Friday, July 12, 2013

கடிந்து கொல் காதலே – II

ரணங்களுக்கு மத்தியில்
பிறந்திட்ட பிணம் ஒன்று,
வார்த்தைக் கழுகுகளுக்கு மெல்ல
இரையாகிக் கொண்டிருக்கிறது!

அலகுகள் கொத்திய மிச்சமாய்
ஒரு இதயம்,
அழுகிய நிலையில்
அழுது புரள்கிறது!

காற்று வெளியேற்றப்பட்டதால்,
உடலின் மூலை முடுக்குகளில்,
வெற்றிடங்கள் நிரப்பப்பட்டு,
அவ்வழு குரல் எதிரொலிக்கப்பட்டு வருகிறது!

நால்வறைகள் கொண்ட சதைப்பிண்டம்
நார் நாராய்க் கிழிக்கப்பட்டப் பிறகும்,
ஒரு அறையின்
ஒரேயொரு பகுதி மட்டும்
சேதம் அதிகமில்லாமல்
இன்னமும் பிழைக்கிறது!

உறுதியாக இருப்பதால் அதை
கல் என்றுச் சாடுகிறார்கள்!
ஹும்ம்.. கல்லாக இருந்திருந்தால்
சுவர்கள் எதற்கு
இரத்தம் சிந்தப் போகின்றன?

உள்ளே பாதுகாக்கப்படும் பொக்கிஷத்திற்கு,
வெளியில் நடக்கும் தியாகம்
அந்த ரணம்!

அது புரியாமல்,
மரணத்தின் அறிமுகத்திற்கு
ஏற்பாடு செய்கிறது
எதிர் மனம்!

அவன் செய்த பாவத்திற்குப்
பிறந்த பறவைகள்,
இவற்றைச் சொல்லிக் குற்றமில்லை!

அழுதலும், அழுகுதலும்,
இறுதியில் அழிதலும்,
நெற்றியில் எழுதப்பட்ட விதி போலும்!

“எதைக் கொண்டு வந்தாய்
எடுத்துக் கொண்டு போவதற்கு?”
கண்ணீர் கொண்டு வந்ததாலோ என்னவோ
அதோடே திரும்பிப் போகிறான்!!

No comments:

Post a Comment