Thursday, August 13, 2015

பிரிவுத் தூது!!

நேற்றெனது கனவில்,
தூதேந்தி வந்த தேவதை ஒன்று,
ஒரு துண்டுச் சீட்டை
என் கைகளில் திணித்து இறந்துப் போகிறது!

சகுனமே சரியில்லையேயென்று
பிரித்துப் படிக்க முயற்சிக்கிறேன்..

ஏதும் எழுதப்படாதொரு
வெள்ளைக் காகிதகக் கிழியலது!

குழம்பிப் போய் நின்றிருக்க,

காகிதம் மீது
எழுத்துகள் முளைக்கின்றன
ஒவ்வொன்றாய்..

தொலை தூரம் கடந்து செல்ல
கொடும் பிரிவு வந்து சேரும்!

அருகாமை நிலவு நீங்கி
உன் இரவு வான் ஊனமாகும்!

உணவென்பதே பிடிக்காது!
உறக்கமா அது இனி ஏது?

காலங்கள் கரையாமல்
நான் பார்த்துக் கொள்வேன்!

நாள் தோறும் குறையின்றி உனை..
நானே கொல்வேன்!

காத்திரு..! காத்திரு..!!

எழுத்துகள் மறைந்து..
மீண்டும் அதே வெள்ளைக் காகிதம்,
துண்டுச் சீட்டாய்..
என் கைகளில் திணிக்கப்பட்ட நிலையிலிருந்து விடுபட்டு,
இறந்துப் போன தேவதை உயிர்த்தெழ..
அதனோடு பறந்துப் போகிறது!

நான் விழித்துக் கொள்கிறேன்!!

No comments:

Post a Comment