‘இந்தச் சமூகத்தில் நீ யார்?’ என இனி யாராவது என்னை நோக்கி கேள்வி எழுப்பினால், அவர்களுக்குப் போட்டுக் காண்பிக்க ஒரு காணொளி கிடைத்திருக்கிறது. நான் யாராக இருக்க முயல்கிறேன் என்பதை சில நேரங்களில் என்னால் வார்த்தைகளால் விளக்க முடிவதில்லை. நான் சொல்லும் பாதியைக் கூட கேள்வி கேட்டவர்களால் புரிந்துக் கொள்ள முடிவதில்லை. இனி அந்தக் கவலைகளெல்லாம் இருக்காது.
O & M பற்றிக் கேள்விப் பட்டிருப்பீர்களா என்று தெரியவலில்லை. Oglivy & Mather என்பதன் சுருக்கம் தான் அது. பாங்காக்கை தலைமையகமாகக் கொண்டு இயங்கி வரும் ஒரு விளம்பர நிறுவனம். அந்த நிறுவனம் பற்றியும் அவர்கள் தயாரிக்கும் விளம்பரங்கள் பற்றியும் இணையத்தில் சமீபத்தில் தான் படித்தறிந்துக் கொண்டேன். உணர்வுப்பூர்வமான விளம்பரங்கள் தருவதில் வல்லவர்களாகத் தெரிகிறார்கள். குறிப்பாக Thai Life Insurance க்காக சுமார் இரண்டு வருடங்களுக்கு முன்பு அவர்கள் தயாரித்திருந்த ஒரு விளம்பரம் மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றிருக்கிறது.
அது காது கேளாத, வாய் பேச இயலாத ஒரு அப்பா, அவருக்குப் பிறந்த ஒரு சிறுமி அவ்விருவர் பற்றிய உணர்வுப்பூர்வமானதொரு படைப்பு. ‘Silence of love’ என்று கூகுள் செய்துப் பாருங்கள். அந்தக் காணொளியை வெறும் வர்தக ரீதியான விளம்பரமாக ஏற்றுக் கொள்ள முடியாமல் உள்ளம் திணறும். கொஞ்சம் கண்ணீர் எட்டிப்பார்க்கும். இவ்விரண்டுக்கும் நான் உத்திரவாதம். பார்த்துவிட்டுச் சொல்லுங்கள்.
இப்பொழுது அதே நிறுவனம், அதே Thai Life Insurance க்காக மற்றுமொரு காணொளியை தயாரித்திருக்கிறது. அநாமதேய மனிதன் ஒருவர் சாலையோர நடைபாதையில் நடந்து வருகிறான். அருகாமையில் இருக்குமொரு கட்டிடத்தின் மேல்தளத்தில் கழிவு நீர் வடிவதற்காக அமைக்கப்பட்டிருக்கும் குழாய் அவனைக் குளிப்பாட்டுகிறது. ஒரு நிமிடம் நின்று அன்னாந்துப் பார்த்துவிட்டு அருகில் இருக்கும் இலைகளற்றுக் காணப்படும் ஒரு காய்ந்தச் செடியை தொட்டியோடு அந்தக் கழிவு நீர் விழும் இடத்திற்குக் கிடத்துகிறான். தன் நடையை தொடர்கிறான்.
ஒரு பத்து பதினைந்து அடி முன்னால், வயது முதிர்ந்தப் பெண்ணொருத்தி தனது தள்ளு வண்டியை சாலையிலிருந்து அந்த நடைபாதை மேட்டில் ஏற்ற சிரமப் படுவதைப் பார்க்கிறான். ஓடிப் போய் உதவுகிறான்.
அடுத்த ஷாட்டில், உணவு விடுதியின் நாற்காலி ஒன்றிலமர்ந்து பசியாறிக் கொண்டிருக்கும் அவனிடம் ஒரு நாய் உணவு கேட்டுப் பாவமாய் நிற்கிறது. தனது தட்டிலிருந்து ஒரு லெக் பீஸை எடுத்து அந்த நாய்க்கு கொடுக்கிறான். அதைக் கவனித்தக் கடைக்காரன் தலையசைத்துத் தனது உடன்பாடின்மையை வெளிப்படுத்துகிறான். அவனது நடைப்பயணம் தொடர்கிறது.
சிறிது தூரத்தில் ஒரு தாய், ஒரு சிறுமி அருகருகே அமர்ந்து பாதசாரிகளை நோக்கிக் கைக்கூப்பிப் பிச்சை எடுப்பதைப் பார்த்து நிற்கிறான். சிறுமி முன் கிடத்தப்பட்டிருக்கும் ஒரு சிறு வெண்பலகையில் ‘படிப்புக்காக’ என்று எழுதியிருக்கிறது. தனது பணப்பையை வெளியெடுத்து அதிலிருந்த இரண்டு நோட்டுகளையும் அந்தச் சிறுமியின் கைகள் பிடித்திருக்கும் ஒரு காகிதக் குவலையில் திணிக்கிறான். அது அருகில் இருக்கும் ஒரு கடைக்காரரை திருப்திப்படுத்துவதாய்த் தெரியவில்லை. அவரும் தலையசைக்கிறார்.
பிறகு அதேநாளில் தனது குடியிருப்புப் பகுதியில் மூடியிருக்கும் ஒரு கதவின் வாயிலில் வாழைப் பழச் சீப்பு ஒன்றை தொங்க விடுவது, தான் வளர்க்கும் பறவைகளுக்கு இரை வைப்பது, செடி கொடிகளுக்குத் தண்ணீர் பாய்ச்சுவது, குளித்துச் சுத்தமாவது, மண்டியிட்டு இறை வணக்கம் செலுத்துவது, ஒரு சராசரி உணவு உண்பதுவென அவனது தினசரி வாழ்க்கையின் தரம் காட்டப்படுகிறது.
இது தான் அவன். இது தான் அவனது வாழ்க்கை. இதனால் அவனுக்கு என்ன கிடைக்கப் போகிறது, அவனைச் சுற்றியுள்ள சமூகம் என்ன மாற்றம் கண்டுவிடப் போகிறது, அதையெல்லாம் அந்தக் காணொளியைப் பார்த்துத் தெரிந்துக் கொள்ளுங்கள்.
நல்லவனாய் இருப்பது எதையேனும் சாதிப்பதற்கோ நிரூபிக்கவோ அல்ல கடைசி வரை வெறும் நல்லவனாய் மட்டுமே இருப்பதற்கு. இதை இந்த உலகம் என்று புரிந்துக் கொள்கிறதோ, அன்று தொடங்கி உலகில் மனிதம் ஒன்று மட்டுமே ஓங்கி நிற்கும்.
No comments:
Post a Comment