Friday, March 7, 2014

நான் கண்ட முதல் பெண்ணுக்கு

வீட்டிற்கு வருபவர்களிடம்,
எனது
சிறு வயது புகைப்படங்கள் காட்டி
நீ மகிழும் போதெல்லாம்,
உனது சிறு வயதிற்கே
நீ காலம் பெயர்க்கப்படுகிறாய்!

o0o

உன் மகனை யாரும்
திட்டிவிடக்கூடாது என்பதில்
ரொம்பவும் விழிப்புடன் நீ..
அப்பாவிற்கு முந்தி
திட்டுவது போல
நடித்தாவது விடுகிறாய்!

o0o

என் கையை பிடித்து,
நீ பழக்கிவிட்ட எழுத்துக்களை,
நானும்
எப்படி எப்படியோ
கிறுக்கிப் பார்க்கிறேன்..
கவிதையாகவே முடிகிறது!!

o0o

எனது முகபாவங்களை,
இவ்வளவு ஆழமாக
படிக்கும் உன்னிடம்,
ஒவ்வொரு முறையும்
தோற்றுப் போகிறேன்..
உனை
ஏமாற்ற நினைத்து..!

o0o

நான் இரவில்
தாமதமாக வரும் போதெல்லாம்..
உனக்கு தூக்கமும்
தாமதமாகவே வருகிறது!

o0o

என் கண்ணீரில் கலந்திருக்கும்
பொய்மையை பிரித்தெடுக்கத் தெரிந்தும்..
ஒரு நாளும்
பழிக்காத தாய்மை!

o0o

விளையாடிய களைப்பில்,
வீடு வந்து,
நான் உறங்கிட,
என் உடல் முழுவதிலும்
தேடுதல் வேட்டையில்
நீ இறங்குகிறாய்..
நானே உணராத
காயங்களைப் பிடிக்க!

o0o

நான் உறங்கிய பின்
உறங்கி விட்டு
எனக்கு முன்னமே
விழித்தும் விடும் நீ
எப்படித்தான்
நாகூசாமல் சொல்கிறாயோ..
“என் மகன்
உழைக்கிறான்!” என்று

o0o

எனை சுமந்த
உன் இடுப்பெலும்பு
தேயத் தொடங்கிற்றுவென
நம் மருத்துவர் சொல்கிறார்.
அது சரி..
உனக்கும் வயதாகிறதே!

o0o

நான் என்ன தவம்
செய்தே னென
எனக்கே தெரியவில்லை..
எனை
தவமிருந்து பெற்றாளாம்!

No comments:

Post a Comment