Friday, March 28, 2014

தி ஷேக்ஸ்பியர் & சைகாலஜி 3

ஜான் பால் கெல்லி. நியூ யார்க் மாகாணத்தின் குளிரூட்டப்பட்ட ஒரு அறையில் இருந்துக்கொண்டு எங்களுக்கெல்லாம் வேலை தரும் கிலையன்ட் மேனஜர். ஒரு விதத்தில் கிழ மேனஜரும் கூட.
நான்கு வருடத்திற்கு முன்பு தனது ஐம்பதாவது பிறந்தநாள் என்று சொல்லி, ஆஃப்ஷோர் டீம் எங்களுக்கு ஐநூறு டாலர்கள் அனுப்பியதைத் தவிர அவர் செய்த நல்ல காரியம் என்று எதையும் குறிப்பட்டுச் சொல்லிவிட முடியாது. அவ்வளவு கறாரான மனிதர். அவரை ஜான் என்றும் பால் என்றும் கெல்லி என்றும் இன்னும் சில பல அலங்காரப் பெயர்கள் கொண்டும் இடத்துக்கும் எங்கள் மூடுக்கும் தகுந்தார் போல அடையாளப்படுத்துவோம்.

கெல்லியுடனான அன்றைய கால் பத்தரை மணிக்கு என்று நிர்ணயிக்கப்பட்டிருந்தது. வழக்கமான ப்ராஜட் அப்டேஸ் தான். ஆனால் அதே வாரத்தில் எற்கனவே இரண்டு முறை எங்களால் மாற்றியமைக்கப்பட்ட கால் என்பதால் ஆஃப்ஷோர் மக்களுக்கு அதிமுக்கியமாகிப் போன ஒரு கால். இந்தக் கார்பொரேட் உலகில் பெரும்பாலான முக்கிய கால்களின் பின்னனி இதுவாகவே அமைவது ஜஸ்ட் எ கோயின்ஸிடன்ஸ் டாம் இட் ரகம் தான்.

இன்னும் பத்து நிமிடங்கள் இருக்க, நான் ஒன்பதாம் தளத்தை ஏற்கனவே அடைந்திருந்தேன். ஏழு மணிக்குப் பிறகு, ஒரு டப்பர்வேர் பாக்ஸ் முழுக்க அடைத்து வைக்கப்பட்டிருந்த தர்பூசணித் துண்டுகள், முக்கால் லிட்டர் தண்ணீர், போதாதக் குறைக்கு ஒரு காஃபி என்று ஒரு இயற்கை உந்துதலுக்கான காரணிகளெல்லாம் போதுமான அளவு உழைத்திருந்ததில், அடுத்து என்னவாக இருக்க முடியும். அதே தான்.

ரெஸ்ட்ரூம் கதவு, திறந்ததும் நேரே சுமார் நான்கு அடி தள்ளி மறைவிற்கான ஒரு தடுப்பு, வலது பக்கம் நான்கைந்து கண்ணாடிகள், ஒவ்வொரு கண்ணாடிக்கும் துணைபோகும்படி ஒரு வாஷ் பேசின், அவற்றையெல்லாம் கடந்துச் சென்று நான் இளைப்பாறிவிட்டு திரும்பிப் பார்க்கிறேன், ஒரு நபர் இரண்டாவது வாஷ் பேசினில் முகம் கழுவிக் கொண்டிருந்தார். அவரைக் கடந்து அதற்கும் பக்கத்திலிருந்த வாஷ் பேசினில் கைகழுவிவிட்டு ஒரு டிஷ்யூவை உருவலாம் எனப் பார்த்தால், டிஷ்யூ டிஸ்பென்சரின் பொக்கை வாய் என்னைப் பார்த்துச் சிரிக்காத குறை. சேவ் பேப்பர் சேவ் ட்ரீஸ் என்பது மட்டும் ஸ்டிக்கராக இல்லாமல் இருந்திருந்தால், நம்மாட்கள் அதையும் உருவி துடைத்துத் தூக்கியெறிந்திருப்பார்கள் என்று நினைத்துக் கொண்டு அங்கிருந்து கிளம்பி எனது இருக்கைக்கு வந்து சேர்ந்தேன்.

