கு முன் இதே போன்றதொரு நிகழ்ச்சியில் நான் பார்த்து ஆச்சர்யப்பட்ட அதே சச்சினை இன்றும் அதைவிட பெரிய ஆச்சர்யத்துடன் பார்க்க முடிகிறது என்பதே எல்லா பெரிய ஆச்சர்யங்களைக் காட்டிலும் மிகப் பெரிய ஆச்சர்யமாக இருந்தது.

நான் தனியாய் அமர்ந்திருந்த கூடத்தில் என்னை சுற்றிலும் வட்டமடித்துக் கொண்டிருந்த மௌன உதடுகள் என்னுடன் ஏதோ பேச முயற்சித்துக் கொண்டிருந்தன. நான் அவற்றை கண்டு கொள்ளவேயில்லை. என் நிராகரிப்பை மீறியும் என் செவியினை தொட முயன்ற சில மௌனங்களை மட்டும் எனது மௌனத்தின் கைகளால் கழுத்தை நெறித்து பேச விடாமல் தடுத்துக் கொண்டிருந்தேன். ‘தெரியும் தானே உனக்கு, உன் சச்சின் விளையாடப் போகும் கடைசி சர்வதேச போட்டி இது தான்’ என எனக்கு அவை தரும் நினைவுகளைச் சுமந்து என்னால் நிம்மதியாக நடமாட முடியாது என்பது தெரியும். இன்னும் சிறிது நேரத்தில் நான் அலுவலகம் செல்ல வேண்டும் என்ற கட்டாயம் வேறு. நான் அவைகளை பேச விடுவதில்லை என்பதில் உறுதியாகவே இருந்தேன். இறுக்கத்தில் ஒரு சில மௌனங்கள் இறந்தும் போயிருந்தன, ஆனால் அவைகளுக்காக சிந்த என்னிடம் வேறு கண்ணீர் இல்லை. நான் அமைதியாக சச்சினை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தேன்.

மூன்று பேட்களோடு ஒரு சிறுவனுக்குரிய துள்ளலுடன் படியில் இறங்கி வந்ததில் தொடங்கி, பயிற்சியாளர் டங்கன் ஃபிளட்சருடனான உரையாடல் போதும், நேரே சென்று பிட்சை ஒரு முறை ஆராய்ந்தறிந்த போதும், சக வீரர்களுடனான ஹடிலின் போதும், கை கால்களை நீட்டி சில ஸ்ட்ரெட்ச்கள் செய்த போதும், பயிற்சியின் ஒரு பங்காய் ஒரு சில பந்துகளை எதிர்கொண்ட போதும், என்னால் திரும்பத் திரும்பப் புரிந்துக் கொள்ள முடிந்தது ஒரே ஒரு விஷயம் மட்டும் தான். சச்சின் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றாலும், சச்சினுக்குள் இருக்கும் கிரிக்கெட் என்றுமே ஓய்வு பெறப் போவதில்லை.

பி.கு: அடுத்தச் சில நாட்களுக்கு நான் எழுதப்போவது வெறும் சச்சினைப் பற்றி மட்டும் தான் இருக்கும். படிக்க விருப்பமில்லாதவர்கள், சச்சின் பெயர் கேட்டால் கடுப்பாவபர்கள், இதெல்லாம் ரொம்ப ஓவர்யா னு நினைப்பவர்கள் மற்றும் இன்ன பிற சச்சின் எதிர்பாளர்கள் என யாராவது இருப்பின், தயவு செய்து இந்தப் பக்கம் வந்து விடாதீர்கள் என்று ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ படக் கிளைமாக்ஸில் சந்தானம் கேட்டுக் கொள்வது போல மிகவும் ‘தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்’. :)

No comments:

Post a Comment