Tuesday, February 17, 2015

அது ஒரு ப்ரீபெய்ட் காலம்!!

எதை எதையோ பற்றி எழுதுகிறாய்,
எனைப் பற்றி எழுதேனெனக் கேட்டுவிட்டாய்!
வாலியும் தாசனும் என்னுள் கொண்டும்,
கவி இயற்றப்படாக் காரணம் உன்னில் கொண்டாய்!
*
உன்னில் ரசிக்கும் ஒவ்வொன்றையும்,
நான் எழுத்தில் செதுக்கத் துடித்திடுவேன்..!
அதை எழுதத் தொடங்கும் அக்கணமே,
மீண்டும் ரசிக்கும் வேலை தொடங்கிடுதே!!
*
தாயின் அணைப்பில் உறங்கிய எனை,
தனியறை கேட்டிடத் தூண்டிவிட்டாய்!
போர்வைதான் தனிமை கொடுத்திடினும்,
அலைபேசி துணையால் இணைந்துக் கொண்டோம்.
*
வாயசைவின் உணர்ச்சியே தொடுவதில்லை
ஆனால் வார்த்தைகளாய் உனை வந்து சேர்கிறது!
போர்வைக்குள் நாம் செய்யும் இவ்வொலிப்பதிவு
எந்த ஒலியியல் கொம்பனையும் வியக்க வைக்கும்!!
*
உன் அலைபேசி உதட்டை நீ கடித்தும்,
என் செவியினை இதமாய்த்தான் துளைக்கிறது!
ரசிக்கிறேன் என்று மட்டும் நினைக்காதடி!
உன் நோக்கியாவிற்கு எமன் நான்தானடி!!
*
மாதம் ஒருமுறை அந்த நிலவுகூட,
சொல்லாமல் கொள்ளாமல் உறக்கம் கொல்லும்!
என் தனிமையை மெருகேற்றும் இக்கருப்பிரவோ,
நம் நெருக்கத்தில் நெருப்பூட்டி காதல் வளர்க்கும்!!
*
என் உறக்கம்.. மூடிய உன் இமைகளின் மேல்,
அதன் முடி அசைவிலும் நான் விழித்தெழுவேன்!
இரவினில் பிறக்கும் காதலோடு,
உன் கண்மணி அசைவோடு மிதந்திடுவேன்!!
*
நீ தூங்கும் அழகைக் கவிபாட,
புதுக்கவிஞன் ஒருவன் குதித்திடுவான்!
அதை நானும் படித்து இன்புறுவேன்..
அவன் உனக்கும் எனக்குமே பிறந்துவிட்டால்!!
*
உன் இதழ்வழி கசியும் ஒரு வார்த்தை,
இனிக்கத்தான் போகிறதெனக் காத்திருக்க..
என் நிலுவைத் தொகையில் பற்றாக்குறையென,
நம்ம ஏர்டெலைப் பெத்த ஆத்தா கூவிவிடுவாள்!!

No comments:

Post a Comment