சரியாக 10:29 அப்போது. கெல்லியின் கால். ஒன்றரை வருடமாக திரும்பத் திரும்ப டயல் செய்திருந்ததில் அந்தப் பத்து எண்களும் என் விரல்களுக்கே பாடம் ஆகியிருந்ததன. ஒரு சில விநாடிகளில் கெல்லியும் இணைய, வழக்கமான விசாரிப்புகளைக் கடந்து ப்ராஜக்ட் விஷயங்கள் ஓடிக் கொண்டிருந்தன.

அந்த ரெஸ்ட்ரூம் கதவை நான் திறந்தபோது, ஒரு உருவம் நான் முன்பே குறிப்பிட்டிருந்த அத்தடுப்பின் மறைவிலிருந்து விரைந்து கண்ணாடி நோக்கிச் சென்று முகம் கழுவுவது போல தன்னைக் காட்டிக் கொண்டதே, அதே உருவம் தான் நான் அங்கிருந்துக் கிளம்பும் வரைகூட அங்கு முகம் கழுவிக் கொண்டிருந்ததோ?

அந்நபர் அணிந்திருந்தச் சட்டை லிஃப்டில் நான் சந்தித்தவர் அணிந்திருந்ததை ஒத்துத்தான்… ஒரு வேளை, அதே சட்டை, அதே நபர் தானோ?

அழுதுக் கொண்டிருந்து, யாரோ வருவது போலத் தெரிந்ததும், அழுகையையும் கூடவே தனது அடையாளத்தையும் மறைக்க நினைத்து தான், அந்த மொத்த முகம் கழுவும் நாடகமுமோ?
இப்படியானக் கேள்விகளெல்லாம் என்னை பலமாகத் தாக்கிக் கொண்டிருக்கையில் செவி நரம்புகள் ஏந்தி வந்த அதிர்வலைகளை அர்த்தப்படுத்த முடியாமல் எனது மூளை சில விநாடிகள் ஸ்தம்பித்துப் போயிருந்தது.

“ஜீவன், யூ தேர்ர்… ஐ ஆஸ்ஸ்க்ட்.. டு யு ஹாவ் எனி அப்டேஸ்?” கெல்லியின் குரல் இயல்பை மீறியக் கூர்மையில் ஒலித்தது.

“நோ கெல்லி. நோ அப்டேஸ். சாரி ஐ வாஸ் ஆன் ம்யூட்” என்று சமாளித்தேன். வழக்கமானதொரு உத்தி தான் என்றாலும் ஒரு வகையில் நான் சொன்னதில் உண்மை இருந்தது. 

குழப்பத்தில், ஐ வாஸ் ரியலி ஆன் ம்யூட்.

Thursday, March 27, 2014

தி ஷேக்ஸ்பியர் & சைகாலஜி 2

மனோதத்துவம் பற்றிய குறிப்புகளில் சுயமரியாதை குறைவாக உள்ளவர்கள், தாழ்வு மனப்பான்மையால் பாதிக்கப் பட்டவர்கள் பற்றிப் படித்திருக்கிறேன். சமூகத்தில் தங்களை வெளிப்படுத்திக்கொள்ள அவர்கள் எவ்வளவு சிரமப்படுகிறார்கள், அதற்கான காரணங்கள், அவற்றை வெல்லும் யுத்திகள் எனப் பலவும் விவாதிக்கப்பட்டிருக்கும். அந்த மனிதரை பார்க்கும் ஒவ்வொரு முறையும் நான் படித்தறிந்தச் சில தகவல்கள் மீண்டும் ஒரு முறை எனக்குப் பாடம் எடுத்துவிட்டுப் போகும். அன்றிரவும் என் உள்ளங்கையில் நான் சுமந்து உதடு நனைத்துக் கொண்டிருந்த காஃபி வழியாக எனக்குள் மெல்ல இறங்கிக் கொண்டிருந்தன சில உளவியல் உண்மைகள்.

நல்ல ஹான்ட்ஸாமாக இருக்கிறார்.

