Monday, September 2, 2013

விவாஹக் கவிதை!!

என் கவிதைகளைக் கேட்டு வாங்கி விரும்பிப் படிப்பவர். இது அருமை, இதை இப்படி எழுதினால் இன்னும் சிறப்பாக இருக்கும் என உரிமையுடன் என்னுடன் பகிர்பவர். என் எழுத்துக்கள் மேல் என்னை விட அதிகம் நம்பிக்கை கொண்டவர். அவர் காதலித்து மணமுடிக்கும் அந்த தருணத்தைக் கொண்டாட அச்சிடப்படும் பத்திரிக்கைக்குக் கவிதை எழுதித் தரச் சொல்லி வாங்கியதோடு நில்லாமல், எங்கோ பிறந்து, இடையில் சில வருடங்கள் முன்பு தொடங்கி, உடன் பயணிக்கும் என்னை, அதே பத்திரிக்கையில் தம்பி எனக் குறிப்பிட வேண்டிய அவசியம் அவருக்கு யதார்த்தமாகவே பட்டிருக்கிறது. “ஒரு இளவரசியை கல்யாணம் முடிக்கப் போகிறேன். ஒரு கவிதை எழுதி கொடு!” என்று கேட்டார். நானும் எழுதினேன்.

“இன்று எனது உணர்வுகள் ஏனோ
பலநூறு வருடங்கள் பின்னோக்கிப் பறக்கின்றன.

என் கண்முன்னே மிளிர்கிறது,
ஒரு தெளிந்த குளம்.
நடுவிலே.. ஒரு அம்புஜம்.

என்ன இது எங்கிருக்கிறோமென
கொஞ்சம் சுதாரித்துக் கொள்ள முயல்கையில்,
அக்குளத்தின் மையத்திற்கு
நானும் இடம் பெயர்க்கப்படுகிறேன்.

மலர் கண்ட இடத்தில்.. ஒரு மங்கை!
அதன் பிம்பம் கிடந்த இடத்தில்.. நான்!
கொஞ்சம் கொஞ்சமாகப் புரியத் தொடங்குகிறது.

மிகவும் பரிட்சயமான அந்த முகம்,
பாண்டிய நாட்டு இளவரசிக்குச் சொந்தம்.
என் கண்களுக்குள் பார்த்தவள் கேட்கிறாள்,
“நீ.. சேர நாட்டவன் தானே?” என்று.

அந்த பிரம்மையில் இருந்து
விடுபட நினைக்கையில்..
சுற்றம் சட்டென்று மாற்றி அமைக்கப்படுகிறது.
ராஜ குல சுபமுகூர்த்தங்கள்
நடைபெறும் ஒரு அவையில்,
மணக்கோலத்தில் நான் அமர்ந்திருக்கிறேன்.
தூரத்தில்.. இளவரசி,
என்னை நோக்கி நடந்து வருகிறாள்!

கண்மூடித் திறக்கிறேன்..
நிகழ்காலத்தில் நிற்கிறேன்!
கையில் மலர் மாலை..!
அது வழியே என் காதலி முகம்..!
அட்சதை நிரப்பப்பட்ட ஒரு தாம்பூலத் தட்டில்,
ஒரு தேங்காய்..!
ஒரு தாலி..!
ஒரு அம்புஜம்..!

அட.. இன்றெனக்குக் கல்யாணம்!
வந்து விடுங்கள்! வாழ்த்துங்கள்!!”

No comments:

Post a Comment