அலுவலகத்தில் ஒரு நபரை அநேக தினங்களிலும் சந்திக்கின்றேன். சில சமயங்களில் லிஃப்டில், சில சமயங்களில் பேன்டிரியில். சில சமயங்களில் காஃபெடெரியாவின் கார்னர் இருக்கைகளில், இன்னும் சில சமயங்களில் நான் பணியமர்த்தப்பட்டிருக்கும் இதே ஒன்பதாவது தளத்தில். யார் அவர்? பெயர் என்ன? ஒரு விவரமும் தெரியாது.
முப்பதிலிருந்து முப்பத்தைந்து வயதிற்குள் இருக்கும்.
நல்ல நிறம்.
தவறாமல் எண்ணை குடித்து வளர்ந்ததற்கான அத்தனை அம்சங்களோடும் அசைவை மறந்து படர்ந்திருக்கும் கருகரு முடி.
நன்கு தேய்க்கப்பட்ட முழுக்கைச் சட்டை.
எப்போதாவது நிமிர்ந்த தலை.
எப்போதுமே ஒரு சங்கடப் பார்வை.
புன்னகையா..? அப்படியென்றால்???
நான் தினம் கடந்துச் செல்லும் ஏதோவொரு பாதையில் இந்தப் புதிர் மனிதரின் பயணம் தொடர்ந்துக் கொண்டே இருக்கிறது. ஒரு சில நேரங்களில், குறிப்பாக லிஃப்ட் சந்திப்புகளின் போது, பத்து பதினைந்து நபர்களின் பார்வைகளை தவிர்க்கப் போராடும் அந்தக் குனிந்தத் தலையும் குறுகிய உருவமும் என் விழிவழிப் புகுந்து இதயத்தின் மௌனத்தோடு பேச முயற்ச்சித்திருக்கிறது.
ஓரிரு வாரங்களுக்கு முன்னொரு வெள்ளி இரவில், பணி அழுத்தங்கள் தன் இஷ்டத்திற்கு மேய்ந்து விட்டிருந்த என் உடலுக்கு கொஞ்சம் காஃபைனும், ஆக்ஸிஜனும் தேவைப்பட்டதில் முதல் தளத்தில் இருக்கும் பேன்டிரிக்குச் செல்வதென முடிவு செய்து லிஃப்டில் ஏறினேன். நான் தடுத்து நிறுத்தியது, கிட்டத்தட்ட கதவுகள் மூடப்பட்டுவிட்ட நிலையில், கீழிறங்க ஏற்கனவே தன்னை தயார்ப்படுத்திக் கொண்ட ஒரு லிஃப்ட் மட்டுமில்லை என்பது அப்போது தெரியவில்லை.
மூடிக்கொண்டிருந்த அந்தக் கதவுகளுக்குப் பின்னால் அவசர அவசரமாய் தன் மீது வெறுமையை வாரிப்போட்டு தன்னைப் புதைத்துக் கொள்ள முயற்சித்துக் கொண்டிருந்தது ஒரு புன்னகை. உள்ளே அதே நபர். தனியாய். அந்தக் கணத்திற்கு முன்பு வரை சந்தோஷமாகவும்.
சுற்றி யாருமேயில்லாத அந்தத் தனிமையை அதுவரையில் அவர் அனுபவித்துக் கொண்டிருந்திருக்க வேண்டும். யாருடைய பார்வையையும் தவிர்க்க வேண்டிய அவசியமில்லாத ஒரு நிம்மதியை என்னால் அவர் இழந்திருக்கலாம் என்று தோன்றியது. அநேகமாக அந்த மனிதர், இப்படிப்பட்ட தனித்த லிஃப்ட் பயணங்களில் மட்டுமே நம் எல்லோரையும் போல இயல்பாக, சந்தோஷமாக பயணிப்பார் போல. யார் கண்டார், அப்படியான முதல் வாய்ப்பையும், நிகழ்வதற்கு முந்தைய கணத்தில், சரியாய், நான் பறித்துவிட்டேனோ என்னவோ.
பதினைந்து முதல் இருபது நபர்கள் வரை அனாயாசமாகச் சுமக்கும் இடவசதி கொண்ட அந்த லிஃப்டில் அன்றிரவு நான் நிற்பதற்கே இடமில்லாதது போல உணர்ந்தேன். எனக்கே அப்படியென்றால், அவர் நிலைமை? என்னால் புரிந்துக் கொள்ள முடிந்தது.
No comments:
Post a Comment