Thursday, April 3, 2014

மதுரையில் ராஜா

மதுரையில் நாளை மறுநாள் சங்கீதத் திருநாள் என்ற பெயரில் இளையராஜாவின் இசை நிகழ்ச்சி நடக்க இருக்கிறது. இதுவரை இல்லாத அளவில் அரங்கேற இருக்கும் அந்த நிகழ்ச்சியை கார்த்திக் ராஜா ஏற்பாடு செய்திருப்பதாகத் தெரிகிறது. நிகழ்ச்சிக்கான டிக்கெட்டுகளுக்கு ஏகக் கிராக்கி, ரசிகர்கள் எல்லாம் முன்டியடித்துக் கொள்கிறார்கள் என்பதெல்லாம் சொல்லித் தெரிந்துக் கொள்ள வேண்டியதில்லை. ராஜா. இந்த ஒரு வார்த்தை போதும்.

மன்னன் திரைப்படத்தில் சின்ன தம்பி படத்திற்கான முதல் காட்சி டிக்கெட்டுகள் வாங்கும் முதல் இரு நபர்களுக்கு தங்கச் சங்கிலி, தங்க மோதிரம் வழங்கப்படும் ஒரு காட்சியமைப்பு இடம் பெற்றிருக்கும். அது தழுவியோ என்னவோ இந்த நிகழ்ச்சிக்கும் அது மாதிரியான ஒரு ஏற்பாடு செய்திருக்கிறார்கள். அதன்படி, ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் விலை கொடுத்து டிக்கெட் வாங்குவோருக்கு ராஜாவே தன் கையால் டிக்கெட் வழங்குகிறார். 

ராஜாவை சந்திப்பதும், அவர் கையால் டிக்கெட் வாங்குவதும் நிச்சயமாக எந்தத் தங்கச் சங்கிலி-தங்க மோதிரத்தை விடவும் எண்ணிலடங்கா மடங்கு சிறந்ததே. சிலர் அதைப் பிறவிப் பயனாகக் கூடக் கருதுவார்கள். ஆனால், அந்த ஒரு லட்ச ரூபாய் சமாச்சாரம் தான் இடிக்கிறது. அதற்குப் பதிலாய் அந்தப் படத்தில் வருவது போலவே முதல் இரண்டு நபர்களுக்கே அந்த வாய்ப்பினை வழங்கியிருக்கலாமோ என்று தோன்றுகிறது.

இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க, இரண்டரை லட்சம் கொடுத்து ஒரு ரசிகர் ஒரு டிக்கெட்டை வாங்கியிருப்பதாகப் படித்தேன். 

நாமெல்லாம் ரசிகர்கள். இசை, ராஜா மீதானத் தீராக் காதலில், இதைவிட அதிக விலையென்றாலும் கொடுக்கத் தயாராக இருப்போம். ஆனால், இசையென்ற மாபெரும் கலையை, அதுவும் அந்தக் கலையே பெற்றெடுத்தப் பிள்ளையாகப் பார்க்கப்படும் ராஜாவை மையமாகக் கொண்டு நடக்கும் ஒரு நிகழ்ச்சியை ஒருங்கிணைக்கும் மாபெரும் பொறுப்பில் இருப்பவர்கள் இந்த விலைப்பட்டியல் பற்றி இன்னும் கொஞ்சம் யோசித்திருக்க வேண்டாமா? யோசித்திருக்கலாம்.

No comments:

Post a Comment