ஏறத்தாழ இரண்டு வருடங்களாக நானே இவரை தினமும் பார்க்கிறேன் என்றால் ஓரளவுக்கு நிரந்தரமாகிவிட்ட ஒரு வேலை தான்.

ஆலென் சொலி, வான் ஹூஸைன் என்று அணிவதெல்லாம் அந்நிய நாட்டு விலை உயரந்தத் தயாரிப்புகள் தான்.

நான் பார்க்க ஒரு நாள் ஒரு புது ஹோன்டா ஆக்டிவாவில் ரே பான் சகிதமாய் வந்து இறங்கியவருக்கு பணம் ஒரு பெரிய பிரச்சனையாக இருக்கும் எனவும் தெரியவில்லை.

குடும்பத்தில் பிரச்சனை, காதல் கீதல் னு ஏதாவதிருக்குமோ.

வாய்ப்பிருக்கிறதென்றாலும், அப்படி ஒரு பாதிப்புக்குள்ளான ஒரு நபர் எப்படி தனிமையை மட்டும் சந்தோஷமாக கொண்டாடிவிட முடியும். காஃபி தீரத் தீர குழப்பம் மட்டும் கூடக் கொண்டே போனது.
அவசியமான ஒரு எண்ண ஓட்டத்தையும், பேரவசியமான ஒரு மௌனத்தையும் கலைப்பதற்கென்றே மனிதனால் உருவாக்கப்பட்ட தேவையில்லாச் சப்தங்களில் கைக்கடிகார அலாரமும் அடக்கம் என்பதை புரிந்துக் கொள்ள உதவிய தருணமது.

ஒரு மாதத்தில் எத்தனை நாட்கள் பத்து மணிக்கு மேல் அலுவலகத்திலேயே குப்பை கொட்டுகிறோம் என்பதை அறிய விரும்பி என் காஸியோ எடிஃபிஸில் நான் பதிந்திருந்த அலாரம் கிசு கிசுத்தது. கூட்டிக் கழித்துப் பார்த்ததில் அது அம்மாதத்தின் பதினெட்டாவது மகத்தான நாள் என்பது புலப்பட்டது.
பத்து மணி. வேலை ஒப்பந்தந்தில் அலுவலக நேரமாகக் குறிப்படப்பட்டிருந்த 9am – 6pm கடந்த இருநூற்று நாற்பதாவது நிமிடத்தில் நான் இங்கு என்ன செய்துக் கொண்டிருக்கிறேன். கடந்த ஒன்றரை வருடத்தில், இந்த ஒரு கேள்விக்கு மட்டும் மனசாட்சி ஏற்றுக்கொள்ளும்படியான ஒரு பதிலை என்னால் கொடுக்க முடிந்ததில்லை.

இந்த அலுவலகத்தைப் பொருத்தமட்டில் பாதிக்கும் மேல் இப்படியான ஒரு குற்றவுணர்ச்சிக்கு ஆளானவர்களே. அந்தப் பட்டியலில் அந்த மனிதரின் பெயரும் வாசிக்கப்படும் என்பதை எப்படிப் புரிந்துக் கொள்வதெனத் தெரியாமல் திகைத்துக் கொண்டிருக்க, தூரத்தில் அவர் மீண்டும் லிஃப்டில் நுழைவதை பார்க்க முடிந்தது. அவரைத் தொடர்ந்து ஐந்தாறு நபர்களும். பாவம் என்று தோன்றியது.

பாலித்தீனை அழிக்கப் பிறந்ததாகச் சொல்லப்பட்ட ஒரு பேப்பர் கப்பின் உட்புறத்தில் மெழுகு போன்று ஏதோவொன்று கரைந்துக் கொண்டிருப்பதை கவனித்ததும் உயிர் மேல் உள்ள ஆசையில் என்னை நானே தடுத்துக் கொண்டேன். எப்பொழுதும் போல, செராமிக் கப் ஒன்றை இந்த வாரமாவது வாங்கிவிட வேண்டும் என்று நினைத்துக் கொண்டு அடுத்த லிஃப்டுக்காக காத்திருக்கத் தொடங்கினேன். கெல்லி கால் வேற இருந்தது அன்று.

