Tuesday, August 4, 2015

மதுவிலக்கு – ‘மதி’விலக்கு

நமக்கு நினைவு தெரிந்ததலிருந்து குளிக்காமல் கொள்ளாமல், எப்பொழுதும் அழுக்காய், குடும்பத்திற்கு பத்து பைசாவிற்கும் பிரயோஜனம் இல்லாமல் தறுதலையாக ஊர் சுற்றி, எந்நேரமும் குடியும் கும்மாளமுமாய் இருந்த ஒருவன் திடீரென ‘நான் திருந்தி வாழப் போகிறேன்’ என்று எத்தனையாவது முறையென்றே தெரியாத அத்தனையாவது முறை சொன்னால், நாம் அவனை எப்படி அணுகுவோமோ, அப்படித்தான் நம்மை வெளியுலகம் அணுகுகிறது.

மேலும் இந்தப் போராட்ட முறைகள் எல்லாம் ‘என்ன செய்கிறோம் என்று தெரிந்து தான் இவர்கள் செய்கிறார்களா?’ என்ற கேள்வியைத் தருகிறது. சரக்கு பாட்டில்களை உடைப்பதினால் சரக்கு வேண்டுமானால் தீர்ந்து போகும், சரக்குக்கு அடிமையானவர்கள் எப்படித் தீர்ந்துப் போவார்கள்?

மதுவிலக்கு நல்ல விஷயம் தான். மதுவிலக்கு எவ்வளவு முக்கியமோ அதை விடவும் முக்கியம் ‘மதி’விலக்கு. அதாவது நம்மாட்களின் மழுங்கிய புத்தியை சுத்தப்படுத்தி அதில் சரியானச் சிந்தனைகளை விதைப்பது. மதிவிலக்கு இல்லாத மதுவிலக்கு வெறும் கண்துடைப்பாகவே அமைந்து விடும்.

என்னதான் டாஸ்மாக்குகள் ஒழிந்தாலும், நகரத்தின் காஸ்ட்லி ஏசி பார்கள், நவநாகரீக கேளிக்கை விடுதிகள், மது பரிமாறும் நட்சத்திர ஒட்டல்கள் தொடர்ந்து இயங்கத்தான் போகின்றன, காசு படைத்தவன் குடிக்கத்தான் போகிறான்.

ஏற்கனவே, இந்தியாவில் நடக்கும் அக்கிரமங்களுக்கு பாலியல் வறட்சி ஒரு காரணமாகிவிட்டது. பாட்டில் வறட்சி என்றொன்று உருவாகி அதனால் அக்கிரமங்கள் கூடாமல் இருந்தால் சரி.

குடி குடியைக் கெடுக்கும் என்பது மாறி, குடிக்க முடியாதவன் குடிப்பவனின் குடியை கெடுக்கும் நிலை வந்துவிடக் கூடாதென்கிற அச்சம் தான்.

மருத்துவத் துறையில் இருப்பவர்களுக்கு நான் சொல்வது புரியும். Sudden withdrawal of drugs, அதாவது நீண்ட காலமாய் உட்கொள்ளப்பட்டு வந்த ஒரு மருந்தை சட்டென்று பயன்பாட்டிலிருந்து நீக்குவது, மிகவும் அபாயகராமான முடிவுகளைக் கொடுக்கும் என்று சொல்வார்கள். அது உடல்ரீதியாகவும் இருக்கலாம் மனரீதியாகவும் அமையலாம். இந்த விதி Alcohol க்கும் பொருந்தும்.

டாஸ்மாக் இல்லாத தமிழகத்தை உருவாக்கும் எண்ணத்தை விடுத்து, முதல்கட்டமாக, குடியிருப்பு, மருத்துவமனை மற்றும் கல்வி நிலையங்களுக்கு அருகிலிருக்கும் மதுபானக் கடைகளை களைவது, அடுத்து, டாஸ்மாக்குகளின் எண்ணிக்கையை படிப்படியாகக் குறைப்பது, பிறகு, அலுவலகங்களில் எப்படி யாருக்கும் தொந்தரவில்லாத விதம் ஒதுக்குப்புறமாய் Smoking Zone அமைத்திருக்கிறார்களோ அதுபோல ஒவ்வொரு ஊரிலும் ஒதுக்குப்புறமாய் ஒரு பகுதியை தீர்மாணித்து டாஸ்மாக்குகளை அங்கு இடம் மாற்றுவது போன்ற நடைமுறைக்குரிய நடவடிக்கைகளில் இறங்குதல் உத்தமம்.

No comments:

Post a Comment