Wednesday, September 23, 2015

எங்கே போகிற தெந்தன் தேசம்!

#1
சுதந்திரத்திற்குப் பிறகான இந்தியாவில் வேலை வாய்ப்பின்மையின் விகிதம் கூடியிருப்பதற்குக் காரணம் எல்லா துறைகளிலும் பெண்கள் பணிபுரியத் தொடங்கியதே என்ற கேவலமானக் கருத்தை பத்தாம் வகுப்புப் பாடப் புத்தகத்தில் பதிவிட்டிருக்கிறது சட்டிஸ்கர் மாநில இடைநிலைக் கல்விக் குழு.

நாட்டின் மொத்த ஸ்டீல் உற்பத்தியில் முக்கியப் பங்களிக்கும் ஒரு மாநிலத்திலிருந்து இப்படி ஒரு துருப்பிடித்தக் கருத்து.

#2
நாட்டின் பிரபலமான பத்திரிக்கைக் குழுமங்களின் ஒன்றான குமுதம் தனது சமீபத்திய ரிப்போர்ட்டர் பதிப்பின் முதல் பக்கச் செய்தியாக எடுத்துக்கொண்டிருக்கும் விஷயமும் அதை கையாண்டிருக்கும் விதமும் மிகவும் கீழ்த்தரமாகத் தெரிகிறது. “லெகின்ஸ் ஆபாசம் – எல்லை மீறும் இளசுகள்” என்ற வரிகளோடு அட்டையில் அவர்கள் பயன்படுத்தியிருக்கும் புகைப்படம் பெரும் கண்டத்திற்குள்ளாகி வருகிறது.

பெண்ணுரிமை பெண்சுதந்திரம் மகளிர் மேம்பாடு என ஒரு பக்கம் வாய்கிழியப் பேசிக் குவிக்கும் பத்திரிக்கைத்துறையில் முக்கியப் பங்கு வகிக்கும் குமுதம் இப்படிச் செய்திருப்பது, என்னதான் முற்போக்குச் சிந்தனையாளர்களாக வெளியில் காட்டிக் கொண்டாலும், இன்னமும் ஓர் ஆணாதிக்கவாத, குறுகிய மனப்பான்மையுடையச் சமூகமாகத் தான் இயங்கிக் கொண்டிருக்கிறோம் என்பதையே உணர்த்துகிறது.

காற்று வீசும் ஏதோவொரு நொடிக்காக, எங்கோ தொலைவில் ஒளிந்துக் காத்திருந்த வக்கிரப் புத்திக்காரர்கள் கையில் இயங்கிய கேமிராக்கள் கண் சிமிட்டியதில் சிக்கியக் காட்சிகளை இப்படி வியாபாரம் செய்ய முயற்சி செய்திருக்கும் குமுதத்திற்கும், பிரபல நடிகைகள் குளிப்பதை ரகசிய வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பகிரும் அயோக்கியனுக்கும் எந்த வித்தியாசமும் இருப்பதாய் தெரியவில்லை. இதில் உச்சக்கட்ட வேதனை என்னவெனில், குமுதத்தின் இச்செயலை கண்டித்து சமூக வலைத்தளங்களில் உலவும் பதிவுகளின் பின்னூட்டங்களில் சில ஆண் (அ)சிங்கங்கள் வெட்கமே இல்லாமல் கர்ஜித்திருப்பது தான்.

காலம் காலமாக வயக்காட்டில் கோவணத்தோடு வேலை செய்யும் ஒரு விவசாயியை எந்தப் பத்திரிக்கையும் இப்படிக் கேள்வி கேட்டதாய் நினைவில் இல்லை. எந்தெந்த வேலைக்கு எந்தெந்த உடை யார் யாருக்குச் சௌகரியமோ, அதை அவர்கள் அணிந்துக் கொள்ளலாம். எல்லாவற்றிற்கும் மேலாக உடையென்பது உடுத்துபவரின் தனிப்பட்ட விருப்பம் சார்ந்தது. நீ இதை அணி, நீ அதை அணியாதே என்று சொல்ல இங்கு யாருக்கும் உரிமை கொடுக்கப்படவில்லை. பெண்களைக் கேள்வி கேட்கும் இத்தகைய கீழ்த்தரமான வாய்ப்பிற்காகக் காத்திருக்காமல் அவர்களை மதிக்கப் பழக வேண்டும் இச்சமுதாயம், குறிப்பாக ஆண்கள். என்னைப் பொருத்தவரையில் அதில் தான் உண்மையான ஆண்மையும் வாழ்கிறது.

பை தி வே, நீண்ட நாட்களாகவே தினசரி நாட்டு நடப்புகளில் என்னை பாதிக்கும் செய்திகளை, அதன் மீதான எனது விருப்பு வெறுப்புகளை எழுத வேண்டும் என்று எண்ணிக் கொண்டிருந்ததன் விளைவு தான் இந்த ‘எங்கே போகிற தெந்தன் தேசம்’. தொடர்ந்து எழுத முடியும் என்ற நம்பிக்கையில் தொடங்கியிருக்கிறேன்.

No comments:

Post a Comment