Monday, October 5, 2015

எங்கே போகிற தெந்தன் தேசம்!

பெற்றத் தாய் மீது கூட, தன் உத்தியோக அந்தஸ்தின் நிழல் பட்டுவிடக்கூடாது என்று மிக கவனிப்போடும் கண்ணியத்தோடும் இருந்த காமராஜர் வாழ்ந்த அதே மண்ணில் தான் இன்றைய அரசியலும் இயங்குகிறது என்று நினைக்கும் போது, இரண்டு விதமானச் சந்தேகங்களால் துளைக்கப் படுகிறேன். 

ஒன்று, காமராஜர் அப்படித் தான் வாழ்ந்தாரா என்ற சந்தேகம். 

மற்றொன்று, கொஞ்சம் பெரிது, காமராஜர் என்று ஒருவர் உண்மையிலே இருந்திருக்க முடியாமா என்ற சந்தேகம் அது. 

கொலைப் பழி சுமத்தப்பட்ட, உண்மையில் கொலை செய்த ஒரு குற்றவாளி, வரிசையாகப் பொய்ச் சாட்சிகளின் உதவியோடு விடுதலை ஆகும் போது, அந்த வழக்கை வேடிக்கை பார்க்க வந்தவர்களுக்கு, நிரபராதி (வழக்கு தொடுத்தவன் என வைத்துக் கொள்வோம்) மீது ஒரு வித கேவலமானச் சந்தேகம் எழும் பாருங்கள், அப்படிப்பட்டச் சந்தேகங்கள் இவை.

நியாய விலைக் கடைத் தராசின் பொருள் வைக்கப்படும் தட்டிற்கடியில் அந்நியாயம் ஒட்டிக் கிடக்கிறது. 

மத்திய அரசு, மாநில அரசு, ஆளுங்கட்சி, எதிர்கட்சியென தகுதிக்கேற்ற ஊழல் நடந்து கொண்டே தான் இருக்கிறது. 

பிறப்புச் சான்றிதழ் தொடங்கி இறப்புச் சான்றிதழ் வரை இன்னமும் பணத்தாள் கொண்டே தயார் செய்யப்படுகிறது. பத்திலும் இருபதிலும் ஆரம்பித்து இன்று ஆயிரங்களையும் லட்சங்களையும் கடந்து கோடிகள் வரை தொட்டு நிற்கிறது இந்த லஞ்சப் புழக்கம். 

பேசாமல், நடைமுறையில் இயங்குவதாகச் சொல்லப்படும் எல்லாத் துறைகளையும் இழுத்து மூடிவிட்டு, லஞ்சத்துறை, ஊழல்துறை என இரண்டே துறைகள் கொண்டு செயல்படலாம். 

இதையெல்லாம் மீறி, “இந்தியா மிளிர்கிறது” எனப் படிக்கும் சுவரொட்டிகளை எங்கேனும் காண நேர்ந்தால், 'குபுக்க்'கென்று சிரிப்பு வந்துவிடுகிறது.

No comments:

Post a Comment