Thursday, September 5, 2013

அனாதை!

தவழத் தொடங்கும் முன்,
தாயை இழந்தவனுக்கு மட்டுமே தெரியும்..
அனாதை என்பதன் முழு அர்த்தமும்!

o0o

‘உயிர்’ எழுத்துக்களை,
மறந்துவிட்ட பிரம்மன்!
எழுத்துப்பிழையாய்
இவன்!

o0o

நாத்திகர்களில் பாதிபேர்,
அனாதையாகக்கூட இருக்கலாம்..
தாயே இல்லாத போது,
சாமி எங்கிருந்து
என்ற எண்ணமோ என்னவோ!

o0o

காதலுக்கு பரிசாய்,
அழகாய் ஒரு குழந்தை!
அதில் கள்ளம் கலப்பதால்,
இனாமாய் ஒரு பட்டம்!

o0o

பெற்று விடுத்த ஜோடிக்கும்
ஈரம் இல்லை!
பெயர் கொடுத்த கோடிக்கும்,
ஈரம் இல்லை!
இடையில்..
அசிங்கப்பட்டு அழுவதெல்லாம்..
இந்த அப்பாவி நண்பன் தான்!!

o0o

உடற்ச் சுகம் தந்த
முதல் சோகம்!

o0o

ஒரு அனாதையைத் தத்தெடுக்கும் முன்,
உன் நாவினை தானம் கொடுத்திடு!
இல்லையேல்..
என்றாவது ஒரு நாள்,
கோபத்தில்.. அது
உண்மையை உளறிவிடும்!

o0o

ஒரு அனாதை இல்லத்தில்,
விவரமறியா குழந்தைகள் கூட,
விளையாட்டாக பேசிக் கொள்கின்றன..
“நீ அம்மா.. நா அப்பா..
இது நம்ம கொழந்த!” என்று
குப்பைத் தொட்டிகளில்
போடும் முன்பாவது
உங்களுக்கும் இதுபோல
தோன்றிருக்கலாம்..!

No comments:

Post a Comment