வளர வளர
இன்னும் அதிகமாய் என்னை
எதிர்பார்த்துக் காத்திருக்கிறாள்!
நான் வீடடைவதில் எவ்வளவு தாமதானாலும்,
அவ்வளவு தூக்கத்தையும்
தன் இமைகளுக்கு வெளியே
காத்திருக்கச் செய்து விடுகிறாள்!
சில நாட்களில்,
கை கால்கள் அசைவுகளற்று,
வாசலை நோக்கியே விழிகள் வெறித்தபடி,
கிட்டத்தட்ட..
ஒரு சிலை போலவே
மௌனமாய் அமர்ந்திருப்பாள்!
நான் எப்படியும் வந்துவிடுவேனென
அவளுக்குத் தெரியும்!
வாசற்கதவுக்கு வெளியில் இருக்கும்
இரும்புக் கேட்டின் தாளை,
நான் திறக்கும்
கிரீச் சத்தம் போதும்..
அவள் உணர்ச்சிகள்
ஒவ்வொன்றாய் மீண்டு எழும்!
கதவு விலக விலக,
என்னுருவம் தெரிய தெரிய,
கொஞ்சம் கொஞ்சமாய் அவளது உற்சாகங்கள்
உயிர்பெறுவதை பலமுறை பார்த்திருக்கிறேன்!
திறந்த இமைகளின் நடுவில்
அதுவரை உறைந்திருந்த அவளது பார்வை
என்னை மொத்தமாய் வேண்டி உருகும்!
அவளது கைகளும்..
அவளது கால்களும்..
அவற்றின் ஒவ்வொரு விரல்களுமே
அவளைத் தூக்கச் சொல்லி கொஞ்சி அழைக்கும்!
என் வாழ்வின் மூன்றாவது தாய்!
இரண்டாவது தேவதை!!
முதல் மகள்!!!
இந்த உடலென்ன உடல்,
என் உயிரையே கொடுத்திடுவேன் அவள் கேட்டால்!!
No comments:
Post a Comment