Wednesday, March 26, 2014

தி ஷேக்ஸ்பியர் & சைகாலஜி

அலுவலகத்தில் ஒரு நபரை அநேக தினங்களிலும் சந்திக்கின்றேன். சில சமயங்களில் லிஃப்டில், சில சமயங்களில் பேன்டிரியில். சில சமயங்களில் காஃபெடெரியாவின் கார்னர் இருக்கைகளில், இன்னும் சில சமயங்களில் நான் பணியமர்த்தப்பட்டிருக்கும் இதே ஒன்பதாவது தளத்தில். யார் அவர்? பெயர் என்ன? ஒரு விவரமும் தெரியாது.

முப்பதிலிருந்து முப்பத்தைந்து வயதிற்குள் இருக்கும்.

நல்ல நிறம்.


தவறாமல் எண்ணை குடித்து வளர்ந்ததற்கான அத்தனை அம்சங்களோடும் அசைவை மறந்து படர்ந்திருக்கும் கருகரு முடி.

நன்கு தேய்க்கப்பட்ட முழுக்கைச் சட்டை.

எப்போதாவது நிமிர்ந்த தலை.

எப்போதுமே ஒரு சங்கடப் பார்வை.

புன்னகையா..? அப்படியென்றால்???

நான் தினம் கடந்துச் செல்லும் ஏதோவொரு பாதையில் இந்தப் புதிர் மனிதரின் பயணம் தொடர்ந்துக் கொண்டே இருக்கிறது. ஒரு சில நேரங்களில், குறிப்பாக லிஃப்ட் சந்திப்புகளின் போது, பத்து பதினைந்து நபர்களின் பார்வைகளை தவிர்க்கப் போராடும் அந்தக் குனிந்தத் தலையும் குறுகிய உருவமும் என் விழிவழிப் புகுந்து இதயத்தின் மௌனத்தோடு பேச முயற்ச்சித்திருக்கிறது.

ஓரிரு வாரங்களுக்கு முன்னொரு வெள்ளி இரவில், பணி அழுத்தங்கள் தன் இஷ்டத்திற்கு மேய்ந்து விட்டிருந்த என் உடலுக்கு கொஞ்சம் காஃபைனும், ஆக்ஸிஜனும் தேவைப்பட்டதில் முதல் தளத்தில் இருக்கும் பேன்டிரிக்குச் செல்வதென முடிவு செய்து லிஃப்டில் ஏறினேன். நான் தடுத்து நிறுத்தியது, கிட்டத்தட்ட கதவுகள் மூடப்பட்டுவிட்ட நிலையில், கீழிறங்க ஏற்கனவே தன்னை தயார்ப்படுத்திக் கொண்ட ஒரு லிஃப்ட் மட்டுமில்லை என்பது அப்போது தெரியவில்லை.

மூடிக்கொண்டிருந்த அந்தக் கதவுகளுக்குப் பின்னால் அவசர அவசரமாய் தன் மீது வெறுமையை வாரிப்போட்டு தன்னைப் புதைத்துக் கொள்ள முயற்சித்துக் கொண்டிருந்தது ஒரு புன்னகை. உள்ளே அதே நபர். தனியாய். அந்தக் கணத்திற்கு முன்பு வரை சந்தோஷமாகவும்.

சுற்றி யாருமேயில்லாத அந்தத் தனிமையை அதுவரையில் அவர் அனுபவித்துக் கொண்டிருந்திருக்க வேண்டும். யாருடைய பார்வையையும் தவிர்க்க வேண்டிய அவசியமில்லாத ஒரு நிம்மதியை என்னால் அவர் இழந்திருக்கலாம் என்று தோன்றியது. அநேகமாக அந்த மனிதர், இப்படிப்பட்ட தனித்த லிஃப்ட் பயணங்களில் மட்டுமே நம் எல்லோரையும் போல இயல்பாக, சந்தோஷமாக பயணிப்பார் போல. யார் கண்டார், அப்படியான முதல் வாய்ப்பையும், நிகழ்வதற்கு முந்தைய கணத்தில், சரியாய், நான் பறித்துவிட்டேனோ என்னவோ.

