Thursday, December 5, 2013

உனக்கானது மழை!

நீர் ஆவியாகிறது!
நீராவி மேலெழுகிறது!
திரவமாக்குதல் அதனை துளிகளாக்க
அத்துளிகள் சேர்ந்து மேகமாகிறது!
ஒரு கட்டத்தில்,
புவியீர்ப்புக்கு இணங்கிடும் தன் எடையால்,
அத்துளிமூட்டை அவிழ நேர்கிறது!

மழையை விளக்கிக் கொண்டிருந்த அறிவியலுக்கு,
தெரிந்ததெல்லாம் இவ்வளவுதான்!
மிச்சத்தை சொல்லத் தொடங்கியது
காதலியல்!

அதுவரையில்..
ஒரு ஆறாக ஓடிக்கொண்டிருந்த,
ஒரு குளமாக தேங்கிப்போயிருந்த,
ஒரு கிணறாக புதைந்துக்கிடந்த,
நீருக்கு..

உன் உச்சந்தலையில் தொடங்கி,
வகுடு வழி பயணித்து,
நெற்றிக் குங்குமத்தின் மஞ்சல் வாசம் முகர்ந்ததும்,
புருவ எல்லை கடக்கும் முன்னரே
ஒரு சிலிர்ப்பு ஏற்பட்டு விடுகிறது!

மூக்கின் மீதான ஒற்றையடி பாதையில்,
வேண்டுமென்றே அடி பிறளத்துடிக்கும்
துளிகள் சிலவற்றிற்கு,
உன் விழிகளுள் விழுந்து மரிக்கத்தான்
ஆசை ஒன்றும் முளைக்கிறது!

இளஞ்சிவப்பில் குளித்திருக்கும்
உன் இதழ்களை வருடிவிட்டு,
தாடை நுனியில்
சொட்டும் நொடியில்
‘மறுவாழ்வு இது’ என்று புரிகிறது!

தோள்களில் வழுக்கிய
உந்தன் மார்வழி பிரயாணம்,
பூர்வ ஜென்மத்துப் பலனொன்றை
அதி ரகசியமாய் திருடி,
நீருக்கே தெரியாமல் நீருக்குள் கலக்கிறது!

தேகம் முழுக்க ஓடிக் களைத்தும்,
தொப்புள் குளமாய் தேங்கித் தவித்தும்,
கணுக்கால் இறங்குகையிலே
இறந்துவிடத் துடிக்கும்
மொத்தத் துளிகளின்
மறுஜென்மம் தான் இந்த மழை!

தேவதையே,
உனக்கானது மழை!

No comments:

Post a Comment