Tuesday, April 1, 2014

தி ஷேக்ஸ்பியர் & சைகாலஜி 4

“மச்சி கிளம்பலாமா.. ஐயம் டன்”

“இல்ல டா. இன்னும் கொஞ்ச நேரம். இப்போ தான் கெல்லியோடு கால் முடிஞ்சது”

“அந்தக் கிழவனா.. என்ன சொல்றான் %#&#%&”

“டேய் ஏன் இப்படி”

“பத்தரை மணிக்குக் கால் செட் பண்ணுறவன இன்னும் அசிங்கமா கூட திட்டலாம்.. ஆஃபிஸ் கம்யூனிகேட்டராச்சே னு பாக்குறேன்..”

“சரி சரி. ஆன்சைட்டுக்கு ஒரு மெயில் மட்டும் போடனும். டென் மினிட்ஸ்”

“ஓகே அப்போ. நான் கிரௌன்ட் ஃப்ளோர் லாபில வெய்ட் பண்றேன். லேட் பண்ணிடாத. அல்ரெடி பசி உசுரு போகுது”

“ஷ்யூர்”

கார்த்திக் அவே போனான்.

எட்டு வருடங்களுக்கு முன்பு வேலை தேடி சென்னை வந்தபோது எனக்கு அறிமுகமான முதல் நபர் கார்த்திக். சோர்வுகளுக்கும் ஏமாற்றங்களுக்கும் பஞ்சமில்லாமல் இருந்த அந்தக் காலக்கட்டத்தில் ஒரு நேர்கானலில் ஒன்றாக வெளியேற்றப்பட்டோம் என்ற ஒற்றுமையோடுச் சேர்ந்துக் கொண்டோம். அதன் பிறகு, எட்டு வருடங்கள், மூன்று நிறுவனங்கள், மான்ஷனில் தொடங்கி ஏழெட்டு வீடுகள், இருபதுக்கும் மேற்பட்ட ரூம் மேட்ஸ்கள். நாங்கள் மட்டும் அப்படியே இருந்துவிட்டோம். ஒரு வெற்றியாளனின் மற்றொரு வெற்றியாளனுடனானக் கூட்டணியை விட, தோல்வியுற்ற ஒருவனின் மற்றொரு தோல்வியுற்றவனுடனான கூட்டணிக்கு என்றைக்குமே சக்தி அதிகம். எங்கள் விஷயத்திலும் அதுவே உண்மையாகிப் போனது.

மனுஷன் பொதுவாப் பசி தாங்க மாட்டான். பசியில் அவன் பேசும் வார்த்தைகளை மனுஷன் தாங்கமாட்டான். இது தான் கார்த்திக். அவனை நன்கு அறிந்த எல்லோருக்குமே இது தெரியும்.

அன்றிரவு கார்த்திக் என்னை நம்பியும் நான் மெயின் ரோட்டில் உள்ள ஒரு செட்டிநாடு மெஸ்ஸை நம்பியும் வெளியேறினோம். அன்று மட்டும் அந்த மாஸ்டர் மனதிறங்கி, அனைக்கவிருந்த அடுப்பை தொடர்ந்து எறியவிட்டு ஒரு கொத்துப் பரோட்டா போட்டுத் தராமல் போயிருந்தால் கார்த்திக்கின் காரசாரமான வார்த்தைகளுக்கு நானும் கெல்லியும் கொத்துப் பரோட்டா தான்.

அவன் சாப்பிட்டு முடித்து பசி தீர்ந்த்தற்கான அறிகுறிகள் அவன் முகத்தில் தென்படும் வரை நான் அமைதியாக இருந்தேன். மெல்ல பேச்சைத் தொடங்கினேன்.

“டேய் இன்னைக்கு அவன மறுபடியும் பார்த்தேன் டா”

“எவன?”

“அதான் டா, நம்ம மிஸ்ட்ரி மேன்”

“ஆரம்பிச்சுட்டியா.. நீ வேணும்னா பாரு.. அவன பத்தி யோசிச்சு யோசிச்சு ஒரு நாள் நீயும் பைத்தியம் 
ஆகப் போற”

“அந்தாளு ‘நா பைத்தியம்’ னு உன்கிட்ட வந்து சொன்னாரா?”

“எந்தப் பைத்தியம் சொல்லியிருக்கு”

“மூடு. ஒருத்தவங்கள புரிஞ்சுக்கப் பொறுமை இல்லனா உடனே அவங்கள பைத்தியம் னு சொல்றதா. நீ இப்படித்தான் பேசுவனு தெரிஞ்சும் உங்கிட்டையே திரும்பத் திரும்ப சொல்றேன் பாரு. என்னச் சொல்லனும்”

“அப்படியில்லடா.. நா என்ன சொல்ல வந்தேன்னா..”

“நீ ஒன்னும் சொல்லத் தேவையில்ல. நல்லா கொட்டிகிட்டாச்சுல. நடையக் கட்டு”

வழக்கமாக நான் ஓட்ட கார்த்திக் பின்னிருக்கையில் கதை வளர்த்துக் கொண்டே வருவான். நான் அமைதியை விரும்பும் இரவுகளில் மட்டும் அவனை ஓட்டச் சொல்லிவிடுவேன். அன்றிரவு அவன் பேச வேண்டாம் என்று தோன்றியது.

No comments:

Post a Comment