Thursday, March 27, 2014

தி ஷேக்ஸ்பியர் & சைகாலஜி 2

மனோதத்துவம் பற்றிய குறிப்புகளில் சுயமரியாதை குறைவாக உள்ளவர்கள், தாழ்வு மனப்பான்மையால் பாதிக்கப் பட்டவர்கள் பற்றிப் படித்திருக்கிறேன். சமூகத்தில் தங்களை வெளிப்படுத்திக்கொள்ள அவர்கள் எவ்வளவு சிரமப்படுகிறார்கள், அதற்கான காரணங்கள், அவற்றை வெல்லும் யுத்திகள் எனப் பலவும் விவாதிக்கப்பட்டிருக்கும். அந்த மனிதரை பார்க்கும் ஒவ்வொரு முறையும் நான் படித்தறிந்தச் சில தகவல்கள் மீண்டும் ஒரு முறை எனக்குப் பாடம் எடுத்துவிட்டுப் போகும். அன்றிரவும் என் உள்ளங்கையில் நான் சுமந்து உதடு நனைத்துக் கொண்டிருந்த காஃபி வழியாக எனக்குள் மெல்ல இறங்கிக் கொண்டிருந்தன சில உளவியல் உண்மைகள்.

நல்ல ஹான்ட்ஸாமாக இருக்கிறார்.

ஏறத்தாழ இரண்டு வருடங்களாக நானே இவரை தினமும் பார்க்கிறேன் என்றால் ஓரளவுக்கு நிரந்தரமாகிவிட்ட ஒரு வேலை தான்.

ஆலென் சொலி, வான் ஹூஸைன் என்று அணிவதெல்லாம் அந்நிய நாட்டு விலை உயரந்தத் தயாரிப்புகள் தான்.

நான் பார்க்க ஒரு நாள் ஒரு புது ஹோன்டா ஆக்டிவாவில் ரே பான் சகிதமாய் வந்து இறங்கியவருக்கு பணம் ஒரு பெரிய பிரச்சனையாக இருக்கும் எனவும் தெரியவில்லை.

குடும்பத்தில் பிரச்சனை, காதல் கீதல் னு ஏதாவதிருக்குமோ.

வாய்ப்பிருக்கிறதென்றாலும், அப்படி ஒரு பாதிப்புக்குள்ளான ஒரு நபர் எப்படி தனிமையை மட்டும் சந்தோஷமாக கொண்டாடிவிட முடியும். காஃபி தீரத் தீர குழப்பம் மட்டும் கூடக் கொண்டே போனது.
அவசியமான ஒரு எண்ண ஓட்டத்தையும், பேரவசியமான ஒரு மௌனத்தையும் கலைப்பதற்கென்றே மனிதனால் உருவாக்கப்பட்ட தேவையில்லாச் சப்தங்களில் கைக்கடிகார அலாரமும் அடக்கம் என்பதை புரிந்துக் கொள்ள உதவிய தருணமது.

ஒரு மாதத்தில் எத்தனை நாட்கள் பத்து மணிக்கு மேல் அலுவலகத்திலேயே குப்பை கொட்டுகிறோம் என்பதை அறிய விரும்பி என் காஸியோ எடிஃபிஸில் நான் பதிந்திருந்த அலாரம் கிசு கிசுத்தது. கூட்டிக் கழித்துப் பார்த்ததில் அது அம்மாதத்தின் பதினெட்டாவது மகத்தான நாள் என்பது புலப்பட்டது.
பத்து மணி. வேலை ஒப்பந்தந்தில் அலுவலக நேரமாகக் குறிப்படப்பட்டிருந்த 9am – 6pm கடந்த இருநூற்று நாற்பதாவது நிமிடத்தில் நான் இங்கு என்ன செய்துக் கொண்டிருக்கிறேன். கடந்த ஒன்றரை வருடத்தில், இந்த ஒரு கேள்விக்கு மட்டும் மனசாட்சி ஏற்றுக்கொள்ளும்படியான ஒரு பதிலை என்னால் கொடுக்க முடிந்ததில்லை.

இந்த அலுவலகத்தைப் பொருத்தமட்டில் பாதிக்கும் மேல் இப்படியான ஒரு குற்றவுணர்ச்சிக்கு ஆளானவர்களே. அந்தப் பட்டியலில் அந்த மனிதரின் பெயரும் வாசிக்கப்படும் என்பதை எப்படிப் புரிந்துக் கொள்வதெனத் தெரியாமல் திகைத்துக் கொண்டிருக்க, தூரத்தில் அவர் மீண்டும் லிஃப்டில் நுழைவதை பார்க்க முடிந்தது. அவரைத் தொடர்ந்து ஐந்தாறு நபர்களும். பாவம் என்று தோன்றியது.

பாலித்தீனை அழிக்கப் பிறந்ததாகச் சொல்லப்பட்ட ஒரு பேப்பர் கப்பின் உட்புறத்தில் மெழுகு போன்று ஏதோவொன்று கரைந்துக் கொண்டிருப்பதை கவனித்ததும் உயிர் மேல் உள்ள ஆசையில் என்னை நானே தடுத்துக் கொண்டேன். எப்பொழுதும் போல, செராமிக் கப் ஒன்றை இந்த வாரமாவது வாங்கிவிட வேண்டும் என்று நினைத்துக் கொண்டு அடுத்த லிஃப்டுக்காக காத்திருக்கத் தொடங்கினேன். கெல்லி கால் வேற இருந்தது அன்று.

No comments:

Post a Comment