பதினைந்து முதல் இருபது நபர்கள் வரை அனாயாசமாகச் சுமக்கும் இடவசதி கொண்ட அந்த லிஃப்டில் அன்றிரவு நான் நிற்பதற்கே இடமில்லாதது போல உணர்ந்தேன். எனக்கே அப்படியென்றால், அவர் நிலைமை? என்னால் புரிந்துக் கொள்ள முடிந்தது.

Thursday, March 13, 2014

சரி கம பத நி ச

‘Fifteen years and still going stronger..’ என்ற தலைப்பில் ஒரு பதிவு. என்னடா என்று பார்த்தால் நமக்கெல்லாம் மிகவும் பரிட்சையமான ஒரு இசையமைப்பாளர் திரைத்துறையில் நுழைந்து பதினைந்து வருடங்கள் வெற்றிகரமாகக் கடந்துவிட்டதாகச் சொல்லப்பட்டிருந்தது.

தமிழில் போட்டதை தெலுங்கிலும், தெலுங்கில் போட்டதையே தமிழிலும் மாற்றி மாற்றிப் போடுவதெல்லாம்… என்று நீங்கள் கேட்க நினைப்பது புரிகிறது. என்னதான் கைவசமிருக்கும் பதினைந்து ட்யூன்களையே திரும்பத் திரும்ப போட்டு வருகிறார் என்றாலும், அந்தப் பதினைந்து ட்யூன்களுமே அசத்தலானவை என்பதை ஒப்புக் கொண்டுதான் ஆக வேண்டும்.

திரைப்படங்களுக்கு இசையமைக்க வந்ததற்குப் பதிலாய், ஒரு மேடைக் கலைஞராக தொடர்ந்திருந்தால், இவருக்கென ஒரு தனி ரசிகர் கூட்டத்தைச் சேர்த்திருப்பார் என்று பல சமயங்களில், குறிப்பாக, இவரது இசை வெளியீட்டு விழாக்களின் போது தோன்றியிருக்கிறது.

சரி கம பத நி ச.. சரி கம பத நி ச.. சரி கம பத நி ச.. யப்பா சாமி.. ஆள விடு!

Friday, March 7, 2014

நான் கண்ட முதல் பெண்ணுக்கு

வீட்டிற்கு வருபவர்களிடம்,
எனது
சிறு வயது புகைப்படங்கள் காட்டி
நீ மகிழும் போதெல்லாம்,
உனது சிறு வயதிற்கே
நீ காலம் பெயர்க்கப்படுகிறாய்!

o0o

உன் மகனை யாரும்
திட்டிவிடக்கூடாது என்பதில்
ரொம்பவும் விழிப்புடன் நீ..
அப்பாவிற்கு முந்தி
திட்டுவது போல
நடித்தாவது விடுகிறாய்!

o0o

என் கையை பிடித்து,
நீ பழக்கிவிட்ட எழுத்துக்களை,
நானும்
எப்படி எப்படியோ
கிறுக்கிப் பார்க்கிறேன்..
கவிதையாகவே முடிகிறது!!

o0o

எனது முகபாவங்களை,
இவ்வளவு ஆழமாக
படிக்கும் உன்னிடம்,
ஒவ்வொரு முறையும்
தோற்றுப் போகிறேன்..
உனை
ஏமாற்ற நினைத்து..!

o0o

நான் இரவில்
தாமதமாக வரும் போதெல்லாம்..
உனக்கு தூக்கமும்
தாமதமாகவே வருகிறது!

o0o

என் கண்ணீரில் கலந்திருக்கும்
பொய்மையை பிரித்தெடுக்கத் தெரிந்தும்..
ஒரு நாளும்
பழிக்காத தாய்மை!

o0o

விளையாடிய களைப்பில்,
வீடு வந்து,
நான் உறங்கிட,
என் உடல் முழுவதிலும்
தேடுதல் வேட்டையில்
நீ இறங்குகிறாய்..
நானே உணராத
காயங்களைப் பிடிக்க!

