Monday, September 16, 2013

கருணைக் கொலைகள்.. தொடரும்!!!

இதயத்தில் ஏற்பட்ட வலி ஏனோ
தொண்டைக்குழியை நிரப்புகிறது!

வயிற்றுச் செதில்களை,
உள் சுரக்கும் அமிலம்
அரிக்கிறதெனத் தெரிந்தும்,
உணவுக்கு வழி மறுக்கப்படுகிறது!

குரல்வலையொட்டி ஒழுகிக் கொண்டிருந்த
வலி கொஞ்சம் துடைத்தெடுக்கப்பட்டு,
செல்லரித்த இடங்களிலெல்லாம்
மெல்லப் பூசப்படுகிறது!

கீறப்பட்ட இடத்தில் தடவிக்கொள்ளப்படும்
ஒரு போதைத் தூள் போல,
உடலெல்லாம் பரவி
மொத்த உயிரையும் தன் கட்டிற்குள் வைக்கிறது
அந்த ராட்சச வலி!

கண்கள் மெல்லச் சொருகிக் கொள்ள
விரல்கள் காற்றில்
யாரையோ தேடுவது போலத் தெரிகிறது!

யாருமேயில்லா அவ்விடத்தில்,
சட்டென்று
ஒரு பெண்ணின் கழுத்து பிடிபடுகிறது!

உணர்ச்சிகள் இழந்த உதடுகள்
வார்த்தை பளு தாளாமல்
தானாகப் பிளந்து கொள்கிறது!

உள் எட்டிப் பார்க்கையில்
பாவம் நாவு
இறந்து கிடக்கிறது!

உறங்கிப் போகும் உயிரையெழுப்ப
இதயம் தன் கடைசி முயற்சி செய்கிறது!
லப் டப்!

சிறிது நேரத்தில்
அங்கு உயிர்
இருப்பது போலவும் தெரியவில்லை!
இருந்தது போலவும் தெரியவில்லை!

காதல் செய்யும்
கருணைக் கொலைகள்.. தொடரும்!!!

No comments:

Post a Comment