Wednesday, May 14, 2014

குற்றவுணர்வுகள்

ஒரு உயிரிழப்பிற்கானக் குற்றவுணர்ச்சியை ஒரு உயிர் இழந்துதான் கொடுக்கிறது என்றால் எவ்வித மறுப்புமின்றி ஒப்புக் கொள்வீர்கள், பிழைத்தும் கொடுக்கிறது என்றால்? ஒப்புக் கொள்வதை விடுங்கள். முதலில் இதை உணர்ந்திருக்கவே கொலைக்கு மிக அருகிலான ஒரு குற்றம் நடக்க நீங்கள் காரணமாகியிருக்க வேண்டும். என்ன புரியவில்லையா? கொலை ஒரு உயிரிழப்பிற்குக் காரணமாகும் போது அவ்வுயிர் மயிரிழையில் பிழைப்பதற்குக் காரணமாவது தான் கொலைக்கு மிக அருகிலானக் குற்றம். அந்தக் காரணப் புள்ளியில் ஒரு முறையேனும் ஒரு நொடியேனும் நின்ற அனுபவம் கண்டிப்பாக வேண்டும். இல்லையெனில் நான் சொல்வது உங்களுக்குப் புரிவது கஷ்டம் தான்.

என்ன இவன் கொலை குற்றமென்றெல்லாம் பேசுகிறான் ‘ஒருவேளை..’ என்றெல்லாம் யோசிக்க வேண்டாம். கத்தியால் குத்தியோ, மாடியிலிருந்து கீழே தள்ளிவிட்டுச் செய்தால் மட்டும்தான் கொலையென்று அர்த்தம் இல்லை. கொலைக்கு மிக அருகிலானக் குற்றங்கள் உங்கள் கண்முன் மிகச் சாதாரணமாக நடந்துக் கொண்டே தான் இருக்கின்றன. ஏன் நீங்களே கூட செய்திருப்பீர்கள்.

சாலையில் அடிபட்டு இரத்த வெள்ளத்தில் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கும் ஒருவனுக்கு உதவ மறுத்து விலகி நடப்பதும், தாறுமாறாக ஓடும் லாரியொன்றால் கடுப்பேறி அதைவிடவும் தாறுமாறான வேகத்தில் அதை இடப்பக்கமாய் ஓவர் டேக் செய்கிறேன் பேர்வழி காரின் இடது புறக் கண்ணாடியின் விளிம்பால் உரசி ரோட்டோரத்தில் ஒரு பெண்ணை தடுமாறச் செய்வதும் கொலைக்கு மிக அருகிலானக் குற்றங்கள் தாம்.

நம்மால் ஒரு உயிர் போய்விட்டதே என்ற உணர்வு எப்படி இருக்கும் என்று நமக்குத் தெரியாமல் இருக்கலாம். ஆனால், இன்னும் கொஞ்சம் போயிருந்தால் அந்த உயிர் நம்மால் போயிருக்குமே என்ற குற்றவுணர்வு நம்மில் பலபேருக்கு இருந்திருக்கும். ஆனால் பெரும்பாலானவர்கள் நமக்குச் சம்மந்தமில்லாதவை என அவற்றை நிராகரித்து விடுகிறோம். குற்றவுணர்ச்சிகளை நிராகரிப்பதை விடவும் மோசமான ஒரு செயலை இந்த மனித இனத்திற்கு எதிராக நம்மால் செய்ய முடியம் என்று தோன்றவில்லை. அதற்காக குற்றவுணர்சியுடனே வாழுங்கள் எனச் சொல்லவில்லை. புரியும் தவறு எண்ணி கொஞ்சம் வருந்துங்கள். நம்மால் திருப்பித் தர முடியாத ஒரு உயிருடன் விளையாடியதற்குக் கொஞ்சமாவது வெட்கப் படுங்கள். மற்றொருமுறை அது மாதிரியான விஷயங்கள் உங்களால் நடக்காது என உறுதிமொழி எடுங்கள். அது போதும்.

No comments:

Post a Comment