o0o

நான் உறங்கிய பின்
உறங்கி விட்டு
எனக்கு முன்னமே
விழித்தும் விடும் நீ
எப்படித்தான்
நாகூசாமல் சொல்கிறாயோ..
“என் மகன்
உழைக்கிறான்!” என்று

o0o

எனை சுமந்த
உன் இடுப்பெலும்பு
தேயத் தொடங்கிற்றுவென
நம் மருத்துவர் சொல்கிறார்.
அது சரி..
உனக்கும் வயதாகிறதே!

o0o

நான் என்ன தவம்
செய்தே னென
எனக்கே தெரியவில்லை..
எனை
தவமிருந்து பெற்றாளாம்!

Tuesday, March 4, 2014

என்ன மனுஷனோ???!!!

படித்திருக்கிறோம்.. ஆயிரங்களில், ஒரு சிலர் லட்சங்களில் கூட சம்பளம் வாங்குகிறோம்.. இன்னும் அதிக பணம், இன்னும் சிறந்த அம்சங்கள் அடங்கிய ஸ்மார்ட்ஃபோன், இன்னும் சௌகரியமான கார் என ஒரு பக்கம் இயந்திரத் தன்மையோடு நாம் நகர்ந்துக் கொண்டே இருக்க, திரு. நாகராஜ் போன்ற ஒரு சிலர் மட்டுமே மனிதர்களாய் உயர்ந்தும் நிலைத்தும் நிற்கிறார்கள்.
ஜோலார்பேட்டை பக்கம் போக நேர்ந்தால், இந்த மனிதனின் கால் தொட்டு வணங்கி வரலாம் என இருக்கிறேன்.

யார் அந்த நாகராஜ்? அப்படி என்ன செய்துவிட்டார் எனக் கேட்கிறீர்களா? இணையத்தில் கண்டெடுக்கப்பட்ட, ஒரு செய்தித் தொகுப்பினை அப்படியே கீழே பகிர்ந்திருக்கிறேன். வாசிப்பின் முடிவில் உங்களுக்கே புரியும்.

ஜோலார்பேட்டை ரயில் நிலையம் அருகில் வாணியம்பாடி செல்லும் சாலையோரத்தில் இருக்கிறது ஏலகிரி ஓட்டல். அங்குச் சாப்பிட்டுவிட்டுச் சிலர் பணம் கொடுக்காமல் வணக்கம் மட்டும் தெரிவித்து விட்டுச் செல்கின்றனர். கல்லாவில் இருந்தவரும் காசு கேட்பதில்லை. பணத்துக்குப் பதில் வணக்கம் செலுத்தினால் போதுமா? விசாரித்தபோதுதான் மேலே தொங்கிக்கொண்டிருந்த சிலேட்டுப் பலகைகளைக் காட்டினார். விஷயம் புரிந்தது.

‘முதியோர், ஊனமுற்றோர்களுக்கு காலை 8 முதல் 11 மணி வரை இலவச உணவு’ (100 பேர் வரை), ‘பால் வாங்கப் பணமில்லையென்றால் குழந்தைகளுக்கு இலவசமாகப் பால்’, ‘வாரம் 100 மாணவர்களுக்கு இலவசமாக பேனா அல்லது பென்சில்’, ‘1 முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு காலை முதல் மாலை வரை பாதி விலையில் உணவு’ இந்த அறிவுப்புகள் சிலேட்டுப் பலகைகளில் சாக்பீஸால் எழுதப்பட்டிருந்தன.

ஆச்சரியத்துடன் கேட்டால், “பணத்துக்காக வாழ்றதில்லிங்க; வாழ்றதுக்குதாங்க பணம்” பெரிய தத்துவத்தை எளிதாகச் சொல்கிறார் இந்த ஓட்டலின் உரிமையாளர் நாகராஜ். அவர் இந்தச் சேவையை 25 ஆண்டுக்கும் மேலாகச் செய்துவருகிறார். ஒரு நாளைக்கு ஏறக்குறைய 100 பேர் வரை இந்த ஓட்டலை நம்பியே காலம் தள்ளுகின்றனர்.

