Monday, August 24, 2015

பிரிவென்னும் மாயை!!

எல்லோரும் நீ
ஊருக்குப் போயிருக்கிறதாக
இன்று காலை பேசிக்கொண்டிருந்தார்கள்..
எனக்குச் சிரிப்பு தான் வந்தது!

நேற்று மாலை கூட,
அடுப்பில் எனக்கானத் தேனீர்
நுரைத்துக் கொண்டிருக்க,
அருகில் நின்றபடி எனைப் பார்த்துப்
புன்னகைத்தாய் எனச்
சொல்லியிருப்பேன் அவர்களிடம்..
நமக்கென்ன வந்ததென்று விட்டுவிட்டேன்!

தினம் நான் குளித்து
தலை துவட்டிக்கொண்டிருக்க,
எனது விருப்பமான பர்ஃப்யூமை
மேஜை மீதெடுத்து வைப்பது..

நீ வழக்கமாய் விரும்பிக்
கேட்கும் பாடல்கள் கொண்டு,
நமது காரை நிரப்பி
அலுவலகம் வரை உடன் பயணிப்பது..

அந்தி சாய்ந்திட,
நேரமாச்சு.. போய் அவளை
அழைத்து வா! என
என் காது மடலில் முத்தமிடுவது..

வீடே உறங்கிவிட்ட நேரத்தில்,
இரவு உணவை நான் முடிக்கும் வரை
தனிமையைத் துரத்தி
அருகிலேயே அமர்ந்திருப்பது..

அவ்வளவு ஏன்..
நள்ளிரவு பெய்யும் பேய் மழையினூடான
ஓரிரு இடிச் சத்தத்திற்கு
என்னை இறுக்கப் பிடித்துக் கொள்வது..

இதெல்லாம் யாராம்?

எனக்குத் தெரியும்..
நீ இன்னும் என்னோடு
இதே வீட்டில் தான்
வாழ்ந்துக் கொண்டிருக்கிறாய்!

எனக்கு மட்டுமே தெரியும்!!

No comments:

Post a Comment