ஜோலார்பேட்டை ரயில் நிலையம் வட மற்றும் தென் தமிழகம், கர்நாடகம் மற்றும் ஆந்திரத்தை இணைக்கும் முக்கியச் சந்திப்பு. இந்த நிலையத்தைக் கடந்ததுதான் அனைத்து ரயில்களும் பயணிக்கின்றன.

பயணத்தின்போது காலி தண்ணீர் பாட்டிலை ஜன்னல் வழியே வீசுவதைப்போல குடும்பத்தில் பாரமென கருதப்படும் மனிதர்களை ரயிலில் அழைத்து வந்து இங்கே இறக்கிவிட்டுச் சென்று விடுகின்றனர். அவர்கள் பெரும்பாலும் முதியவர்கள் மற்றும் மனநிலை பாதிக்கப்பட்டவர்கள். மாதந்தோறும் குறைந்தபட்சம் 15 பேராவது இப்படி அனாதைகளாகத் தனித்து விடப்படுகின்றனர்.

திக்குத் தெரியாமல் தவிக்கும் அவர்கள் ஜோலார்பேட்டையிலேயே சுற்றித்திரிகின்றனர். இவர்களுக்கு இந்த ஓட்டல் ஒரு அன்னச் சத்திரமாக இருக்கிறது. “பசி என்ற உணர்வு மட்டும்தான் சுயநினைவு இல்லாதவருக்குக்கூட உணவு நமக்கு தேவை என்பதை உணர்த்துகிறது” என்கிறார் நாகராஜ்.

இவர்கள் தவிர சுற்றுவட்டாரங்களில் வீடுகளில் கவனிக்க முடியாத நிலையில் இருக்கும் முதியவர்களுக்குத் தேவையான உணவை அவர்களது குடும்பத்தினர் வந்து இலவசமாக பார்சல் வாங்கிச் செல்லலாம். நாகராஜின் மனைவி சுஜாதாவும் தன் கணவரின் இந்தத் தொண்டுக்குப் பக்கபலமாக இருக்கிறார்.

மிகச் சின்ன வருமானத்தில் இதையெல்லா எப்படிச் சமாளிக்கிறீர்கள் என்ற கேள்விக்கு, “இவர்களுக்கென்று தனியாக உலை வைக்கப்போதில்லை. வழக்கமாக சமைக்கும் அளவோடு கொஞ்சம் கூடுதலாக சமைக்கிறேன். 5 கிலோ மாவு புரோட்டோ போட்டாலும் 10 கிலோ மாவு போட்டாலும் மாஸ்டருக்கு ஒரே கூலிதான். எரிபொருளும் ஏறக்குறைய ஒரே அளவில்தான் செலவாகிறது.

சில ஆயிரம் ரூபாய் வருவாய் இழப்புதான் என்றாலும் எனக்கு குடும்பம் நடத்தத் தேவையான லாபம் கிடைக்கிறது. மனதுக்கும் சந்தோஷமாக இருக்கிறது” என்கிறார் வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் ‘வாடி நிற்கும்’ நாகராஜ்.

செய்தி முடிந்தது.

நாகராஜ் நினைத்திருந்தால், காசாக்கத் தவறியவைகள் கொண்டு தனது ஹோட்டலை விரிவுபடுத்தியிருக்கலாம், ஹோட்டல் வாசல் முன்பு ஒரு இன்னோவா காரை நிறுத்திவைத்திருக்கலாம், தனது மனைவிக்கு ஒரு நெக்லஸ் வாங்கியிருக்கலாம், அட இது எதுவுமே இல்லையென்றாலும் இந்தத் தலைமுறையின் குறைந்தபட்ச ஆடம்பரமான ஒரு ஸ்மார்ட்ஃபோனையாவது வாங்கித் தொலைத்திருக்கலாம். ஆனால் அவருக்கென்னவோ மனிதம் வளர்க்கத்தான் பிடித்திருக்கிறது. என்ன மனுஷனோ???!!!